குரு பெயர்ச்சி 2018-19: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு காசு.. பணம்... துட்டு மணி... மணி...
குரு பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை தரப்போகிறது. 7ஆம் வீட்டில் அமர்ந்து ராசியை பார்வையிடுவதால் குரு பார்வையால் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகிறது.
சென்னை: திருமணம், குழந்தைபேறு என சுப செயல்கள் நடைபெற உதவும் குருபகவான் அக்டோபர் 4ஆம் தேதி வாக்கியப்படியும், அக்டோபர் 11ஆம் தேதியன்று திருக்கணிதப்பஞ்சாங்கப்படி துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார். ரிஷபம் ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி பலன்கள் எப்படி என பார்க்கலாம்.
குருபகவான் இதுநாள் வரை ருண ரோக சத்ரு ஸ்தானமான 6வது வீட்டில் அமர்ந்திருந்தார். அக்டோபர் முதல் 7வது வீடான களத்திர ஸ்தானத்திற்கு நகர்கிறார். இது சிறப்பான அமைப்பாகும். சமசப்தம பார்வையாக ராசியை பார்ப்பதால் நன்மைகள் அதிகம் நடைபெறும் காலமாகும்.
இந்த குரு பெயர்ச்சி பலன்கள் பொதுவானதாகும். அவரவர்கள் ஜாதகத்தில் கிரகங்களின் அமைப்பிற்கு தக்கவாறும் தற்சமயம் நடைபெறும் தசா-புக்திக்கு ஏற்பவே ஜாதகருக்கு நல்லது கெட்டது நடக்கும்.

காதல் திருமணம் கை கூடும்
காதல் நாயகன் சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே, இதுநாள் வரை காதலோ, திருமணமோ கைகூடவில்லை என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தீர்கள். இனி அந்த கவலை வேண்டாம். காதல் மலரும் நேரம் வந்து விட்டது. காதல் கனிந்து திருமணத்தில் முடியும் காலமும் இதுதான். ஏனென்றால் குருபகவான் உங்கள் ராசிக்கு 7வது இடத்தில் அமர்ந்து உங்கள் ராசியை நேரிடையாக பார்வையிடுகிறார். செல்வம், செல்வாக்கு, பெயர் புகழ் கூடும்.

பாக்கெட் நிறைய பணம்
பொருளாதார ரீதியாக பார்த்தால் பணம் வரவு அதிகமாகவே இருக்கும். அடைபட்டுக் கிடந்த வருமான வழிகள் எல்லாம் திறக்கும். உங்கள் ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானமான மீனம் ராசியை குருபகவான் 5வது பார்வையாக பார்க்கிறார். செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். பணம் அதிகம் வருகிறதே என்று வீணாக செலவு செய்ய வேண்டாம். ஏனெனில் அட்டமத்து சனிபகவான் வீணான செலவுகளை இழுத்து விட்டு விடுவார் ஜாக்கிரதை.

முயற்சிகள் வெற்றி
அக்டோபர் 2018 முதல் செய்யும் முயற்சிகள் வெற்றி கிடைக்கும். இதுநாள் வரை இருந்த நெருக்கடிகள் விலகும். புதிய தொழில்கள் தொடங்க வாய்ப்பு உள்ளது. வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் ராசிக்கு 3வது வீடான கடகத்தை பார்வையிடுவதால் நீங்கள் செய்யும் முயற்சிகள் வெற்றியடையும். கடன்கள் மறைந்து சேமிப்பு அதிகரிக்கும். ஏப்ரல் மாதம் குரு வக்ரகதியில் சஞ்சரிக்கும் போது கவனமாக இருக்கவும். பணம் கொடுக்கல் வாங்கல் வேண்டாம்.

சனி, ராகு - கேது
குருபகவானால் நன்மைகள் பல நடந்தாலும் சனிபகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. உணவு விசயத்தில் கவனம் தேவை. முயற்சி ஸ்தானமான 3ஆம் வீட்டில் ராகு இருக்கிறார். 2019 பிப்ரவரி முதல் ராகு கேது பெயர்ச்சி நிகழ உள்ளது. ராசிக்கு 2ஆம் வீட்டில் ராகு, எட்டில் கேது அமர உள்ளதால் குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது நல்லது. சனியின் சஞ்சாரம் சாதகமற்று இருப்பதால் ஆஞ்சநேயரை வணங்கவும். சனிக்கிழமையன்று சனிபகவானுக்கு எள்தீபம் ஏற்றவும். சனியால் ஏற்படும் கெடுதி ஓரளவிற்கு மறையும்.
விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.












Click it and Unblock the Notifications