ராத்திரியில் கரையும் காகம்
கலாச்சார மாத இதழ் - மார்ச் 2005
- பா.தேவேந்திர பூபதி

களவாடப்பட்டன.
சக்கரவாளக்கோட்டத்தின் வாயிலில்
காவலிருக்கும்
நாளங்காடி பூதங்களுக்கு
எருதுகளை காணிக்கையாக்குகிறான்
அந்த மேனி சிவந்த யவனன்.
அவனது நறவின் மிச்சம்
பூதங்களின் கண்களில் மிளிர்கிறது.
மணி பல்லவத் தீவிற்கு
வழிகேட்டு நுழைந்த
சமணத் துறவியை மறித்து
கேள்வி எழுப்பின பூதங்களிரண்டும்.
துறவி
காசாயத்தை உதறிக் காண்பிக்க
உதிர்ந்து விழுந்தன சொற்கள்
திசை யெங்கிலும்
அங்காடி வணிகர்கள்
சிதறியவற்றை சேகரித்த வேளையில்
அனைத்தும் உருமாறின முத்துக்களாய்.
பொற்கொல்லர்கள்
பரிசோதித்து பார்த்துக் கொண்டேயிருக்கிறார்கள்.
முத்துக்களுடன் சுழன்றுகொண்டிருந்தன
பிரபஞ்சங்கள் ஒட்டுமொத்தமாய்
கண்ணைப் பறிக்கும் ஒளி நிரப்பியது வெளியை.
அவரவருக்கான பூமியை
தேடிக்கொண்டிருக்கின்றனர்
ஒவ்வொருவரும்.
விடிவதற்கின்னும்
இரண்டு சாமங்களே உள்ளது.
வீதிக் காவலர்கள்
தீபங்களேந்தி
அங்காடித் தெருக்களை சுற்றி வருகின்றனர்.
மார்கழியின் பனியைப் போக்கி
மணவாளர்களுக்காய் பாடியபடியே
வந்து கொண்டிருக்கின்றது யுவதியர் கூட்டம்.
பாடலின் வரிகள்
அனைத்து பொருட்கள் மீதும்
பட்டு ஒலி எழுப்புகின்றன.
ஆனைச் சாத்தான்களின்
கீச்சரவம் அச்சந்தருவதாயிருக்கிறது.
சமணத் துறவிக்கு
பதிலளிக்க முடியாமல்
விழிபிதுங்கி நடுங்கி கொண்டிருக்கின்ற
நாளங்காடி பூதங்கள்
சக்கரவாளக் கோட்டத்தின்
வாயிலை மூட
இன்னும் சில விநாழிகைகளே எஞ்சியுள்ளன.
துறவியின் குரல் ஒலித்து கொண்டேயிருக்கின்றது.
கதவை மூடின நாளங்காடி பூதங்கள்
அடைத்த கதவின் இடுக்குகளில்
வழிந்து கொண்டிருக்கின்றது
கசிந்து கொண்டிருக்கும்
காமமென காலமும்.












Click it and Unblock the Notifications