AI வெறும் பில்டப் தான் போல.. "95% திட்டங்கள் தோல்வியில் தான் முடிகிறது.." பகீர் ஆய்வு முடிவுகள்!
சியாட்டில்: இந்தக் காலத்தில் ஏஐ படுவேகமாக வளர்ந்து வரும் சூழலில், உலகையே ஏஐ மாற்றி அமைத்து வருவதாகவும் கூட பலரும் சொல்கிறார்கள். ஆனால், உண்மை என்பது இதற்கு நேர் எதிராக இருக்கிறதாம். தற்போது வரை ஏஐ டூல்களில் மிகப் பெரிய முதலீடுகள் செய்யப்பட்ட போதிலும், 95% ஏஐ திட்டங்கள் தோல்வியிலேயே முடிவதாகப் புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இப்போது எங்குப் பார்த்தாலும் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பற்றியே பேச்சாக இருக்கிறது. எப்படிக் கணினி, மொபைல் ஆகியவை நமது வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டதோ.. அதேபோல ஏஐ கூட வரும் காலத்தில் அப்படி வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாற வாய்ப்பு இருக்கிறது. சிலர் ஏஐக்கள் மனிதர்களை அழிக்கும் எனக் கூடச் சொல்கிறார்கள்.

ஏஐ மேஜிக் இல்லை
பலரும் கூட ஏஐ ஒரு மேஜிக் டூல் போலக் கருதுகிறார்கள். எல்லாச் சிக்கல்களுக்கும் ஏஐ தீர்வாக இருக்கும் என நினைக்கிறார்கள். ஆனால், மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகள் இதற்கு எதிராக இருக்கிறது. ஏஐ குறித்து மக்களின் நம்பிக்கைக்கும் யதார்த்தத்திற்கும் எந்தளவுக்கு வேறுபாடு இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.
95% தோல்வி தான்
அதாவது பெரும்பாலான நிறுவனங்களின் ஏஐ திட்டங்கள் ஆரம்ப நிலையிலேயே சிக்கியுள்ளன என்பதே உண்மை. பல நிறுவனங்கள் ஜெனரேட்டிவ் AIகளில் பெரிய முதலீடுகளைச் செய்த போதிலும், அவர்களின் வருவாயில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு எதுவும் இல்லை. மேலும், மற்றொரு அதிர்ச்சி தரும் உண்மை என்னவென்றால் உலகெங்கும் செயல்படுத்தப்படும் AI திட்டங்களில் வெறும் 5% மட்டுமே வெற்றி பெற்றுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
அதாவது உலகெங்கும் ஏஐ திட்டங்களில் அதிக நிதி முதலீடு செய்யப்பட்டாலும் கூட 95% திட்டங்கள் தோல்வி அடைகிறதாம். வெறும் 5% மட்டுமே வெற்றி அடைகிறதாம். சக்திவாய்ந்த ஏஐ மாடல்களைப் பயன்படுத்தியும் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காததால் பல நிறுவனங்களுக்கு வருவாய் பெரியளவில் உயரவில்லை.
காரணங்கள் என்ன
ஏஐ தொழில்நுட்பம் எதிர்பார்த்த வெற்றியை அடையாமல் இருக்கப் பல காரணங்கள் சொல்லப்படுகிறது.. குறிப்பாக ஏஐ மாடல்களை முறையாகப் பயன்படுத்தாமல் இருப்பது, மோசமான ஒருங்கிணைப்பு முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது. அதேபோல ஏஐ டூல்களை ஒரு மேஜிக் போல பலரும் நினைப்பதால் அதன் மீது அதீத எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. இந்த அதீத எதிர்பார்ப்பும் கூட ஏஐ எதிர்பார்த்த வெற்றியை அடையாமல் இருக்க முக்கிய காரணமாக இருக்கிறது.
ஏஐ மூலம் நிறுவனங்கள் விரைவான மாற்றத்தை எதிர்பார்க்கின்றன. ஆனால், அதற்கான பயிற்சி மற்றும் ஆராய்ச்சியில் போதுமான முதலீடுகளைச் செய்வதில்லை. இதுவே பிரதானப் பிரச்சினையாக இருக்கின்றன. ஏஐ டூல்கள் நமது ஆபீஸ் வேலைகளை முழுமையாக ஆக்கிரமிக்கும் எனப் பேச்சுகள் ஏற்கனவே வந்துவிட்டது. ஆனால், உண்மையில் தற்போதைய நிலையில், ஆபீஸ் பணிகளில் வெறும் 30% மட்டுமே ஏஐ டூல்களால் கையாள முடிகிறது. மீதமுள்ள பணிகளை இன்னும் ஊழியர்களே செய்ய வேண்டி இருக்கிறது
சிக்கல்கள்
இப்போது வரை ஏஐ டூல்கள் வாடிக்கையாளர் சேவை சாட்போட்கள் மற்றும் டேட்டா ஆய்வு உள்ளிட்ட துறைகளில் மிக பெரியளவில் பயன் தருகிறது. ஆனால், ஏஐ மூலம் செலவுகளைக் குறைப்பதும், உற்பத்தித்திறன் அதிகரிப்பதும் இன்னும் முழுமையாக நிறைவேறவில்லை உள்ளது. ஏஐ டூல்களை அமல்படுத்தும் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களுக்கு அதற்கான பயிற்சியைக் கொடுப்பதில்லை. இதனால் தான் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கவில்லை.
அதேநேரம் வரும் காலத்தில் இந்தச் சிக்கல்கள் எல்லாம் சரியாகும்போது ஏஐ வெற்றி விகிதம் கணிசமாக அதிகரிக்கும் என்றும் அப்போது மக்களுக்கு ஏஐ டூல்கள் பெருமளவில் உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications