மழைக்குப் பிறகு ஒரு மாலையில்...
![]() மேகச் சகதியினால் மலினமுற்ற வான மகள் தேகம் கழுவி விட்ட தண்ணீர் மழையாகி முகில்கள் கரைந்து இந்த மண்ணில் விழுந்து விட மெழுகிய பின் கோலமிடா மூளித் தரை போல விண்வெளியே நிர்மலமாய் வெளிர் நீலத் தனித்துவமாய், எல்லையற்ற ஏகமதாய் எழில் உருவப் பாழ் வெளியாய், புத்தொளியில் பூத்திருக்க, பெய்த மழை கீழிறங்கி பூதலத்தின் தூசகற்றி, பூத்த செடி காய்த்த மரம் மலை மடுக்கள் நிலம் தருக்கள் மாசகற்றித் தேசளித்து, சலசலத்துத் தெருவோரம் தண்ணீராய்த் தேங்கி நிற்கும், தண்ணென்ற காற்றோடு மண் எழுப்பும் மென்வாசம், கண்ணும் கருத்தும் இன்பக் காட்சியிலே வட்டமிடும், புற்றிலிருந்து ஈசல் பெருங்கூட்டமாய் பறக்கும், சிற்றாரின் கும்பல் சிரிப்பொலியை அங்கெழுப்பும், தெருவே கலகலக்கத் தொடங்கும் விளையாட்டு, அறியாச் சிறுவர்களின் ஆசைப் பெருங்கூத்து, காகிதத்தில் கப்பல் விடல், கரம் கீற்றிக் கால் நொண்டி பாண்டி விளையாடல், பம்பரத்தைச் சுற்றி விடல், மண் குவித்து மலை சமைத்து, மலை மீது சாமி வைத்து சின்னப் படிகள் பல செங்குத்தாய் அங்கமைத்து பசும்புல் தழை சொருகிப், பக்கத்தில் நந்தவனம் இசைவாய்த் திருக்குளம், ஈர மண்ணால் தானமைத்து, உச்சியிலே சாமிக்கு ஊதலிலே நாதஸ்வரம், உற்சாகப் பாலகரின் உற்சவங்கள், ஊர்வலங்கள், சேய்க் குலத்தின் முதன் லயிப்பில் தெய்வீக மெய் காட்சி மெய் மறந்த ஓர் இருப்பு மாசற்ற நல் அழகு பெய்த மழைக்குப் பின் பூலோகம் சுவர்க்கமெனின், செய்த தவம் உருகித் தரை நோக்கி வீழ்ந்ததுவோ? (இந்தக் கவிதையை எழுதிய சென்னை சிட்லபாக்கத்தைச் சேர்ந்த பூரணி அம்மாளுக்கு இப்போது வயது 92. 1926ல் எழுதத்தொடங்கி இன்னும் சிறுகதைகள், கவிதைகள் எழுதுகிறார். கை நடுங்காமல், வார்த்தை குழறாமல் மிகத் தெளிவாக எழுதும்பூரணி, பெண் கல்விக்காக 1938ம் ஆண்டு முதல் போராடி வந்திருக்கிறார். சுதந்திரப் போராட்ட காலத்தில் கிராமப் புற பெண்களிடம் விடுதலை குறித்த விழிப்புணர்ச்சியை, திருமணப் பாடல்கள்,நாட்டுப்புறப் பாடல்கள் வாயிலாக ஊட்டியுள்ளார். தமிழ் தவிர இந்தியிலும் புலமை பெற்ற பூரணி, இந்தியில் வெளியான பலபடைப்புகளை தமிழில் மொழி பெயர்த்துள்ளார்)
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected] படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும். |













Click it and Unblock the Notifications