சித்ரா பௌர்ணமி: கிரிவலம் செல்ல பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வர வேண்டாம் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு
திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமியையொட்டி பக்தர்கள் கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.
திருவண்ணாமலை: சித்ரா பெளர்ணமியையொட்டி வரும் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் திருவண்ணாமலைக்கு பக்தர்கள் கிரிவலம் செல்ல வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திருவண்ணாமலையில் உள்ள பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோயிலில், மாதந்தோறும் பௌர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தில் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களை சேர்ந்த 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கிரிவலம் செல்வர்.

இந்த சித்ரா பௌர்ணமி வரும் 26 ஆம் தேதி திங்கள் கிழமை பிற்பகல் 2.16 மணிக்கு துவங்கி மறுநாள் செவ்வாய்க் கிழமை காலை 9.59 மணிக்கு நிறைவடைகிறது.
இந்த நிலையில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சித்ரா பெளர்ணமியையொட்டி வரும் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதித்து, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி விதித்து உத்தரவிட்டுள்ளர்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சித்ரா பௌர்ணமியையொட்டி பக்தர்கள், பொதுமக்கள் யாரும் திருவண்ணாமலைக்கு வர வேண்டாம் எனவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக போற்றப்படும் திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் வருவது சிறப்பு. மலையே எம்பெருமான் ஈசனாக காட்சியளிக்கும் புண்ணிய திருத்தலம் தான் திருவண்ணாமலை. காசிக்கு போய் கங்கையில் குளித்தால் தான் முக்கி தரும். ஆனால் நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாக விளங்குவது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருத்தலம். இவரை வணங்கி கிரிவலம் வந்தாலே எண்ணற்ற பலன்கள் கிடைக்கும்.
தினந்தோறும், ஆயிரக்கணக்கானோர் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் முடித்துவிட்டு, அப்படியே கிரிவலம் வந்து மீண்டும் அருணாச்சலேஸ்வரரை வணங்கிவிட்டு வருவது வழக்கமான நடைமுறை.
அண்ணாமலையாரை தரிசித்து விட்டு கிரிவலம் வரும் கிரிவலப் பாதையில் ஏராளமான பழமையான கோவில்கள் உள்ளன. அதே போல் ஏராளமான சித்தர்களின் கோவில்களும் உள்ளன. இன்றைக்கும் சித்தர்கள், யோகிகள், தேவர்கள் கோவிலை கிரிவலம் வருவதாக ஐதீகம். பௌர்ணமி, அமாவாசை, சிவராத்திரி போன்ற விஷேச தினங்களில் அதிக அளவில் கிரிவலம் வருவது வழக்கம்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு முதல் பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் வர தடை உள்ளது. இந்த ஆண்டும் அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளதால் சித்ரா பெளர்ணமியையொட்டி வரும் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் திருவண்ணாமலைக்கு பக்தர்கள் கிரிவலம் செல்ல வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கேட்டுக்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications