இறைவனே பூஜித்த இன்மையில் நன்மை தருவார் ஆலயம்
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன்
நலம் தரும் ஆலயங்கள் வரிசையில் நாம் இன்று தரிசிக்கவிருப்பது இறைவன் தன்னைத் தானே பூஜித்துக்கொண்ட அருள்மிகு இன்மையில் நன்மை தருவார் திருக்கோயிலாகும். மதுரையிலுள்ள பஞ்ச பூத தலங்களில் பிருத்வி (மண்) தத்துவம் கொண்ட சிவ தலம் ஆகும்.
ஆலயத்தின் சிறப்பம்சங்கள்:
சிவபெருமான் பாண்டிய மன்னனாக பிறந்து சிவலிங்கம் அமைத்து சிவபூஜை செய்து தன்னைத்தானே வழிபட்ட தலம். மூலஸ்தானத்தில் இறைவன் திருமணக்கோலத்தில் காட்சி தருகின்ற தலங்களுள் இதுவும் ஒன்று.

சிறப்பு வாய்ந்த இத்தலத்து இறைவனை வணங்கினால் இம்மை (இப்பிறவி) மறுமை (வரும் பிறவி) பிணி (பிறவி எனும் நோய்) இவற்றையெல்லாம் நீக்கி முக்தி கிடைக்கும்.
இத்தலத்து அம்பாள் திருமண வரம், குழந்தை வரம் அருள்கிறார்.
இக்கோயில் மதுரையில் உள்ள பஞ்ச பூத தலங்களில் பிருதிவி (மண்) தலம் ஆகும்.
இத்திருக்கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. வேண்டுதல்கள் உடனுக்குடன் நிறைவேறுகிறது.
அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் ஒன்றான வளையல் விற்ற திருக்கண் மண்டபமாக விளங்குகிறது.
எல்லா சிவன் கோயில்களுக்கும் சித்தர்களே ஆதாரம். இந்த கோயிலுக்கு வல்லப சித்தர் ஆதாரமாக விளங்குகிறார்.
பதஞ்சலி முனிவர் இங்கு வந்து வழிபட்டதாக தல புராணம் கூறுகிறது.
ஸ்தல புராணம்:
மதுரையை ஆண்ட மீனாட்சி திக்விஜயம் செய்து மூன்று உலகங்களையும் வென்றார். கடைசியில் கயிலாயத்திற்கு செல்கிறார் அங்கு உலகு நாயகனான சிவபெருமானை சந்தித்த உடனே சக்தி சாந்தமடைகிறார். மீனாட்சிக்கும் சுந்தரேஸ்வரருக்கும் திருமணம் நடக்கிறது.

மதுரையில் சுந்தரேஸ்வரர் எட்டு மாதமும் மீனாட்சி நான்கு மாதமும் ஆட்சி செய்ய வேண்டும் என தீர்மானிக்கப்படுகிறது. மன்னர்கள் ஆட்சி பொறுப்பேற்கும் முன் சிவபூஜை செய்ய வேண்டும் என்பது மரபு.
இந்த மரபை தானும் கடைபிடிக்கவேண்டும் என்பதற்காக சுந்தரேஸ்வரர் தன் ஆத்மாவை சிவ லிங்கமாக பிரதிஷ்டை செய்து அதற்கு தானே பூஜை செய்து பின்பு ஆட்சி பொறுப்பேற்றுக்கொண்டார்.
இவ்வாறு சுந்தரேஸ்வரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதும் சுந்தரபாண்டிய மன்னனான அவருக்கே வரம் அருளிய லிங்கமே இம்மையிலும் நன்மை தருவார் என அழைக்கப்படுகிறது.
தலத்தின் அமைவிடம்:
மதுரை பெரியார் பேருந்து நிலையம் மற்றும் புகைவண்டி நிலையம் ஆகியவற்றிற்கு மிகவும் அருகில் நடந்து சென்று அடைந்துவிடும் தூரத்திலேயே அமைந்துள்ளது.
ஆலயத்தின் சிறப்பு தகவல்கள்:
மூலவர்: இன்மையில் நன்மை தருவார்
அம்பாள்: நடுவூர் நாயகி
சிறப்பு: பஞ்சபூத தலங்களில் மண் தத்துவ தலம்
திருவிளையாடல்: வளையல் விற்றது
சிறப்பு: தன்னையே பூஜித்தது
சித்தர்: வல்லப சித்தர்
தல விருட்சம்: தசதல விருட்சம்
ஊர்: மதுரை












Click it and Unblock the Notifications