அமுத நீர் வற்றிடும் காலமும் வந்தே விட்டது...! #WorldWaterDay
நிழலின் அருமை வெயிலில் தெரியும்!
நீரின் அருமை வறட்சியில் தெரியும்!
நீரின் அருமை உலகறியும் - ஆனால்
நீர் நிலைகளை பாதுகாப்பதில்லை நம் தேசம்!
அழகாய் ஆயிரமாயிரம் உயிர்களை வாழவைத்த
அருமை ஆறுகள் இன்று தடத்தில் மட்டும்!
ஆங்காங்கே அரசர்கள் அமைத்த ஏரிகளும்
ஆங்காங்கே இயற்கையாய் அமைந்த ஏரிகளும்
இருந்த இடம் தெரியாமல் இன்று
குப்பை மேடுகளாயும், குடியிருப்புகளாகவும்!
கோவில் குளங்களிலும் இன்று சாக்கடை கலப்பு..
கிணற்றில் வாளி கொண்டு இறைத்த காலம்
கிணற்றில் விழுந்த பொருட்களை பாதாள கொலுசு கொண்டு
எடுத்த காலங்கள் இன்று நினைவில் மட்டும்!
நீருக்காக தோண்டிய பெருந்துளைகள் இன்று
காவு வாங்குவதோ பிஞ்சு உயிர்களை!
நீரின் அருமையும் தெரியவில்லை
உயிர்களின் மதிப்பும் புரியவில்லை
வளர்ச்சி என்னும் மாய நதியில்
தொழில்நுட்ப படகு செலுத்தி
வேகவேகமாய் பயணிக்கிறோம்!
சற்று தொலைவில் நமக்கு காத்திருப்பது நம்மை
பாதாளம் கொண்டு செல்லும் நீர்வீழ்ச்சி என்றறியாமல்!
ஹைடிரோகார்பனை தின்றிட முடியாது!
நியூட்ரினோவை நாம் குடித்திடவும் இயலாது!
அன்றாடத்தேவைக்கு முக்கியத்துவம் தேவை!
அதில் முதலிடம் வகிக்குது தண்ணீரே!
எல்லா உயிர்களுக்கும் அதில் உரிமை இருக்குது!
இருக்கும் நீர் வளத்தையாவது பாதுகாப்போம்!
மழை கிடைத்திட வகை செய்யும் மரங்களை பேணிடுவோம்!
பூமித்தாய் கொடையாய் பொழியும் தண்ணீரையும்
நம்மால் இயன்ற வகையினில் ஒவ்வொருவரும்
பொன்னென நினைத்து காத்திட வேண்டும்!
அமுத நீர் வற்றிடும் காலமும் வந்தே விட்டது...
அவளும் செழுமையாய் விளங்கிய காலங்கள்
தாய்ப்பாலை தண்ணீராய் உயிர்கள் காக்கவே பொழிந்திட்டாள்!
கொழுத்துப்போன மனித இனம் வரம் தந்த ஈசன் தலையிலே
கை வைத்த பஸ்மாசுரனாய் தாயின் பசுமை துகிலை உரித்திடுது!
தன்னினத்தை மட்டுமே காத்து, மற்றெந்த இனத்தையும்
கொன்றொழிக்கும் கொடுமையினை நாம் செய்தால்
நாளை இப்பூவுலகே பசுந்துகிலின்றி
பாலையாகும் நாளும் வெகு தொலைவில் இல்லை...
மரம் வளர்த்து மழை பெறுவோம்!
மழைநீர் காத்து குடிநீர் பெறுவோம்!
குடிநீர் காத்து தலைமுறை காப்போம்!
தலைமுறை காத்தே மற்ற இனமும் காப்போம்!
- ஆகர்ஷிணி