உன் கரம் பதித்த லட்சம் விதை தளிர்த்து கோடி மரமாகும்- நகைச்சுவையின் ராஜபாட்டை... கவிதை
சென்னை: சனங்களின் கலைஞன் என கொண்டாடப்பட்ட சின்ன கலைவாணர் நடிகர் விவேக் நம்மிடமிருந்து திடுமென விடைபெற்றுவிட்டார். ஒட்டுமொத்த தமிழரையும் நடிகர் விவேக்கின் மரணம் பெருஞ்சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

நடிகர் விவேக் உடல் 78 குண்டுகள் முழங்க தமிழக காவல்துறையின் மரியாதையுடன் நேற்று சென்னையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. விவேக் மறைவு குறித்து நமது வாசகர் மாணிக்கம் விஜயபானு (டெக்சாஸ். ஆஸ்டின்) எழுதியுள்ள கவிதை:
பன்திறனை புன்னகையில்
வெள்ளந்தியாய் ஒளித்து வைத்தாய்
அதில்
பாமரனையும்
ஓரம் விதைத்து வைத்தாய்
நகைச்சுவையில் பகுத்தறிவு
பகுத்தறிவில் அறிவியல்
அறிவியலில் இயற்கை வளம்
அதில் வானுயர
சமூகநலம்
நீ பதித்தது வெறும்
விதை மட்டுமா
விளம்பரமற்ற கொடை
தன்னலம் கடந்த பொதுநலம்
ஆதாயம் கருதா பேருதவி
அகண்டு நீள்கிறது
ஆழமாய் நீ பதித்த
எண்ணிலடங்கா
நற்சுவடுகள்
நட்ட மரம் போதாதென்று
சிறகினமாய்
எச்சம் விதைக்க பறந்தாயோ
பெரும் காடு வளர்க்க
உன் கரம் பதித்த
லட்சம் விதை
தளிர்த்து
கோடி மரமாகும்
அதில் அசைந்தோடும்
சிறு காற்றும்
தொடர்ந்து பதியும்
உன் இருப்பை - நாள்தோறும்
வறண்ட நிலம் வான்நோக்கி
பிளந்து கிடக்கும்
அதில்
மழைவெள்ளம்
வழிந்து பசுமை நிரப்பும்
இங்கும்
கோடி வழிப்போக்கன்
துளிக் கண்ணீர்
உருண்டோடுது பெருவெள்ளமாய்
இருந்தும்
நீயற்ற வறட்சி மிச்சமே
நடுநெஞ்சில்
இந்த பிரிவும்
சோக நகையுணர்வு
பாத்திரம் ஆகாதோ
என்று
அடி நெஞ்சதிருது
இப்போதும்.
சென்று வருக சகோ..
சொல்லில் தீரவில்லை
என் சோகம்
உன் நினைவாய்
ஏப்ரல் 17 - "பசுமை பூமி" நாளாகட்டும்












Click it and Unblock the Notifications