என் ஆத்மா இன்னும் காத்துக் கிடக்கின்றது....!
இந்த எலும்புகளில்
எது எனதாக இருக்கும்...
எந்தத் தழிம்புகளில் வைத்து
என்னை அடையாளப்படுத்தப் போகிறீர்கள்.
எதற்காக
இந்தத் தேடல்கள்?
என் மண்டை ஓட்டில் விழுந்த
அடிகளின் எண்ணிக்கைகளையா
கணக்கெடுக்கப்போகிறீர்கள்?
என் சதைகளை
சிதைத்தவனிடமா
சாட்சியம் கோருகிறீர்கள்.
அதோ
அங்கே நிசப்தமாக
மெளனித்திருக்கின்றதே
அந்த ஏரியைக் கேளுங்கள் உண்மைகளை ஒப்புவிக்கும்.
செம்மணிச்
சுடலைக்கு மேலே
குந்தியிருந்து கூவுகின்றதே
அந்த குருவியைக் கேளுங்கள்
இருளில் நடந்தேறிய கோரங்களை சாட்சி பகிரும்.
என்
பெண்மையை எச்சிப்படுத்திய பின்
காடைக் கூட்டங்களால்
தொண்டைக்குழி அறுக்கப்பட்டது
அந்த வலிகளையும் மீறி
தண்ணீருக்காய் நான் அலறியபோது
என் முகத்திலே
சிறுநீர் கொண்டு நனைத்துச் சிரித்தார்களே
அதுவாது தெரியுமா உங்களுக்கு...!
மானத்தின்
வேரிலே விழைந்த இனத்தை
மண்ணுக்குள் விதைத்து விட்டார்களே
அதைப்பற்றியா விசாரிக்கப் போகிறீர்கள்...!
ஒரு சோமவன்சவும்
சில கேடிகளும் மட்டும் தான்
வெளிச்சத்திலே
தலைமை இன்னும் தலைமறைவாகத்தான் இருக்கின்றது ...?
அம்பு மட்டும் தான்
அகப்பட்டிருக்கின்றது
இயக்கியவன் இன்னும் ஒளிந்துதான் இருக்கிறான்.
வெறும் எலும்புகள்
என்று இந்த எச்சங்களை
தயவு செய்து எரித்து விடாதீர்கள்
டினோசெளரியாக்களைப்போல இவைகளும்
பல சேதி சொல்லும்
வரும்காலத்திற்கு
வாருங்கள் இங்கே
நான்
விழித்திருக்கின்றேன் பேசுவதற்காய்.
உடல் மட்டும் தானே அழிக்கப்பட்டது
என் ஆத்மா இன்னும் காத்திருக்கிறது
உங்களோடு பேசுவதற்காய்...!