சூரிய சந்திர கிரகண நேரத்தில் குழந்தை பிறப்பது யோகமா ? தோஷமா - சுவாரஸ்ய தகவல்கள்
சூரிய கிரகணம் அல்லது சந்திர கிரகண காலத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு ராகு, கேது, சனியின் ஆதிக்கம் அதிகம் இருக்குமாம். அந்த கிரகங்களில் சக்தி வாய்ந்த அரசியல் தலைவராகவும் வாய்ப்பு இருப்பதாக ஜோதிட சாஸ்திரங்கள் தெரிவிக்கின்ற
சென்னை: சூரிய கிரகண நேரத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு கிரகண தோஷம் ஏற்படுகிறது என்பது ஜோதிட கணிப்பாக இருக்கிறது. பொதுவாக நிழல்கிரகங்கள் எனப்படும் ராகு, கேதுவுடன் மற்ற கிரகங்கள் ஒரே ராசியில் இருந்தால் அது கிரகண தோஷம் என்று சொல்லப்படுகிறது. இன்றைய தினம் இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு மேல் நிகழப்போகிறது. விருச்சிகம் ராசியில் ஐந்து கிரக சேர்க்கையும் நிகழும் இந்த நேரத்தில் கிரகண நேரத்தில் பிறக்கும் குழந்தைகள் எப்படி இருப்பார்கள் என்று பார்க்கலாம்.
சூரிய கிரகணம், சந்திர கிரகணம் என்றாலே பொதுவாகவே எல்லோருக்கும் பயம்தான் இந்த நேரத்தில் தீயவைகளுக்கு சக்தி அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதே போல ராகு காலம் எம கண்ட நேரங்களும் ஒதுக்கி வைக்கப்படுகின்றன. இந்த நேரங்களில் பிறக்கும் குழந்தைகள் எப்படி இருக்கும் என்று கேள்வி வரலாம். அந்த குழந்தைகள் அதிக வலிமையோடும் ஆற்றலோடும் இருப்பார்களாம்.
சந்திர கிரகணத்தின்போது சந்திரன் மீது விழுவது பூமியின் நிழல். சூரிய கிரகணத்தின் போது பூமியின் மீது விழுவது சந்திரனின் நிழல். இப்படிப்பட்ட நிழல்களால் பூமியில் இருக்கக்கூடிய ஜீவராசிகளுக்கு உடலிலும், மனதிலும் பல மாற்றங்கள் உருவாகின்றன. இந்த மாற்றங்களால் பாதிப்பு ஏற்படுவதையே தோஷம் என்று ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது. கிரகண நேரத்தில் பிறந்த ஒருவரது ஜாதகத்தில், சூரியன், சந்திரன், நிழல்கிரகங்கள் மிக நெருக்கமான பாதையில் அமைந்திருக்கும். சந்திரகிரகணத்தின் போது சூரியனும் சந்திரனும் நிழல் கிரகங்களுடன் இணைந்து சமசப்தமமாக இருக்கும். சூரிய கிரகணத்தின் போது சூரியன், சந்திரன், ராகு அல்லது கேது இம்மூவரும் மிக நெருக்கமான பாதையில் இருப்பர்.
கிரகண யோகங்கள்
கிரகணங்கள் ஏற்படுவது வானியல் நிகழ்வுதான் என்றாலும் ஜோதிடத்திலும் புராண கதைகளிலும் ராகு கேது எனப்படும் பாம்பு கிரகங்கள் சூரியனையோ சந்திரனையோ விழுங்கும் நிகழ்வு என்று சொல்லப்படுகிறது. இது நல்ல காலம் இல்லை. இந்த நேரத்தில் பிறக்கம் குழந்தைக்கு கிரகண தோஷம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கிரகண காலத்தில் பிறக்கின்ற குழந்தைகளுக்கு ஜாதகத்தில் ராகு, கேது, சனி போன்ற பாவ கிரகங்கள் வலிமை பெற்றிருக்கும். இது அந்த குழந்தையை தலைவனாகவும் மாற்றும் தேவையற்ற சகவாசங்கள் ஏற்பட்டால் பயங்கர வில்லனாக அந்த குழந்தை மாறும் என்கின்றனர்
கிரகண தோஷம்
சூரிய கிரகணமோ, சந்திர கிரகணமோ ஏற்படும் போது பிறக்கும் குழந்தைகளுக்கு கிரகண தோஷம் ஏற்படும். சூரியன் சந்திரன் ராகு ஒரே வீட்டில் இருக்கும் போது கேது நேர் எதிர் வீட்டில் இருப்பது முழு சூரிய கிரகணம். அதே போல சூரியன் கேது ஒரு வீட்டிலும் நேர் எதிர் வீட்டில் ராகு சந்திரன் இருப்பது சந்திர கிரகண தோஷத்தை ஏற்படுத்தும்
அப்பாவிற்கு பாதிப்பு
கிரகண தோஷம் அந்த குழந்தையை விட குழந்தையின் பெற்றோரைத்தான் பாதிக்கும். சூரிய கிரகணத்தில் குழந்தை பிறந்தால் எதிர்காலத்தில் தந்தையின் வளர்ச்சி மற்றும் பொருளாதார நிலைகளை அது பாதிக்க இடம் உண்டு. தந்தைவழி பூர்வீக சொத்துக்களை பெறுவதில் கூட சிக்கல் வரலாம். அப்பாவிற்கும் மகனுக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
ராவணன் ஜாதகம்
கிரகண தோஷத்தை யோகமாக மாற்றலாம். கிரகணம் என்பது அனுசக்தி போன்றது நல்லதற்கும் பயன்படுத்தலாம். தீய விசயங்களுக்கும் பயன்படுத்தலாம். ராவணன், ஜராசந்தன் போன்ற மிகப்பெரிய அரக்கர்கள் எல்லாம் கிரகண தோஷத்தில் பிறந்துள்ளதாக புராண கதைகள் சொல்கின்றன.
சந்திர கிரகணத்தில் பிறந்த ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் டிரம்ப் பிறந்தது கூட கிரகண நேரத்தில்தான். டொனால்ட் ட்ரம்ப் 1948 ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி ஒரு முழு சந்திரகிரகண நாளில் அதாவது ப்ளட் மூன் என்று சொல்லக்கூடிய நாளில் பிறந்தவர். மிதுனம் ராசியில் சூரியன் இருக்க தனுசு ராசியில் சந்திரன் இருக்க பவுர்ணமி ராசியில் பிறந்தவர் ட்ரம்ப்.
தடை நீக்கும் பரிகாரம்
கிரகண நேரத்தில் பிறக்கும் குழந்தைகள் அதிக ஆற்றலை பெற்றிருக்கும், அந்த ஆற்றலை நல்ல வழியில் செலுத்துவது பெற்றோர்களின் கைகளில்தான் உள்ளது. கிரகண காலத்தில் பிறந்தவர்கள் சிலருக்கு எந்த காரியத்திலும் தடையும் தாமதங்களும் ஏற்படும். ஏதோ ஒரு பதற்றத்திலேயே இருப்பார்கள். சிலருக்கு நோய் பாதிப்புகளும் ஏற்படும். இதற்கு ராகு கேது பரிகார சாந்தி செய்வதன் மூலம் காரியத் தடை ஏற்படுவதை தடுக்கலாம்.
பெற்றோர்கள் கவனம்
உலகில் ஒரே நாளில் ஒரே நேரத்தில் ஒரே நட்சத்திர ராசிகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு வாழ்க்கை முறை ஒரே மாதிரியாக இருப்பதில்லை என்று பலரும் கேட்கலாம். என்னதான் ஜாதகத்தில் கிரகங்கள் ஒரே மாதிரியாக அமைந்திருந்தாலும் அவரவர்களின் பூர்வ ஜென்ம கர்ம வினைப்படி வாழ்க்கைத்தரம் அமையும். எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவர்கள் நல்லவர்கள் ஆவதும் தீயவர்கள் ஆவதும் பெற்றோர்கள் கைகளில்தான் இருக்கிறது.