என் முதல் கவிதை நீ!
Subscribe to Oneindia Tamil
ரோஜாக்கள் இல்லை
பரிசொன்றும் தரவில்லை
எங்கோ ஒளிந்து நின்று
ஓரக்கண்ணால் பேசினாய்..
வியர்த்துக்கொட்டி
வேற்றுக்கிரகத்துக்கு போனவனாய்
விக்கித்து நின்றேன்
இப்படித்தானே தொடங்கியது
நம் காதல் ஆர்ப்பாட்டம் ஏதுமில்லாமல்..?!!

கணக்குப்புத்தகத்தின்
கடைசி பக்கத்திலும்
அறிவியல் நோட்டின்
மிச்சமுள்ள பக்கங்களிலும்
எத்தனை முறை
உன் பெயரெழுதி கிறுக்கி
எனக்குள் நானே
சிலாகித்திருந்திருப்பேன்..!??
பேச்சுப்போட்டியில்
கட்டுரைப்போட்டியில்
பாட்டுப்போட்டியில்
திருக்குறள் ஒப்புவித்தலில்
நான் முதலிடம் வாங்கும் போதெல்லாம்
எனக்கே தெரியாமல்
நீ கைத்தட்டி ரசித்து
உன் தோழிகளுக்கு காட்டிக்கொடுத்து
மேடையிலென்னை
மெய்யுருக ரசிப்பாயே..!!
நானெழதிய
முதல் கவிதையே உன் பெயர் தான்..?!!
- ப.ஷேக் அலாவுதீன்
திருநெல்லிக்காவல்












Click it and Unblock the Notifications