மதுரை சித்திரை திருவிழா - ஏப். 25ல் கொடியேற்றம் - மே 4ல் மீனாட்சி திருக்கல்யாணம்
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்குகிறது. மே 4ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், மே 7ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழாவ
மதுரை: உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா வரும் ஏப்ரல் 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மே 2ஆம் தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது. மே 4ஆம் தேதி மீனாட்சி திருக்கல்யாணமும், 5ஆம் தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது. மே 7ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
Recommended Video
தமிழ்நாட்டில் புகழ்பெற்ற திருவிழாக்களில் முக்கியமானது மதுரையில் நடைபெறும் சித்திரைத்திருவிழா. ஆண்டு தோறும் சித்திரை மாதம் பவுர்ணமியை முன்னிட்டு மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறும்.
இந்த ஆண்டு திருவிழா ஏப்ரல் 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 6ஆம் தேதி வரை நடைபெறும். தினந்தோறும் மீனாட்சி அம்மனும் சுந்தரேஸ்வரரும் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி மாசி வீதியை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பர்.

உலா வரும் மீனாட்சி சுந்தரேஸ்வரர்
கற்பக விருக்ஷ் வாகனம், சிம்ம வாகனம், பூத, அன்ன வாகனம், கைலாச பர்வதம், காமதேனு வாகனம், தங்கப்பல்லாக்கு, வேடர் பறிலீலை, தங்கக் குதிரை வாகனம், ரிஷப வாகனம், நந்திகேஷ்வரர், யாழி வாகனத்தில் அம்மனும் அப்பனும் வலம் வருகின்றனர். சித்திரை திருவிழா நடைபெறம் பத்து நாட்களும் மக்கள் கூட்டம் மதுரை வீதிகளில் அலை மோதும் தலை நிறைய மல்லிகை மணக்க மதுரையில் இளம் பெண்களும், திருமணமான பெண்களும் தங்கள் குடும்பத்தினருடன் அம்மை அப்பனை தரிசிக்க கூடுவார்கள்.

மீனாட்சிக்கு பட்டாபிஷேகம்
மீனாட்சி திருக்கல்யாண வைபவத்தின் 8வது நாளான்று காலையில் விசேஷ அபிஷேகம், பூஜைகள் முடிந்த பிறகு, பட்டாபிஷேகம் நடைபெறும் பந்தலுக்கு மீனாட்சி அம்மன் எழுந்தருளுவார். அன்னைக்கு முடி சூட்டுவதற்காக ராயர் கிரீடம் எனப்படும் வைரக் கிரீடமும் செங்கோலும் அனுக்ஞை விநாயகர் சந்நிதியில் இருந்து கொண்டு வரப்படும்.

வேப்பம்பூ மகிழம்பூ
அன்றைய தினம் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளும் மீனாட்சி அம்மனுக்கு பரிவட்டம் கட்டி, கிரீடம் சூட்டி, செங்கோலும் வழங்கப்படும். பின்னர் மீனாட்சிக்கு உரிய வேப்பம்பூ மாலையும் மகிழம்பூ மாலையும் அணிவிக்கப்படும். பட்டாபிஷேக வைபவம் நிறைவு பெற்ற பிறகு, நான்கு வீதிகளிலும் பவனி வந்து பக்தர்களுக்குக் காட்சி தருவார் மீனாட்சி அம்மன். அது முதல் மதுரையில் மீனாட்சி ஆட்சி தொடங்குகிறது.

சித்திரை தேரோட்டம்
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் மே 4 ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் யானை வாகனத்திலும் புஷ்ப பல்லாக்கிலும் மீனாட்சி, சுந்தரேஸ்வரர் பவனி வருவதைக் காண கண்கோடி வேண்டும். 5ஆம் தேதி, மீனாட்சி, பிரியாவிடை சமேதராக சுந்தரேஸ்வரர் பிரம்மாண்ட தேரில் ஏறி நான்கு மாட வீதிகளிலும் வலம் வருவதை நான்கு மாட வீதிகளிலும் கூடி நின்று மக்கள் தரிசிப்பார்கள்.

அழகரை ஆனந்தமாக தரிசிக்கும் பக்தர்கள்
அழகர்மலையில் இருந்து எழுந்தருளி மதுரைக்கு வரும் கள்ளழகருக்கு மே 6ம் தேதி விடிய, விடிய தல்லாகுளத்தில் எதிர்சேவை நடைபெற்று, 7ம் தேதி காலை வைகை ஆற்றில் அழகர் இறங்கும் உற்சவம் நடக்கிறது. வண்டியூர் வரை செல்லும் அழகர் மீண்டும் 9ம் தேதி இரவு தல்லாகுளம் வந்தடையும்போது, அங்கு விடிய விடிய பூப்பல்லக்கு நடைபெறும். இந்த திருவிழா உற்சவங்களில் லட்சக்கணக்கில் மக்கள் கூடுவார்கள். சித்திரை திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் சித்திரை பொருட்காட்சி இந்த ஆண்டு மாட்டுத்தாவணியில் பொருட்காட்சி நடைபெற உள்ளது. மதுரையின் 50 ஆண்டு வரலாற்றில் முதன்முறையாக அரசு சித்திரை பொருட்காட்சி தமுக்கம் மைதானத்தில் இருந்து மாட்டுத்தாவணிக்கு மாற்றப்படுகிறது.












Click it and Unblock the Notifications