எட்டாவது ஸ்வரமே எங்கே சென்றாய்......?
சிரித்தமுகம்
செவ்வகக் கண்ணாடி
நட்சத்திர மூக்குத்தி
வட்டக் குங்குமம்
பட்டுப்புடவை
மீளாத்துயில் கொண்ட
சுப்ரபாதத்தை
திருப்பள்ளியெழுப்ப
யாரேனும் பாடுங்களேன்...
கர்நாடக இசையின்
கற்பகதருவே
ஐ.நா. வரை சென்று
இசைத்தது போதாதென்றா...
விண்சபை நோக்கிப் பயணமானாய்!
அம்மா, இனி
உண்மையில் காற்றில்தானா
உன் கீதம் வரும்?
கல்லையும்
கரைத்த இசைவாணி
உன்னைக் கனல் கரைக்க
பாவிமனம் கதறிடுதே...
இன்று நீ
அமிர்தவர்ஷிணி பாடாமலேயே...
கண்ணீர்மழை !
எத்தனையோ
இரங்கல் பா
பாடிய முகாரியின்
முகத்தைப் பார்த்தாயா...
இன்று இருண்டுபோய் !
உன் பூபாளம் கேட்டே
தினம் எழும் பரிதிக்கு
நாளை
என்ன பதில் சொல்ல ?
உன் நீலாம்பரிக்கு
நின்றேங்கும் அம்புலிக்கு
ஆறுதல் யார் செய்ய ?
எட்டாவது ஸ்வரமே......
எங்கே சென்றாய் ?
தீராத சங்கீத மீரா
நீ மீண்டும் வாராது போனாயே
வான்நோக்கி ஆறாது
உன் இழப்பின்
வடு காயாது
என் கண்ணீரில்
கவிதை வரி போதாது......
- நெப்போலியன், சிங்கப்பூர்([email protected])
இவரது முந்தைய படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.












Click it and Unblock the Notifications