ஒரு ஹெல்மெட் + சின்ன கேமரா.. கூடவே சேர்ந்த AI.. பெங்களூர் டிராபிக் பிரச்சனைக்கு வந்தாச்சு தீர்வு
பெங்களூர்: போக்குவரத்து விதிமீறலைக் கண்டறிய ஹெல்மெட் உடன் AI சாதனத்தை இணைத்த பெங்களூர் இளைஞரின் கண்டுபிடிப்பு இணையத்தில் டிரெண்டானது. இந்தக் கருவியைப் பயன்படுத்த ஆர்வம் காட்டியுள்ள பெங்களூர் போலீசார், இது குறித்து சம்பந்தப்பட்ட இளைஞரை அழைத்துப் பேசியுள்ளது. பெங்களூர் டிராபிக் பஞ்சாயத்தில் மிக பெரிய மாற்றம் வரப்போவதையே இது காட்டுகிறது.
ஏஐ வேகமாக வளர்ந்து வரும் நிலையில், பெங்களூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் உருவாக்கிய 'AI போக்குவரத்து காவலர்' கருவி பலரது கவனத்தையும் ஈர்த்தது. ஹெல்மெட்டில் கேமரா+ AIஐ சேர்த்து போக்குவரத்து விதிமீறல்களைக் கண்டறியும் வகையில் அவர் அந்த கருவியை உருவாக்கி இருந்தார்.

பெங்களூர் போலீஸ்
அவரது இந்தக் கண்டுபிடிப்பு இணையத்தில் டிரெண்டான நிலையில், பெங்களூர் போலீசாரும் இதில் ஆர்வம் காட்டியிருந்தனர். இது தொடர்பாக பங்கஜ் பெங்களூர் கூட்டுப் போக்குவரத்து ஆணையரைச் சந்தித்து விளக்கினார். தனது இந்த ஏஐ ஹெல்மெட் எப்படிச் செயல்படும். இதன் மூலம் எப்படிப் போக்குவரத்து விதிமீறல்கள் கண்டறியப்படும் என்பது குறித்து அவர் விளக்கினார். சுமார் 2 மணி நேரம் இது குறித்து ஆலோசித்ததாக பங்கஜ் தன்வார் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பு தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "இன்று பெங்களூர் கூட்டு போலீஸ் ஆணையரைச் சந்தித்தேன். அதிகாரிகளுடன் சுமார் இரண்டு மணி நேரம் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டேன். அவர்கள் மிகவும் வெளிப்படையாகவும், சிந்தனை மிக்கவராகவும் இருந்தனர். மேலும் எனது யோசனையை உண்மையாகவே பாராட்டினர். இந்த சந்திப்பு எனக்கு ஊக்கமளிப்பதாகவும், ஆக்கப்பூர்வமானதாகவும் அமைந்தது" என்று பதிவிட்டுள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு
சிலர் இதுபோல விதிமீறல்கள் குறித்து தகவல் தெரிவிப்பதை snitching culture என்று குறிப்பிட்டு, இது தவறான போக்கு என்று சாடி வருகின்றனர். இந்த விமர்சனங்களுக்கும் பங்கஜ் பதிலளித்தார். இது தொடர்பாக அவர், "தவறு செய்வோர் குறித்து தகவல் தெரிவிப்பதைத் தவறு என்று சொல்வது அபத்தமானது. பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யவே இந்த திட்டம். எனது திட்டத்தின் நோக்கமும் கூட சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வது தான்" என்றார்.
ஏன் முக்கியம்
பெங்களூர் போன்ற பெரிய நகரத்தில் விதிமீறல்களைக் கண்டறிவது இன்னும் ஒரு பிரச்சினையாகவே இருப்பதை அதிகாரிகள் ஒப்புக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார். அபராதம் விதிப்பதை விட "கண்காணிக்கப்படுகிறோம்" என்ற உணர்வை உருவாக்குவது தான் நீண்டகாலத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
போலீசாருடன் நடந்த மீட்டிங்கில் அவர்கள் சொன்ன ஒரு முக்கியமான கருத்தையும் பங்கஜ் பகிர்ந்தார். அதாவது தற்போது வழங்கப்படும் போக்குவரத்து சலான்களில் சுமார் 20 சதவீதம் மட்டுமே செலுத்தப்படுகின்றன என்றும் விதிமுறைகளுக்கு இணங்குவதை இதுவும் பெரிய பிரச்சனை ஆக்குகிறது என அவர் குறிப்பிட்டார்.
வியப்பு
பெங்களூர் நகரில் இப்போது எந்தளவுக்கு கேமரா மற்றும் ஏஐ கண்காணிப்பு அமைப்புகள் உள்ளன என்பதை போலீசார் தன்னிடம் விளக்கியதாகவும் இது தனக்கு வியப்பை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். பெங்களூரில் ஏற்கனவே வலிமையான ஏஐ உள்கட்டமைப்பு இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தற்போதைய தொழில்நுட்ப அமைப்பை போலீசார் மேலும் மேம்படுத்த முயல்வதாகவும் தெரிவித்தார்.
இப்போது ஒரு சின்ன சாதனத்தை உருவாக்கி, ஏஐ மாடல்களை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வருமானத்தை அதிகரிக்க இந்தக் கருவியை உருவாக்கவில்லை என்ற அவர், இதற்காகத் தனக்கு எந்தவொரு சன்மானமும் இல்லை என்பதையும் தெளிவுபடுத்தினார். அதேநேரம் இந்தக் கருவியை மேலும் மேம்படுத்தக் கூடுதல் நிதியுதவி தேவைப்படும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications