மிக பெரிய பிரச்சனையை உருவாக்கிய AI.. செல்போன், லேப்டாப் விலை எல்லாம் தாறுமாறா எகிற போகுது
சென்னை: ஏஐ வளர்ச்சியால் உலகில் ஏகப்பட்ட நன்மைகள் இருந்தாலும் சில சிக்கல்களையும் ஏஐ சந்தை ஏற்படுத்தியே வருகிறது. இதற்கிடையே ஏஐ கருவிகளால் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் உள்ளிட்டவற்றின் விலை கணிசமாக உயர வாய்ப்பு இருப்பதாக வல்லுநர்கள் சொல்கிறார்கள். ஏஐக்கும் இதற்கும் என்ன தொடர்பு.. இதன் விலை எப்படி அதிகரிக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
கடந்த சில ஆண்டுகளாகவே ஏஐ படுவேகமாக வளர்ந்து வருகிறது. இந்த ஏஐ நமக்கு பல்வேறு வழிகளில் நன்மையை ஏற்படுத்தினாலும் கூட சில மோசமான விளைவுகளையும் கூட அது ஏற்படுத்தவே செய்கிறது. ஒரு பக்கம் வேலைவாய்ப்பு சந்தையில் ஏஐ மிகப் பெரிய புயலைக் கிளப்பியுள்ள சூழலில் இன்னொரு பக்கம் விலைவாசி ஏறவும் கூட ஏஐ காரணமாக அமைகிறது.

ஏஐ வளர்ச்சி
ஏஐ வளர்ச்சியால் 2026ல் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் உள்ளிட்ட எலக்ட்ரிக் பொருட்களின் விலை தாறுமாறாக உயரப் போகிறதாம். ஏனென்றால் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், கேமிங் கன்சோல்கள் மற்றும் கார்கள் என அனைத்திலும் இப்போது எலக்ட்ரிக் சாதனங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இதுபோன்ற சாதனங்களுக்கு ரேண்டம் ஆக்சஸ் மெமரி- ரேம் (Ram) அத்தியாவசியம்.
ஆனால், சமீப காலமாக ரேம் சிப்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்து வருகின்றன. இதனால் ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்குத் தேவையான ரேம் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே சில பழைய மாடல் செல்போன்களின் விலையும் கூட ஏறி இருக்கிறது. இந்த 2026ல் ரேம் பற்றாக்குறை மேலும் மோசமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரேம் பற்றாக்குறை
இப்போது திடீரென ரேம் பற்றாக்குறை ஏற்பட என்ன காரணம்.. இதற்கும் ஏஐக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி பலருக்கும் வரும். கூகுள், மெட்டா, ஓபன் ஏஐ போன்ற நிறுவனங்கள் ஏஐ துறையில் தங்கள் முதலீடுகளைப் பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த நிறுவனங்கள் மிகப் பெரிய டேட்டா சென்டர்களை உருவாக்கி வருகிறது.
சிக்கல் என்ன
இதுபோன்ற உட்கட்டமைப்புகளுக்கும் செயற்கை நுண்ணறிவு மாடல்கள் திறம்படச் செயல்படவும் பயிற்சி பெறவும் ஜிபியு (GPU) போன்ற சிப்செட்கள் தேவைப்படுகின்றன. இவற்றுக்கு அதிக அலைவரிசை மெமரி (High Bandwidth Memory - HBM) அவசியம்.. ஏஐ நிறுவனங்கள் HBM ரேமுக்கு அதிக விலை கொடுக்கவும் ரெடியாக உள்ளன. இதனால் அதன் உற்பத்திக்கு அதிகக் கவனம் செலுத்தும் நிறுவனங்கள் செல்போன், லேப்டாப்களுக்கான DDR5 ரேம் உற்பத்தியைக் குறைக்க முடிவு செய்துள்ளன. இதுவே இந்த திடீர் பற்றாக்குறைக்குப் பிரதானக் காரணமாகும்.
சாம்சங், எஸ்.கே. ஹைனிக்ஸ், மைக்ரான் போன்ற நிறுவனங்கள் வழக்கமான DDR5 ரேம் உற்பத்தியைக் குறைக்கின்றன. சாம்சங் நிறுவனத்தின் செல்போன் பிரிவு தங்களுக்கு ரேம் வேண்டும் என்று அதே சம்சங்கின் செமிகண்டக்டர் பிரிவான டிஎஸ் (DS) அமைப்பிடம் கோரிக்கை விடுத்திருந்தது. சொந்த நிறுவனத்தின் செல்போன் அமைப்பு விடுத்த கோரிக்கையையே சாம்சங் டிஎஸ் நிராகரித்துவிட்டது.
நிலைமை மோசம்
லாபத்தை அதிகரிக்க ரேம் நிறுவனங்கள் HBM-க்கு முன்னுரிமை தருகின்றனர். இதனால், வழக்கமான DDR5 ரேம் உற்பத்தி குறைந்து, பற்றாக்குறை ஏற்பட்டு, விலைகள் உயர்கின்றன. ரேம் துறையின் முக்கிய நிறுவனமான மைக்ரான், தனது DDR5 ரேம் பிரிவான "க்ரூஷியல்" பிரிவை மொத்தமாக மூடிவிட்டது. இனிமேல், ஏஐ மற்றும் இதர நிறுவனங்களுக்கு மட்டுமே ரேம் விற்க போவதாக அறிவித்துள்ளது. இது நிலைமையின் தீவிரத்தை உணர்த்துகிறது. 2026ல் நிலைமை மோசமாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் உள்ளிட்ட எலக்ட்ரிக் பொருட்களின் விலை உயரலாம் எனச் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications