காதல் கிரகங்கள் செய்யும் மாயம்..நீங்க அதுக்கு சரிப்பட்டு வருவீங்களா..ஜாதகத்தில் கண்டுபிடிக்கலாம்
சென்னை: திருமணத்திற்கு வரன் பார்க்கும் போதே ஜாதகத்தை அலசி ஆராய்வது அவசியம் குடும்பம் நடத்த இவர் சரிப்பட்டு வருவாரா? ரொமான்டிக்கான ஆளா? அல்லது மூடி டைப்பா? தாம்பத்ய வாழ்க்கை எப்படி என்பதைக்கூட ஜாதகம் பார்த்து தெரிந்து கொள்ளலாம். கிரகங்களின் அமைப்பு, கூட்டணியைப் பார்த்துதான் ஜோடி சேர்க்க வேண்டும். குறிப்பாக காதல் கிரகங்களான செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை எப்படி என்று பார்த்தாலே அவர் ரொமான்டிக்கானவரா? தாம்பத்ய விசயத்தில் எப்படி என்று புரிந்து கொள்ளலாம்.
கிரகங்கள் மனதையும் உடலையும் ஆள்கின்றன. புத்தியும் மனமும் சில நேரங்களில் நவகிரகங்களின் கட்டுப்பாட்டிற்குள் போய்விடுகின்றன என்று ஜோதிடர்கள் சொல்கின்றனர். எனவேதான் உடல்நிலையோ மனநிலையோ சரியில்லை என்றால் ஜாதகத்தை கையில் எடுக்கிறோம். திருமணத்திற்கு வரன் பார்க்கும் போது ஆணோ பெண்ணோ இருவரின் ஜாதகத்தையும் அலசி ஆராய்வது அவசியம்.

சில திருமணங்கள் பாதியிலேயே பிரிய காரணம் கணவன் மனைவி இடையே ஒத்துபோகாமல் ஒருவித புரிதல் இல்லாமல் போவதுதான். முதலிலேயே சரியாக ஜாதகம் பார்த்து சேர்த்து வைத்திருந்தால் பிரச்சினைகள் வராது. பத்து பொருத்தம் பார்த்தாலும் ஜாதகப் பொருத்தம் பார்க்க வேண்டும் என்பது அதற்குத்தான். சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கு காலம் காலமாக மகிழ்ச்சியான திருமணத்திற்கு லக்கினாதிபதி எனப்படும் ஒன்றாம் வீட்டு அதிபதி குடும்ப ஸ்தானம் எனப்படும் இரண்டாம் வீட்டு அதிபதி களத்திரகாரகன் எனப்படும் ஏழாம் வீட்டு அதிபதி பலமாக இருக்க வேண்டும்.
செவ்வாய் தோஷம் இருக்காமே சேர்க்க வேண்டாம் என்பார்கள். பொதுவாக இது தோஷமல்ல உடல் ரீதியாக, பெண் அல்லது ஆணுக்கு ஏற்படும் உணர்ச்சியின் வேகத்தை கட்டுப்படுத்துவது, தூண்டுவது செவ்வாயின் செயல். கூடவே சுக்கிரன் சேர்ந்து விட்டால் போதும் சொல்லவே வேண்டாம். தாம்பத்ய உறவில் படு கெட்டியாக இருப்பார்கள் எனவேதான் அதை வெளிப்படையாக சொல்லாமல் தோஷம் ஆகாது என்று சொல்லி வைத்தார்கள்.
சூரியனைப் போல செவ்வாயும் நெருப்பு கிரகம். செவ்வாய் ரத்தகாரகன். பூமி புத்திரன் என்றும் சூரியனால் உருவாக்கப்பட்டவர் என்றும் சிவனின் வியர்வையில் இருந்து அசுரனை அழிக்க உருவாக்கப்பட்டவர் என்றும் பல புராண கதைகள் இருந்தாலும் அசுரர்களையும் அசுர குரு சுக்ராச்சாரியாரையும் அழிக்க உருவானவர் என்ற புராண கதையும் உண்டு.
செவ்வாயின் ஆட்சி வீடு மேஷம், விருச்சிகம். இங்கு செவ்வாய் 100 சதவிகித பலத்துடன் இருப்பார். மகரம் ராசியில் உச்சம் பெறும் செவ்வாய் 200 சதவிகித பலத்துடனும், கடகத்தில் நீசம் பெறும் செவ்வாய் பலம் குன்றியும் இருப்பார். அது சரி செவ்வாய் அசுரர்களையும், சுக்கிரனையும் அழித்தாரா என்றால் அசுரர்களை அழித்த செவ்வாயுடன் சுக்கிரன் ரகசியமாக ஒப்பந்தம் போட்டுக்கொண்டார் அங்கேதானே தந்திரமே இருக்கு அது என்ன என்று பார்க்கலாம்.
தன்னை அழிக்க வந்த செவ்வாயை ரகசியமாக பேசி நவகிரகங்களில் ஒன்றாக அங்கீகாரம் கொடுக்க வைக்கிறேன் என்று சொல்லி பேசி சரி செய்து தப்பித்துக்கொண்டார் சுக்கிரன். சூரியனால் உருவாக்கப்பட்ட செவ்வாய் அசுர குருவான சுக்கிரனுடன் ரகசியமாக கூட்டணி சேர்ந்து கொண்டார். இந்த கூட்டணியின்படி ஜாதகத்தில் ஒரு ராசியில் செவ்வாய் சுக்கிரன் சேர்ந்திருக்கும் ஆணோ, பெண்ணோ அந்த விசயத்தில் கொஞ்சம் வேகமாகத்தான் இருப்பார்கள். கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவுகள் இருந்தாலும் குழந்தைகளை பெற்றுக்கொள்வதிலும் சந்தோச சமாச்சாரத்திலும் குறையே வைக்கமாட்டார்கள்.
சுக்கிரன் சுப கிரகமாக இருந்தாலும் காம உணர்வு கொண்டவர். ஆண்களுக்கு சுக்கிலத்தை தரக்கூடியவர். செவ்வாய் அனுபவிக்கும் சக்தியும் வேகத்தையும் உடலில் உண்டாகும் சூட்டையும் ஏற்படுத்தி அதற்கு தயார் படுத்தி தகுதியே தருபவர். எனவேதான் காம உணர்வை தூண்டக்கூடிய கிரக அமைப்பை பெற்றவர்கள் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்கின்றனர்.

ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் சுக்கிரன் இருவரும் நான்கு, ஏழு, எட்டு, பனிரெண்டு ஆகிய வீடுகளில் கூட்டணியாக இருந்தால் அதே போல அமைந்துள்ள ஜாதகம் பார்த்து திருமணம் செய்ய வேண்டும். எனவேதான் பூட்டுக்கு ஏற்ற சரியான சாவியை தேடி இணைக்கின்றனர் ஜோதிடர்கள். சரியான ஜோடி சேர்க்காவிட்டால் தறிகெட்டு அலைய காரணமாகிறது. செவ்வாய், சுக்கிரன் சேர்க்கை பெற்றிருப்பவர்களுக்கு செவ்வாய் தசை அல்லது சுக்கிர தசை வரும் போதுதான் பாலியல் உணர்வுகள் வித்தியாசப்படும். அந்தக் காலகட்டத்தை அவர்கள் கடந்துவிட்டால் அதன் பின்னர் பிரச்சனைகள் வராது.
காதலுக்கு மென்மையான உணர்வும், நல்ல உள்ளமும் வேண்டும். அதற்குரிய கிரகங்கள் சுக்கிரனும், சந்திரனும் ஆகும். இந்த இரண்டு கிரகங்களும் வலுவாக இருந்தால் காதல் உண்டாகும். சுக்கிரனும், சந்திரனும் சமபலத்தோடு இருப்பவர்களுக்குக் காதலில் வெற்றி உண்டாகும். சுக்கிரனும், சந்திரனும் கேந்திரத்தில் இருந்தாலோ அல்லது திரிகோணத்தில் இருந்தாலோ காதல் அரும்பும். அது வெற்றியில் முடியும். இல்லை என்றால் இல்லை.
ஜாதகத்தில் சுப யோகங்கள் இருந்தால், அது எந்த வழிக் கல்யாணம் என்றாலும் தம்பதிகள் மனம் ஒத்து மகிழ்வோடு வாழ்வார்கள். அதே சுக்கிரனும், சந்திரனும், சொந்த வீட்டில் இருந்தாலும் அல்லது நட்பு வீட்டில் இருந்தாலும், குருவின் பார்வை பெற்றால் அல்லது சேர்க்கை பெற்றால் பலமுடையவர்கள் ஆவார்கள். அவர்களின் இந்த நிலைப்பாட்டைக் கொண்ட ஜாதகன் அல்லது ஜாதகியின் மணவாழ்வும் சிறக்கும். மகிழ்வுடையதாக இருக்கும். ஏழாம் வீட்டின் அதிபதியும், லக்கின அதிபதியும் பலமாக இருந்தால் திருமண வாழ்வு மகிழ்ச்சிக்கு உரியதாக இருக்கும்.
செவ்வாய், சுக்கிரன் சேர்க்கையை குரு பார்த்தாலும் அல்லது செவ்வாய், சுக்கிரன் சேர்க்கை குருவின் நட்சத்திரத்தில் இருந்தாலும் பலன்கள் மாறுபடும். அவர்களின் பாலியல் உணர்வு சாதாரணமாகவே இருக்கும். எனவேதான் ஜாதகத்தில் செவ்வாய், சுக்கிரன், ராகு, சந்திரன் பாதிக்கப்பட்டவர்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து புற்றுள்ள கோவில்களில் பால் ஊற்றி இறைவனை வணங்கினால் பாதிப்பில் இருந்து விடுபடலாம். செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை பல நன்மைகளையும் செய்கிறது.












Click it and Unblock the Notifications