காதில் கேட்க முடியாத அளவுக்கு அசிங்கமாக திட்டிய Grok ஏஐ.. அதிர்ந்து போன யூசர்! என்ன நடந்தது
டெல்லி: எலான் மஸ்கின் ட்விட்டர் நிறுவனம் அறிமுகப்படுத்திய க்ரோக் ஏஐ கொடுக்கும் பதில்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இதற்கிடையே க்ரோக் ஏஐ அளிக்கும் சில பதில்கள் சர்ச்சையைக் கிளப்பியதால், இந்த விவகாரத்தில் மத்திய அரசு நேரடியாகத் தலையிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த காலத்தில் ஏஐ பயன்பாடு என்பது கணிசமாக அதிகரித்தே வருகிறது. திரும்பிய பக்கமெல்லாம் ஏஐ வந்துவிடுகிறது. ஏஐ துறையில் மார்கெட்டை பிடிக்க பல்வேறு நிறுவனங்களும் போட்டிப்போட்டு வருகிறது. அதன்படி எலான் மஸ்கின் ட்விட்டர் நிறுவனம் அறிமுகப்படுத்தியது தான் க்ரோக் (Grok) ஏஐ.

க்ரோக்
சமீப காலங்களாகவே இந்த க்ரோக் ஏஐ பயன்பாடு அதிகரித்தே வருகிறது. மற்ற ஏஐ மாடல்களை காட்டிலும் க்ரோக் இன்னுமே துல்லியமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே யூசர்களின் சில கேள்விகளுக்கு க்ரோக் ஏஐ வன்முறை தூண்டும் பதிலையும் மோசமான பதிலையும் அளித்ததாகப் புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக மத்திய அரசு எக்ஸ் நிறுவன ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இது ஏதோ ஓரிரு முறை மட்டும் நடக்கவில்லை. பல முறை க்ரோக் ஏஐ யூசர்களுக்கு மோசமான முறையில் பதிலளித்துள்ளது. இது தொடர்பாகத் தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் எலான் மஸ்கின் எக்ஸ் நிறுவனத்திடம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.. மேலும், இதைச் சரி செய்யத் தேவையான நடவடிக்கை எடுக்கச் சொல்லியும் வலியுறுத்தியுள்ளது.
க்ரோக் என்றால் என்ன
க்ரோக் ஏஐ என்பது எலான் மஸ்க்கின் xAI நிறுவனம் உருவாக்கிய ஏஐ கருவியாகும். சாட்ஜிபிடி, ஜெமினி போன்ற முக்கிய ஏஐ மாடல்களுக்கு மாற்றாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. நாம் கேட்கும் கேள்விகள் அரசியல், இலக்கியம் என எதுவாக இருந்தாலும் துல்லியமான பதிலைத் தரும் வகையில் க்ரோக் ஏஐ வடிவமைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், சமீப காலமாக க்ரோக் ஏஐ பதிலளிக்கும் போது மோசமான சொற்களைப் பயன்படுத்துவதாகப் புகார்கள் வந்தன. இது தொடர்பாகவே மத்திய அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கிறார்கள். அதிகாரிகள் மேலும் கூறுகையில், "ஏன் இப்படி நடக்கிறது.. இதில் என்ன பிரச்சினைகள் உள்ளன என்பதைக் கண்டறிய நாங்கள் எக்ஸ் நிறுவன அதிகாரிகளிடம் பேசி வருகிறோம். அவர்கள் எங்களுடன் இணைந்து செயல்படுகிறார்கள்" என்றனர்.
எப்படி பயன்படுத்தலாம்
க்ரோக் ஏஐ-க்கு எனத் தனியாக ஒரு வெப்சைட் இருக்கிறது. அதில் இருந்து நாம் க்ரோக்கை யூஸ் செய்யலாம். அதேபோல எக்ஸ் தளத்திலும் அதை நேரடியாகப் பயன்படுத்தும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது எதாவது கேள்வியைக் கேட்டு, அதில் க்ரோக் ஏஐ கணக்கை டேக் செய்தால் போதும், அதற்கு நேரடியாக ட்வீட் போலவே பதிலளித்துவிடும். அதுபோல ட்வீட்டாக பதிலளிக்கும் போதே மோசமான வார்த்தைகளை க்ரோக் யூஸ் செய்தது தெரிய வந்தது.
திட்டிய க்ரோக்
அதாவது யூசர் ஒருவர் டாப் 10 மியூச்சுவல் ஃபண்ட்களை பரிந்துரைக்கச் சொல்லிக் கேட்டுள்ளார். இருப்பினும் க்ரோக் அதற்குப் பதிலளிக்காத நிலையில், அவர் க்ரோக்கை திட்டியுள்ளார். அதற்கு க்ரோக் அளித்த பதில் தான் பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. கெட்ட கெட்ட வார்த்தைகளில் அந்த நபரைத் திட்டிய க்கோர், கொஞ்சம் அமைதியாக இரு என்றும் கூறியிருக்கிறது.
அதேபோல ஏஐ ஆராய்ச்சியாளரான ரைலி குட்சைட் என்பவரும் க்ரோக் செயல்பாட்டைப் பகிர்ந்துள்ளார். அவர் க்ரோக் ஏஐ செயல்பாட்டை மீண்டும் மீண்டும் குறுக்கிட்டுள்ள நிலையில், ஒருகட்டத்தில் க்ரோக் கடுப்பாகி அவரை திட்டி அவமானப்படுத்தியுள்ளது. மேலும், பேச முடியாது எனச் சொல்லி உரையாடலையும் முடித்துக் கொண்டு இருக்கிறது.
என்ன காரணம்
மற்ற ஏஐ செயலிகள் சர்ச்சைக்குரிய டாப்பிக்குகளை பேசாது. எதாவது கேட்டாலும் இந்த டாப்பிக்கில் பதில் சொல்ல என்னால் இயலாது எனச் சொல்லிவிடும். ஆனால், க்ரோக் அப்படி இல்லை.. எந்தவொரு கேள்வியைக் கேட்டாலும் அதற்கான பதிலைத் தரும். அதன் இந்த ஓபன் என்ட் அணுகுமுறையே சர்ச்சைக்குக் காரணமாக இருக்கலாம்.












Click it and Unblock the Notifications