அழகர் வாராரு..மீனாட்சி கல்யாணம்,வைகையில் இறங்கும் கள்ளழகர்..மதுரை சித்திரை திருவிழா முழு விபரம்
மதுரை சித்திரை திருவிழாவிற்கு மீனாட்சி அம்மன் கோவிலும் கள்ளழகர் கோவிலும் தயாராகி வருகிறது. மே 5ஆம் தேதி கள்ளழகர் வைகையில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
மதுரை: சித்திரை திருவிழா மதுரையில் ஏப்ரல் 23ஆம் தேதி கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. மே 2ஆம் தேதி திருக்கல்யாணமும், மே 3ஆம் தேதி சித்திரை தேரோட்டமும் நடைபெற உள்ளது. மே 5ம் தேதி சித்ரா பௌர்ணமி நாளில் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் மதுரையில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழா நடந்தாலும், பிரம்மோற்சவ விழாவாக கொண்டாடப்படும் சித்திரை திருவிழாவே நகர் மற்றும் சுற்றுப்பகுதி மக்கள் இடையே முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது. அதே போல அழகர்கோவில் கள்ளழகர் ஆலயத்தில் சித்திரை திருவிழா, ஆடி பிரம்மோற்சவம்,மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி விழாக்கள் சிறப்பாக நடைபெறும்.

இந்த ஆண்டு சித்திரை திருவிழா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏப்ரல் மாதம் இறுதியில் தொடங்க உள்ளது. மதுரை கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழாவின் முதல் நிகழ்ச்சியான சப்பர முகூர்த்தம் ஜனவரி 26ம் தேதி தொடங்கியது.
சித்திரைப் பெருந்திருவிழாவின் முதல் நிகழ்ச்சியான சப்பர முகூர்த்தம் கடந்த தை மாதம் 12ஆம் தேதி வியாழக்கிழமையன்று தல்லாகுளம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயிலில் காலை 8.15 மணி முதல் 9.00 மணிக்குள் ஸ்தலாங்கம் பார்க்கும் நிகழ்ச்சியும், பிற்பகல் 3.15 மணிக்கு மேல் 4.15 மணிக்குள் மிதுன லக்னத்தில் சப்பர முகூர்த்த நிகழ்ச்சியும் நடைபெற்றது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தை பூச தெப்பத்திருவிழா சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது. மாசி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பங்குனி உத்திர திருவிழாக்கள் முடிந்த பின்னர் சித்திரை மாதம் திருவிழா தொடங்கும். கொடியேற்றம் தொடங்கி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதை வரைக்கும் பல லட்சம் பக்தர்கள் மதுரைக்கு வருவார்கள்.
இந்த ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா தொடங்க உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெற உள்ளது. மே 1ஆம் தேதி மீனாட்சி அம்மன் திக் விஜயமும், மே 2ஆம் தேதி மீனாட்சி திருக்கல்யாணமும் நடைபெறும். மே 3ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும். இந்த விழாக்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.

வைகை ஆற்றில் இறங்குவதற்காக கண்டாங்கி புடவை கட்டி தங்க பல்லாக்கில் அதிர்வேட்டு முழங்க அழகர் கோவிலில் இருந்து மதுரைக்கு வருவார் கள்ளழகர். தங்களை காண வரும் அழகரை பக்தர்கள் விடிய விடிய காத்திருந்து எதிர்கொண்டு அழைப்பார்கள். எதிர்சேவை முடிந்து தல்லாகுளம் பெருமாள் கோவிலில் தங்குவார் கள்ளழகர். திருமஞ்சனம் முடிந்து தங்க குதிரை வாகனத்தின் மீதேறி மே 5ஆம் தேதி சித்ரா பவுர்ணமி நாளில் கள்ளழகர் வைகையில் எழுந்தருளுவார். அப்போது பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து நேர்த்திக்கடனை நிறைவேற்றுவார்கள்.
மீனாட்சி திருக்கல்யாணம், சித்திரை தேரோட்டம், கள்ளழகர் வைகையில் இறங்குவதை காண தென் மாவட்ட மக்கள் மட்டுமல்லாது தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மதுரைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் சிறப்பான ஏற்பாடுகள் செய்ய அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications