சென்னை ஐடி என்ஜினீயர் டூ திண்டுக்கல் விவசாயி.. அரசு ஊழியர்களை ஆடிப்போக வைத்த சம்பவம்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே நரிக்கல்பட்டியை சேர்ந்த விக்னேஷ்குமார் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்தார். பின்னர் விவசாயம் செய்ய விரும்பிய அவர் தனது வேலையை விட்டுவிட்டு சொந்த ஊருக்கு திரும்பினார். என்ஜினியர் விக்னேண்குமார் விவசாயியாக மாறி நெல் சாகுபடி செய்துள்ளார். இதனிடையே அந்த நெல்லை கொள்முதல் செய்ததற்கான தொகையை விடுவிக்க விவசாயியிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கி உள்ளார் நெல் கொள்முதல் நிலைய தற்காலிக ஊழியர். அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே நரிக்கல்பட்டியை சேர்ந்த 35 வயதாகும் விக்னேஷ்குமார் என்பவர் சாப்ட்வேர் என்ஜினியரிங்க படித்துவிட்டு சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்தார். பின்னர் பொறியாளர் வேலையை உதறிவிட்டு. விவசாயம் செய்ய விரும்பிய அவர் தனது வேலையை விட்டுவிட்டு சொந்த ஊரான திண்டுக்கல்லுக்கு திரும்பினார்.
தன்னிடம் இருந்த 8½ ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி செய்தார். பின்னர் தனது நிலத்தில் விளைச்சலான நெல்லை 250 மூட்டைகளில் அடைத்து, பழனி அருகே நரிக்கல்பட்டியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்துக்கு கடந்த 12-ந் தேதி கொண்டு சென்றுள்ளார். அப்போது அங்கு பருவநிலை பட்டியல் எழுத்தராக வேலை பார்த்த நத்தம் தாலுகா கோட்டையூர் ஆண்டிபுரம் பகுதியை சேர்ந்த சுமன்ராஜ் (30), 250 மூட்டை நெல்லை கொள்முதல் செய்து அதற்கான தொகை ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை விரைவாக விடுவிக்க வேண்டும் என்றால் தனக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று விக்னேஷ்குமாரிடம் கேட்டாராம். அதோடு முதற்கட்டமாக ரூ.5 ஆயிரத்தை 'கூகுள் பே' மூலம் அனுப்பும்படி தெரிவித்தார்.

விக்னேஷ்குமாரும் வேறு வழியின்றி அவர் கூறிய தொகையை 'கூகுள் பே' மூலம் செலுத்தினார். அதன் பிறகு பேசிய சுமன்ராஜ், ஓரிரு நாட்களில் கொள்முதல் தொகை உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தெரிவித்தார். அதன்படியே கடந்த சில நாட்களுக்கு முன்பு விக்னேஷ்குமாரின் வங்கி கணக்கில் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வரவு வைக்கப்பட்டதாக தெரிகிறது.
ஆனால் மேற்படி தருவதாக பேசப்பட்ட 20 ஆயிரம் லஞ்சம் கொடுக்க விரும்பாத விக்னேஷ்குமார், திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி நாகராஜிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து சுமன்ராஜை கையும் களவுமாக பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தார்கள்.
அதையடுத்து மீதி தொகையை நேரில் வந்து பணமாக கொடுக்க விரும்புவதாக சுமன்ராஜிடம் தெரிவிக்கும்படி விக்னேஷ்குமாரிடம் போலீசார் தெரிவித்தனர். அவரும் செல்போனில் தொடர்புகொண்டு அவரிடம் அதுகுறித்து பேசினார்.
அப்போது தனக்கு 'கூகுள் பே' மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும், பணமாக கொடுக்க வேண்டாம் என சுமன்ராஜ் கூறினார். இதையடுத்து போலீசார் அறிவுரைப்படி 'கூகுள் பே' மூலம் சுமன்ராஜுக்கு ரூ.15 ஆயிரத்தை அனுப்பிய விக்னேஷ்குமார், அந்த தொகையை பெற்றுக்கொண்டதாக செல்போன் மூலம் தொடர்புகொண்டு சுமன்ராஜ் தெரிவித்ததை விக்னேஷ்குமார் ஆடியோ பதிவு செய்து போலீசாரிடம் கொடுத்துள்ளார்.
அதையடுத்து நத்தத்துக்கு விரைந்து சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் சுமன்ராஜை பிடித்து திண்டுக்கல்லில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலகத்துக்கு நேற்று அழைத்து வந்து விசாரித்தனர். பின்னர் சுமன்ராஜை கைது செய்து திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். இந்த சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.














Click it and Unblock the Notifications