வைகாசி விசாகம் 2018: அக்னியில் அவதரித்த அழகன் முருகன்
சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட அக்னியில் அவதரித்தவர் ஆறுமுகப் பெருமான். அவரது அவதார தினம் நிகழ்ந்தது வைகாசி விசாகம் நாளில்தான். எனவேதான் முருகக்கடவுளின் அவதாரத் திருநாளை ஆன்மீகம் மணக்க மணக
சென்னை: தமிழ் கடவுள் முருகப் பெருமானின் அவதார தினமாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் வைகாசி விசாகத் திருநாள் கொண்டாடப்படுகிறது.தீமைகளை அழிப்பதற்காக சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து அக்னி ரூபமாக அவதரித்தவர் முருகன். இந்த அவதாரம் நிகழ்ந்தது வைகாசி விசாக நாளில்தான். வைகாசி விசாக தினத்தன்று பால்குடங்கள் எடுத்தும், காவடிகள் சுமந்தும் முருகனின் பிறந்தநாளை ஆன்மீகம் மணக்க மணக்க கொண்டாடுகின்றனர்.
நட்சத்திரங்கள் இருபத்தி ஏழில், சில நட்சத்திரங்கள் இறைவனுக்கு உகந்த நட்சத்திரங்களாகவும், இறைவன் அவதாரம் எடுத்த நட்சத்திரங்களாகவும் கருதப்படுகின்றது. அந்த அடிப்படையில் வைகாசி மாதம் வரும் விசாகம் நட்சத்திரம் வடிவேலனுக்கு உகந்த நட்சத்திரமாக பக்தர்கள் அனைவராலும் கொண்டாடப்படுகிறது. விசாக தினத்தன்று வேலனை வழிபட்டால் வெற்றிகள் வந்து சேரும்.

முருகப்பெருமானுக்கு எத்தனை விழாக்கள் எடுத்தாலும், வைகாசி விசாக விழாதான் வளர்ச்சியைக் கொடுக்கும் விழாவாக அமைகின்றது. விசாக நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை தரிசித்தால் வெற்றி கிட்டும்! வேலவன் அருளால் விரும்பியது நடக்கும்! எனவே தான் திருசெந்தூர் முதல் தேசமெங்கும் முருகனது ஆலயங்களில் இந்த விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்கின்றார்கள்.
அள்ளிக்கொடுப்பதற்கு கரங்கள் அதிகமாக உள்ள தெய்வமாகவும், கூப்பிட்டதும் பறந்து வந்து உதவி செய்ய மயில் வாகனம் வைத்திருப்பதாலும் முருகப்பெருமான் மீது மக்கள் அளவிற்கு அதிகமாக பக்தி வசப்பட்டுள்ளனர். அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையா என்றும், பழத்திற்காக போட்டியிட்டு பழநி மலையில் குடிகொண்டவன் என்றும், சூரபத்மனை போராடி வெற்றிகொண்ட சத்ரு சம்ஹாரனாகவும் மக்கள் நினைத்து வழிபடும் மகத்தான தெய்வம் முருகக்கடவுள். அப்படிப்பட்ட தெய்வத்தை வழிபட நமக்கு
வைகாசி விசாகம் வழிகாட்டுகின்றது.
இந்த ஆண்டு 28.5.2018 அன்று வருகின்றது. அன்றைய தினம் பன்னிருகை வேலவனை எண்ணி விரதமிருந்து வழிபட்டால் இடையூறு சக்திகள் விலகும். லட்சியங்கள் நிறைவேறும். இந்த விசாகத் திருநாளில் முதலில் விநாயகப் பெருமானை வழிபட்டுவிட்டு, அருகில் உள்ள ஆறுபடை வீடுகளில் ஒன்றிற்குச் சென்று வழிபட்டு வரலாம். கந்தப் பெருமானை உள்ளத்திலும், இல்லத்திலும் நினைத்து வழிபட்டு வரலாம்.
வடிவேல் முருகனின் ஆலயத்திற்குச் சென்று அர்ச்சித்து வழிபடுபவர்கள், அபிஷேக ஆராதனைகளிலும் கலந்து கொண்டால் அற்புதப் பலன்கள் கிடைக்கும். வீட்டு பூஜையறையில் முருகப்பெருமான் படத்தை வைத்து வழிபடலாம். ஐந்துமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும் என்பது நம்பிக்கை. மயில் மீது ஏறி விரைந்து வந்து மால்மருகன் உங்களுக்கு வரம் தருவான்.
விசாகம் ஞானத்திற்குரிய நட்சத்திரம். வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து பால் குடம், பால் காவடி எடுத்து முருகனை வணங்கினால் ஞானமும், கல்வியும் பெருகும். துர் தேவதைகளின் கொடுமைகள் நீங்கும். வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகனை வணங்கினால் பகை விலகும். துன்பம் நீங்கும். இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர் சாதம் முதலியவற்றை ஏழைகளுக்கு தானம் செய்தால் திருமண பேறு கிட்டும். குழந்தைபேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும். ஆபத்துக்கள்
அகலும். இந்த விரதம் இருப்பவர்களுக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கப் பெறும்.
கலியுகத்தின் கண்ட தெய்வமாக விளங்குபவர் கந்தப்பெருமான். அவரது “வேலை” வணங்குவதே வேலையாக கொள்ள வேண்டிய நாள் விசாகத் திருநாளாகும். எனவே விசாகத் திருநாளில் வேலவனின் சன்னிதி சென்று வழிபட்டால் வேண்டிய வரம் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications