மதுரை சித்திரை திருவிழா கோலாகலம்...12ல் மீனாட்சி பட்டாபிஷேகம் 14ல் திருக்கல்யாணம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது. 12ம் தேதி மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகமும், 14ஆம் தேதி திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது.
மதுரை: மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கி உள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பட்டாபிஷேகம் 12ஆம் தேதியும் 14ஆம் தேதி திருக்கல்யாணமும், 15ஆம் தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது.
உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழா நடந்தாலும், பிரம்மோற்சவ விழாவாக கொண்டாடப்படும் சித்திரை திருவிழாவே நகர் மற்றும் சுற்றுப்பகுதி மக்கள் இடையே முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கோவில் உள் வளாகத்திலேயே பக்தர்கள் இன்றி நடத்தப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து பக்தர்கள் பங்கேற்புடன் நடைபெறுகிறது. இந்த ஆண்டு சித்திரை திருவிழாவில் சுவாமி வழக்கம் போல் காலை, இரவு என இருவேளையும் மாசி வீதியை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளனர்.

கொடியேற்றம் கோலாகலம்
உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழா இன்று காலை 10.35 மணிக்கு மேல் 10.54 மணிக்குள் மிதுன லக்கனத்தில் சுவாமி சன்னதியில் உள்ள தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இன்றைய தினத்தில் இருந்து மீனாட்சி அம்மனும் பிரியா விடையுடன் சுந்தரேசுவரரும் காலை, இரவு என இரண்டு நேரங்களிலும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருவர்.

மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்
விழாவில் வருகிற 12ஆம் தேதி முக்கிய நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், 13ஆம் தேதி திக்விஜயமும் நடைபெறுகிறது. சித்திரை மாதம் முதல் மதுரையில் மீனட்சி ஆட்சி நடைபெறுகிறது என்பது ஐதீகம். சித்திரை முதல் ஆவணி மாதம் வரை அம்மன் செங்கோல் ஏந்தி அரசாட்சி செய்கிறார் என்பது மதுரை மக்களின் நம்பிக்கையாகும்.

மீனாட்சி திருக்கல்யாணம்
விழாவில் சிகர நிகழ்ச்சியாக தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ஆம் தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. அன்றைய தினம் காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் திருக்கல்யாண நிகழ்வுகள் மேற்கு, தெற்கு ஆடி வீதி சந்திப்பில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறும். திருக்கல்யாணத்தை காண வரும் பக்தர்களின் வசதிக்காக ரூ.200, ரூ.500 கட்டண சீட்டுகளும், தெற்கு கோபுரம் வழியாக பக்தர்கள் கட்டணமில்லா தரிசன முறையில் முதலில் வருபவர்களுக்கு முதலில் அனுமதி என்ற முறையிலும் சுமார் 12 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான கட்டணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி கோவில் இணையதளத்தில் (WWW.maduraimeenakshi.Org) இன்று முதல் 7ஆம் தேதி வரை பெறும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. திருக்கல்யாண விழாவில் இரவு மீனாட்சி அம்மன் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி காட்சி அளிக்கிறார்.

சித்திரைத் தேரோட்டம்
திருக்கல்யாணத்திற்கு மறுநாள் வருகிற 15ஆம் தேதி மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து 16ஆம் தேதி தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது. திருவிழா நாட்களில் மீனாட்சி-சுந்தரேசுவரர், பஞ்சமூர்த்திகளுடன் காலை, இரவு இரு வேளைகளிலும் 4 மாசி வீதிகளில் வலம் வந்து காட்சி அளிப்பர்.

கள்ளழகர் வைகையில் எழுந்தருளல்
15ஆம் தேதியன்று தல்லாகுளத்தில் எதிர் சேவை நடைபெறுகிறது. ஏப்ரல் 16, 2022 காலையில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார். 17ஆம் தேதி வண்டியூர் தேனுர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அளிக்கிறார். இரண்டாண்டுகளுக்குப் பிறகு சித்திரைத் திருவிழா நடைபெற உள்ளதால் பல லட்சக்கணக்கான மக்கள் மதுரைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மதுரை குலுங்க குலுங்க இந்த ஆண்டு சித்திரை திருவிழா நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications