பீகார் தேர்தலை மொத்தமாக குழப்பும் AI? அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் மிக முக்கிய எச்சரிக்கை
பாட்னா: பீகார் மாநிலத்தில் இன்னும் சில வாரங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்குப் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பீகார் தேர்தலில் ஏஐ மூலம் உருவாக்கப்படும் கண்டெண்டுகள் பெரிய தலைவலியாக மாறியுள்ள நிலையில், இது குறித்துத் தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
பீகாரில் தேர்தல் நெருங்கும் நிலையில் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தக் காலத்தில் ஏஐ எல்லாப் பக்கமும் ஊடுருவி வரும் நிலையில், அதில் தேர்தலும் கூட தப்பவில்லை. பீகார் தேர்தலில் ஏஐ மூலம் உருவாக்கப்படும் கண்டெண்டுகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இது அங்குள்ள மக்களைக் குழப்பும் வகையிலேயே இருக்கிறது.

செயற்கை நுண்ணறிவு
அதில் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் கண்டெண்டுகளை தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்துவது குறித்து அரசியல் கட்சிகளுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. வாக்காளர்களைத் தவறாக வழிநடத்த இது பயன்படுத்தப்பட்டால், தேர்தல் பிரச்சாரத்தின் ஒருமைப்பாடு பாதிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
பீகார் சட்டசபைத் தேர்தலுக்குச் சில வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தேர்தல் ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பில், "அரசியல் தலைவர்கள் பேசுவது போல மிக துல்லியமாகச் செயற்கையாக ஏஐ மூலம் உருவாக்கப்படும் தகவல்கள், தேர்தல் களத்தின் சமநிலையைச் சீர்குலைக்கிறது. இதனால் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் நியாயமான மற்றும் சமமான வாய்ப்புகளை இல்லாமல் போகிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
அறிவுறுத்தல் வேண்டும்!
செயற்கையாக உருவாக்கப்பட்ட அல்லது AI மூலம் மாற்றியமைக்கப்பட்ட படங்கள், ஆடியோ அல்லது வீடியோக்களை தேர்தல் பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்தும்போது, அதில் 'AI மூலம் உருவாக்கப்பட்டது', 'டிஜிட்டல் முறையில் மேம்படுத்தப்பட்டது' போன்ற தெளிவான லேபிளை இட வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
எச்சரிக்கை தேவை
இந்த லேபிள் வீடியோவில் குறைந்தது 10 சதவீதம் இருக்கும்படி தெரிய வேண்டும். அல்லது ஆடியோவின் தொடக்கத்தில் அது வர வேண்டும். மேலும், அந்த கண்டெண்ட்டை உருவாக்கியவரின் பெயர் அதன் மெட்டா டேட்டாவிலோ அல்லது அதனுடன் இருக்கும் தலைப்புகளில் கட்டாயம் இருக்க வேண்டும். மேலும், ஒருவரின் அடையாளம், தோற்றம் அல்லது குரல் ஆகியவற்றைச் சட்டவிரோதமாகத் திரித்து, வாக்காளர்களைத் தவறாக வழிநடத்தும் வகையில் எந்தவொரு வீடியோ அல்லது ஆடியோவை வெளியிடக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கட்சியின் அதிகாரப்பூர்வப் பக்கங்களில் இதுபோன்ற மீறல்கள் கண்டறியப்பட்டால், மூன்று மணி நேரத்திற்குள் அவற்றை அகற்ற வேண்டும். மேலும், AI மூலம் உருவாக்கப்பட்ட அனைத்துப் பிரச்சார கண்டெண்டுகளையும் பதிவுகளையும் அனைத்து அரசியல் கட்சிகளும் பராமரிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
ஏன் முக்கியம்?
தகவல் தொழில்நுட்ப (IT) விதிகள் 2021-ஐ பின்பற்றி இத்தகைய கண்டெண்டுகளை வெளியிட வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் அமைப்பு அறிவுறுத்தியது. அதேநேரம் ஏஐ கண்டெண்டுகள் தொடர்பான வழிகாட்டுதல்களைத் தேர்தல் ஆணையம் வெளியிடுவது இது முதல் முறையல்ல. சமீப காலமாக 'டீப்ஃபேக்' பிரச்சார முறை அதிகரித்து வரும் சூழலில், இதற்கு முன்பும் கூட தேர்தல் ஆணையம் பல முறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications