"தெருவை காணோம்".. வடிவேல் பாணியில் களமிறங்கிய ஜிபி முத்து.. கண்டுபிடித்து தரக் கோரி ஆட்சியரிடம் மனு
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் காணாமல் போன கீழ தெருவை கண்டுபிடித்து தரக் கோரி நடிகர் ஜி.பி.முத்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். இந்த கீழத்தெரு தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், உரிய நில அளவீடு செய்து நிலத்தை மீட்டுத் தரக் கோரியும், நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
ஜிபி முத்து என்றாலே அவர் கூறும் செத்த பயலே, நாரப் பயலே என்ற வசனம்தான் நினைவுக்கு வரும். யூடியூப், இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமானவர் ஜிபி முத்து. இவரது நகைச்சுவைக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று ரசிகர்களின் ஆதரவைப் பெற்றிருந்தார்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் காணாமல் போன கீழத்தெருவை கண்டுபிடித்து தரக் கோரி நடிகர் ஜி.பி.முத்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். இந்த கீழத்தெரு தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், உரிய நில அளவீடு செய்து நிலத்தை மீட்டுத் தரக் கோரியும், நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிப்பேன் என்று ஜிபி முத்து மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஜி.பி.முத்து தனது குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், காலன் குடியிருப்பு வருவாய் கிராமம், உடன்குடி பெருமாள்புரத்தில் நத்தம் சர்வே எண் 233-இல் கீழ தெரு இருந்தது. அரசுக்குச் சொந்தமான இந்த புறம்போக்கு நிலத்தை பாதையாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.
ஆனால், கடந்த 20 ஆண்டுகளில் அந்த தெரு சிட்டிசன் திரைப்படத்தில் வரும் அத்திப்பட்டி கிராமம் காணாமல் போனது போன்று அந்த கீழதெரு காணாமல் போய்விட்டது. அந்த தெரு இருந்த இடத்தை பல்வேறு தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் செல்லும் பாதையும் அடைக்கப்பட்டு உள்ளது. எனவே, மேற்படி இடத்தை நில அளவை செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணாவிட்டால், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்கவுள்ளதாக ஜி.பி.முத்து எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications