தமிழகத்தில் ரகசியமாக நடக்கும் கஜ பூஜை - அரசாளவா? ஆட்சியை கவிழ்க்கவா?
யாகங்கள், பூஜைகள், அபிஷேகங்களுக்கு பெயர் பெற்ற தமிழகத்தில் ரகசியமாக ஏழு இடங்களில் கஜ பூஜை நடைபெறுகிறதாம். இந்த கஜ பூஜை அரசாளவா? அல்லது ஆள்பவர்களுக்கு எதிராகவா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
சென்னை: கஜ பூஜை, அதாவது யானையை வைத்து செய்யப்படும் பூஜை. இது மிகவும் வலிமையானது. இந்த பூஜை இப்போது தமிழகத்தில் ஏழு இடங்களில் செய்யப்படுகிறதாம். இதற்காக சில பல கோடிகளை செலவிட்டு செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. கஜ பூஜை செய்வதனால் என்ன பலன் என்பதை ஜாதக ரீதியாக பார்க்கலாம்.
சிறையில் இருந்து பரோலில் வந்திருக்கும் சிலர் ஆளும் கட்சிக்கு எதிராக குதிரை, யானை, பசுவை வைத்து பூஜை செய்து தானமாக தருகிறார்களாம். அரசுக் கட்டிலில் அமருவதற்காக செய்யும் பூஜைகளை ரகசியமாக செய்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தோஷங்கள் நீங்க யாகங்கள் செய்கின்றனர். எவ்வளவு பெரிய பிரம்மஹத்தி தோஷம் இருந்தாலும் பசுவைத் தானமாகக் கொடுத்துவிட்டால் அந்த தோஷம் எல்லாம் விலகும் என்று வேதங்களில் சொல்லியிருக்கிறார்கள். பிரமாணரை கொன்றால் நம்பிக்கை துரோகம் செய்தால் பிரம்மஹத்தி தோஷம் பீடிக்கிறது.

பசு தானம்
எல்லா விதமான தோஷங்களும் கோ பூஜை செய்வதன் மூலமாக நீங்கி விடுகிறது. கோ பூஜை என்பது, பொய் சொல்வதால் ஏற்படும் தோஷங்களை நிவர்த்தி செய்யும். உடலால் செய்யும் கொடுமையால் ஏற்படும் தோஷம், காமத்தால் அத்துமீறி செய்த பாவங்கள் போன்றவற்றை இந்த கோ பூஜை நீக்கும். பசுவை தானமாக கொடுக்க முடியாதவர்கள், அகத்திக் கீரையைக் கொடுத்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கி விடும்.

நாடாளும் தரும் யோகம்
கஜகேசரி யோகம் என்று ஜாதகத்தில் ஒரு யோகம் இருக்கிறது. ஜாதகத்தில் சந்திரனுக்கு நாலு, ஏழு, பத்தில் குரு அமர்ந்திருந்தால் கஜகேசரி யோகமாகும். இந்த யோகம் இருப்பவர்களுக்கு குரு தசையோ அல்லது சந்திர தசையோ நடக்கும் போது ராஜ யோகத்தை அடைவார்கள். நாட்டை ஆள்வதற்கு சமமான மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். அரச கிரகங்களும் நன்றாக அமைந்தால் அரசையே ஆள்வார்கள்.

பதவி யோகம் தரும் தானம்
கோவிலுக்கு யானை தானம் செய்பவர்கள் இந்திரனுக்கு சமமான ஆசனத்தில் அமர்வார்கள். பசுவை வைத்து பூஜை செய்து தானமாக கொடுத்தால் அரச பதவி கிடைக்கும். அசுவ மேத யாகம் செய்து தானம் கொடுப்பவர்களுக்கு இந்திர பதவி கிடைக்கும். எனவேதான் யாகங்களைச் செய்து யானை, குதிரை, பசுக்களை தானமாகக் கொடுக்கின்றனர்.

கஜ பூஜை செய்வது ஏன்
கஜகேசரி யோகத்தை கஜ பூஜையின் மூலம் பெறலாம். அரசாள வேண்டும் நினைத்தவர்கள் இப்போது சிறைக்குள் இருக்கிறார்கள். சிறையில் இருந்து ஒருவர் மட்டும் இப்போது வெளியே வந்து கஜ பூஜை செய்து வருகிறாராம். அதுவும் சிறையில் இருப்பவரின் ஆலோசனைப்படிதானாம். இதற்காக சில கோடிகளை செலவு செய்து வருகிறார்களாம். கஜ பூஜையை மட்டும் பார்த்துத்தான் செய்ய வேண்டும் என்று ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.

கஜ பூஜையால் பாதிப்பு வருமா?
கஜ பூஜையை செய்துவிட்டு சும்மா அங்கேயே இருந்து விடக் கூடாதாம். கஜ பூஜை செய்துவிட்டு எல்லையைத் தாண்டி போய்விட்டு வர வேண்டும். கஜ பூஜை ஒரு ஆற்றலைத் தரும். அந்த ஆற்றலை வைத்துக் கொண்டு வீட்டிலேயே இருந்தால் வீட்டில் இருப்பவர்களை அடிக்க வைக்கும். அதுபோன்ற எதிர்மறை செயல்கள் ஏற்படும். எனவே இந்த கஜ பூஜை செய்தவர்களுக்கு எதிராகவே திரும்பக்கூடும் என்றும் கூறுகின்றனர். இப்போது நடக்கும் கஜபூஜை ஆள்பவர்களுக்கு எதிராக செயல்படுமா? அல்லது யாகம் செய்தவர்களுக்கு எதிராக திரும்புமா பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications