இன்று குருப்பெயர்ச்சி: குரு பரிகாரத்தலங்களில் பக்தர்கள் கூட்டம் - சிறப்பு யாகங்கள்
குரு பகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு வாக்கியப் பஞ்சாங்கப்படி இன்று 04.10.2018 வியாழக்கிழமை இடப்பெயர்ச்சி ஆகிறார்.
சென்னை: வாக்கிய பஞ்சாங்கத்தின்படி இன்று குருப்பெயர்ச்சி நிகழவிருக்கிறது. குரு பகவான், துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார். குருப்பெயர்ச்சியை முன்னிட்டு, அனைத்து சிவாலயங்களிலும் குருவுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் பரிகார ஹோமங்கள் நடத்தப்பட இருக்கின்றன. வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் இரண்டு முறை குருப் பெயர்ச்சி மகா யாகம் இன்றும் வரும் 11ஆம் தேதியும் நடைபெறுகிறது.
புகழ், பதவி, அந்தஸ்து, திருமணம், புத்திர பாக்கியம் என ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் முக்கிய அம்சங்களைத் தீர்மானிப்பதில் குரு பகவானுக்கு முக்கியப் பங்குண்டு. 'குரு பார்க்க கோடி நன்மை' என்று கூறுகிறார்கள். குருவின் பார்வை உச்சத்தில் இருக்கும் ஒருவன், வாழ்க்கையில் அனைத்து இன்பங்களையும் பெறுவான்.
குரு பகவான். அறிவு, வித்யை, ஞானம் ஆகியவற்றுக்கு இவரே காரகத்துவம் வகிக்கிறார். இவரை 'பிரகஸ்பதி' என்றும் அழைப்பார்கள். தேவர்கள் அனைவருக்கும் குருவாகத் திகழ்வதால், 'தேவகுரு' என்றும் அழைப்பார்கள்
மனித வாழ்க்கையின் ஏற்றம் - இறக்கம் எல்லாமே பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அமைகின்றன. பூர்வ புண்ணியத்திற்கான பலன்களை அளிப்போர் நவகிரகங்கள் எனப் போற்றப் பெறும் நவநாயகர்களே ஆவர்.
இந்த ஒன்பது கிரகங்களில் ஐந்தாவதாக, நடு நாயகராகத் திகழ்பவர் குரு பகவான். தேவர்களின் குருவாகிய குருபகவான் பூரணமான சுபகிரகம் ஆவார். குருபகவானின் அருட்பார்வைக்கு அளப்பரிய ஆற்றல் உண்டு. அதனால் தான் 'குரு பார்க்க கோடி நன்மை’, குரு பார்வை தோஷ நிவர்த்தி’ என்றெல்லாம் குருபகவானின் அருள்திறம் போற்றப் பெறுகின்றது.
குருபகவான் ராசி மண்டலத்தைக் கடக்க எடுத்துக்கொள்ளும் காலம் பன்னிரண்டு ஆண்டுகள் ஆகும். அதாவது, ஒரு ராசியைக் கடக்க ஓர் ஆண்டு ஆகிறது. குருபகவான் ஒரு ராசியில் 2, 5,7,9,11, ஆகிய ஐந்து இடங்களில் சஞ்சரிக்கும் காலத்தில் குறிப்பிட்ட ஜாதகர் நற்பலன்களை அடைகிறார். அதே குருபகவான், 1,3,4,6,8,10,12 ஆகிய ஏழு இடங்களில் சஞ்சரிக்கும் காலத்தில் ஜாதகருக்கு சுமாரான பலன்களை தருகிறார்.
குருவித்துறை குருபகவான்
குரு பகவான் இன்று இரவு 10.05 மணியளவில் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதையொட்டி குரு பெயர்ச்சியை முன்னிட்டு தமிழகத்தில் குரு பகவான் வீற்றிருக்கும் தலங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டத்தில் அமைந்துள்ள குருவித்துறையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராய் வீற்றிருக்கும் அருள்மிகு சித்திரரத வல்லப பெருமாள் திருக்கோவிலில் சுயம்புவாக வீற்றிருக்கும் குருபகவான் சன்னதியில் குரு பெயர்ச்சி விழா கோலாகலமாக நடைபெறுகிறது.
மகா யாகம், சிறப்பு பூஜைகள்
குருவித்துறையில் குருபகவானுக்கு கடந்த 4 நாட்களாக லட்சார்ச்சனை பூஜை நடைபெற்றது. இன்று இரவு 8.00 மணிக்கு தொடங்கி இரவு 10.05 மணிக்குள் பரிஹார மஹாயாகம், மஹாபூர்ணஹூதி மற்றும் திருமஞ்சன சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து மஹா ஆரத்தி நடைபெறும். அதை தொடர்ந்து பக்தர்களுக்கு அர்ச்சனை நடைபெற உள்ளது.
மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகள் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகளாகும். வாலாஜா பேட்டையில் ராஜீவ் சிவம் தலைமையில் யாகம் நடைபெறுகிறது. குருபகவானுக்குரிய மஞ்சள் நிற ஆடை, சரக்கொன்றை,முல்லை மலர்கள், கொண்டைக்கடலை மாலை ஆகியவற்றை செலுத்தி குருபகவானின் அருளை பெறலாம்.
ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு யாகம்
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் இன்று 04.10.2018, வியாழக்கிழமை மாலை 6.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை, மற்றும் 11.10.2018 வியாழக்கிழமை காலை 10.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை இரண்டு நாட்கள் பக்தர்களின் வேண்டு கோளுக்கிணங்க குருப்பெயர்ச்சி மஹாயாகம் மற்றும் ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் விசேஷ பூஜைகள், தன்வந்திரி பீடத்தில் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
அசுப பலன்களின் தாக்கத்தில் இருந்து பெருமளவு விடுபடவேண்டியும்,சுப பலன்களான திருமணம், குழந்தைப்பேறு, தொழில், பொருளாதாரம், உயர்பதவி, அரசாங்க உதவி ஆரோக்யம் போன்றவைகளில் நன்மை பெற வேண்டி மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம் இராசி நேயர்கள் குருபுத்தி, குருதிசை, நடைபெறும் அன்பர்கள் பரிகாரம் செய்து கொள்வது மிகவும் சிறப்பு.
இந்த குரு பெயர்ச்சி யாகத்தில் வைத்திய குருவும் நோய் தீர்க்கும் கடவுளான ஸ்ரீ தன்வந்திரி பகவான் யந்திரம், டாலர், மற்றும் புகைப்படம் வைத்து ஹோம பூஜைகள் நடைபெற உள்ளது. இந்த பிரசாதங்கள் வேண்டுபவர்கள் மற்றும் ஹோம சங்கல்பத்தில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் கீழ்கண்ட முகவரியில் தொடர்புகொள்ளவும். ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203