பிரிதல்-1-ரிஷி சேது
ஞாபகத்தின் கடைசி செல்லிலிருந்து
விலகி விடவில்லை அந்த
பிரிவின் கடைசி சில நொடிகள்
நீயும் நானும் மற்றும்
காலி செய்யப்பட்ட கோப்பைகளும் ...
நீ அவஸ்தையாய்
கை பிசைந்து நின்றிருந்தாய்
நான் நகம் கடித்துக் கொண்டிருந்தேன்
மென் காற்றும் சிறு குளிரும்
இன்னும் சிலவும் நம்மையும்
நம் மெளனத்தையும்
மேலும் இறுக்கிற்று.
நீ கேட்க நினைத்ததை நானும்
நான் கேட்க நினைத்ததை நீயும்
சற்றேரக்குறைய தவிர்த்திருந்தோம்
அது நிகழாமலும் போயிற்று
சும்மா இருத்தல் என்பது எத்தனை
பேரவஸ்தை
அந்த நாளின் இறுதிக் கணம் வரை
வந்தாயிற்று எப்படியும்
நாம் சொல்லிக் கொள்ளத்தான் வேண்டும்.
உன் கண்கள் கலங்கியிருந்தன
என்னைப் பார்ப்பதை தவிர்த்தாய்
ஏதேதோ சர்தாரி கடி ஜோக் எல்லாம்
சொல்லிக் கொண்டிருந்தாய் நீ ஏதோ
உளருவதாய்ப் பட்டது எனக்கு.
ஆயிற்று நான் ஒரு முடிவுக்கு வந்தேன்
எப்படியும் சொல்லி விட வேண்டும்
போய் வா குட்பை என்றேன்
நீ நகர்ந்து போனாய், நான் -
நீ புள்ளியாய் காட்சி எல்லைக்குட்பட்டவரை
பார்த்து விட்டு
சிரித்துக் கொண்டேன்
இதுவும் மாறும் ...












Click it and Unblock the Notifications