கோடைகால சரும நோய்களும்... சூரியன், சுக்கிரன் கூட்டணியும்
கோடையில் ஏற்படும் நோய்களுக்கும் ஜோதிடத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என பார்த்தால் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவே தெரிகிறது.
சென்னை: கோடையில் ஏற்படும் நோய்களுக்கு முக்கூட்டு கிரகங்களான சூரியன்-புதன்-சுக்கிரன் ஆகிய மூன்று கிரங்களோடு செவ்வாயும் சேர்ந்து அதிக விளைவுகளை ஏற்படுத்தினாலும் அனேக வியாதிகளுக்கு சுக்கிரனே காரணமாக கிரகமாக அமைந்துள்ளது.
கோடைகாலத்தில் உடம்பில் நீர்சத்தின் அளவு குறையும்போது காய்ச்சல் ஏற்படுகிறது. உடம்பிலுள்ள நீர்சத்திற்கும் உஷ்ண காய்சலுக்கும் சுக்கிரனே காரக கிரகம் என்கிறது மருத்துவ ஜோதிடம். சந்திரனும் சரும நோய்களுக்கு காரகமாவார்.
வெயில் இப்போதே மண்டையை பிளக்க ஆரம்பித்துவிட்டது. கோடை கால நோய்களான அம்மை, வியர்குரு, பலரையும் வாட்டி வதைக்கிறது. இரண்டுமுறை குளித்து சுத்தமான பருத்தி ஆடைகள் அணிவதன் மூலம் கோடைகால சரும நோய்களை தவிர்க்கலாம். ஜோதிட ரீதியாக சில பரிகாரங்களையும் பார்க்கலாம்.
தலைவலி
தலையில் படும் நேரடி வெயிலினால் மூளை நரம்புகள் பார்வை நரம்புகள் போன்றவை பாதிக்கப்பட்டு பித்தம் அதிகரித்த நிலையில் ஒற்றை தலைவலி மற்றும் பார்வை கோளாறுகள்,முடி கொட்டுதல் ஏற்படுகின்றது. கோடைகாலத்தில் பலருக்கும் அடிக்கடி சிறுநீரக கோளாறுகள், நீர் சுருக்கு ஏற்படுகின்றது. கொப்புளம், அம்மை, அக்கி போன்ற தோல் நோய்களை ஏற்படுத்தி விடுகிறது.
சூரியன் சுக்கிரன் கூட்டணி
பங்குனி மாதத்தில் மீன ராசியில் சூரியன், சுக்கிரன், புதன் கூட்டணி அமைத்து குடியிருப்பது அனைவரும் அறிந்ததே. இப்போது சுக்கிரன் நெருப்பு ராசியான மேஷத்திற்கு இடம் பெயர்ந்துள்ளார். சித்திரை 1ஆம் தேதி முதல் சூரியனும் மேஷ ராசியில் உச்சமடையும் போது இருவரின் கூட்டணி மக்களுக்கு பலவித நோய்கள் ஏற்பட காரணமாக அமைகிறது.
சரும நோய்கள்
பலவிதமான சரும நோய்களுக்கு சுக்கிரன்தான் காரகம். கோடை நோய்களுக்கு காரக கிரகமான சுக்கிரனே அதற்கான தீர்வையும் காட்டுகிறார். கோடை நோய்களை தவிர்க்க சுக்கிரனின் அம்சமான சுத்தமான குடிநீரை நிறைய குடித்துவந்தாலே பல பல வியாதிகளை தவிர்த்துவிடலாம் என ஆயுர்வேதமும் மருத்துவ ஜோதிடமும் கூறுகிறது.
மன அழுத்தம் காரணம்
ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன், சூரியன், சுக்கிரன், புதன் எப்படி அமைந்துள்ளது என்பதைப் பொருத்தே சரும பிரச்சினையும் சரும நோய்களும் ஏற்படுகிறது. சந்திரன் மனதிற்கு காரகர். மன அழுத்தம் ஏற்பட்டால் சருமம் வறட்சியடைகிறது. இதனால் தோல்நோய்கள் எளிதாக ஏற்படுகிறது. தூக்கக் குறைபாடும் ஏற்படுகிறது. எனவே அதிக அளவில் தண்ணீர் பருகவேண்டும். இயற்கையான ஜூஸ்களை குடிக்கலாம்.
முகசுருக்கம் நீங்க பரிகாரம்
சுக்கிரனை காரகமாக கொண்ட இளநீரை கோடை காலத்தில் அதிகம் குடிக்கலாம். கோடை காலத்தில் அடர் நிறமுள்ள ஆடைகளை அணிய வேண்டாம். வெண்மை நிற ஆடைகளை அணியலாம். கறுப்பு, அடர் மஞ்சள், க்ரே, நீல நிற ஆடைகள் அணிய கூடாது. அதிக அளவில் தண்ணீர் குடிக்கலாம். அம்மன் கோவில்களில் கூழ் வார்க்கலாம். அபிஷேகத்திற்கு இளநீர், தேன், சர்க்கரை,பூக்கள் போன்றவை வாங்கி கொடுக்கலாம் சருமம் மென்மையாகும்.