பக்தருக்கு கண்பார்வை கொடுத்த அதிசய சாஸ்தா ஆலயம்
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர். சுப்ரமணியன்
நலம் தரும் ஆலயங்கள் வரிசையில் நாம் இந்த வாரம் தரிசிக்கவிருப்பது கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் வட்டம்
அருள்மிகு அஞ்சனம் எழுதிய அதிசய கண்டன் சாஸ்தா திருக்கோயில் ஆகும். இந்த ஆலயத்தின் இறைவன் கண்பார்வை தெரியாத பக்தரின் பார்வைக்கு ஒளி கொடுத்தவர் என்ற புகழ் பெற்ற தலமாகும்.

தலபெருமை:
அத்திரி மகரிஷி, தன் மனைவி அனுசுயாவுடன் இத்தலத்தில் ஆஸ்ரமம் அமைத்து தங்கியிருந்தார். அனுசுயா தன் கணவர் மீது கொண்ட பக்தியை உலகத்துக்கு அறிவித்து, அவரைப் போல பெண்கள் தங்கள் கணவருடன் நடந்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்த மும்மூர்த்திகளும் துறவி வேடத்தில் வந்தனர். அனுசுயா அவர்களை சாப்பிட அழைத்தார். உடம்பில் எந்த வித ஆடையும் இல்லாமல் நிர்வாண நிலையில் பரிமாறினால் தான் தாங்கள் சாப்பிடுவோம் என்று துறவிகள் நிபந்தனை விதித்தனர். இதைக்கேட்ட அனுசுயா சற்றும் கலங்கவில்லை. தன் கணவர் அத்திரியின் பாதத்தை பூஜித்த தீர்த்தத்தை கையில் எடுத்தார். அதை மும்மூர்த்திகள் மீது தெளித்தார். மூவரும் குழந்தைகளாயினர். பின்னர் அனுசியா மூவருக்கும் ஆடையின்றி உணவு ஊட்டினார். பின்பு மும்மூர்த்திகளும் தங்களது தேவியருடன் அனுசுயா, அத்திரிக்குக் காட்சி தந்தனர். இவ்வாறு அத்திரி ஆஸ்ரமம் அமைத்து தங்கியதால் இத்தலம், "ஆஸ்ரமம்' என்று அழைக்கப்பட்டு ஆஸ்ராமம் என திரிந்தது. அத்திரி உண்டாக்கிய தீர்த்தம், இக்கோயிலுக்கு வெளியில் இருக்கிறது. இதை யாக குண்ட தீர்த்தம் என்கிறார்கள்.
தலச் சிறப்பு:
பொதுவாக சாஸ்தா இரண்டு கால்களையும் குத்திட்டு, யோகப்பட்டை அணிந்த நிலையில் காட்சி தருவார். ஆனால், இத்திருக்கோயிலில் சுவாமி பீடத்தில் அமர்ந்து, வலது காலை குத்திட்டு, இடது கால் பெருவிரலை தரையில் ஊன்றிய நிலையில் காட்சி தருகிறார். வலது கையில் கதாயுதம் ஏந்தியுள்ளார், மார்பில் பதக்கமும், பூணூலும் அணிந்திருக்கிறார். சுருள்முடியை கொண்டையாக முடிந்திருக்கிறார். இத்தகைய அமைப்பில் இந்தியாவில் வேறு எங்கும் சாஸ்தாவின் அமைப்பு இல்லை.
சிவனுக்குரிய வில்வமே இத்தலத்தில் விருட்சம். இங்குள்ள மூன்று வில்வ மரங்களில் மூன்று இலை, ஐந்து இலை, ஒன்பது இலை என வெவ்வேறான எண்ணிக்கையில் கிளை விடுவது சிறப்பு.
தல வரலாறு:
பல்லாண்டுகளுக்கு முன்பு இவ்வூரில் வசித்த பக்தர்கள், சாஸ்தாவை குல தெய்வமாக வணங்கினர். தங்களது இருப்பிடத்தில் அவருக்கு கோயில் எழுப்ப வேண்டுமென எண்ணியவர்கள் ஒரு சாஸ்தா சிலை வடித்தனர். இங்கு பிரதிஷ்டை செய்து சிறிய அளவில் கோயில் எழுப்பினர்.
பிற்காலத்தில் கண் தெரியாத பக்தர் ஒருவர் கோயில் வாசலில் படுத்திருந்தார். சாஸ்தாவை மனக்கண்ணால் வழிபட்ட அவர் அருகில் யாரோ ஒருவர் அமர்வதை உணர்ந்தார். வந்தவர் அவரது கண்ணில் மையைத் தடவ கண்பார்வை கிடைத்தது. வியந்தவர் சாஸ்தாவை வழிபட அவர் காட்சி கொடுத்தருளினார். கண்ணில் மையால் எழுதி பார்வை கொடுத்ததால் இவர் "அஞ்சனம் எழுதிய கண்டன் சாஸ்தா' (அஞ்சனம் என்றால் கண், கண்டன் என்பது சாஸ்தாவின் மற்றொரு பெயரான மணிகண்டன்) என்று பெயர் பெற்றார்.
பார்வை தந்த சாஸ்தா:
அஞ்சனம் என்றால் கண்மை. ஒரு பக்தருக்கு பார்வை கொடுக்க ஆண்டவனே நேரில் வந்து மை தீட்டினார். அந்த மையால் கண்கள் அழகு பெற்றதோடு, இருண்ட கண்கள் ஒளியும் பெற்றது.
பிரார்த்தனை:
கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.
அமைவிடம் :
புகழ் பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் இத்திருக்கோயிலிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் அமைந்து இருக்கிறது.
மூலவர் : சாஸ்தா
தல விருட்சம் : வில்வ மரம்
தீர்த்தம் : யாக குண்ட தீர்த்தம்
பழமை : 500 வருடங்களுக்குள்
ஊர் : கன்னியாகுமரி












Click it and Unblock the Notifications