மகத்துவம் நிறைந்த மார்கழி பிறக்குது - பாவை நோன்பு இருங்க பலன் நிச்சயம்
மகத்துவம் நிறைந்த மார்கழி மாதம் பிறக்கப்போகிறது. இதுநாள் வரை விருச்சிகத்தில் இருந்த சூரியன் இனி தனுசு ராசியில் சனியோடும் கேது உடனும் குடியேறப்போகிறார். மார்கழி மாதத்தில் 30 நாட்களும் ஆலய தரிசனம் செய்
சென்னை: கார்த்திகை மாதம் முடிந்து மார்கழி பிறக்கிறது. மாதங்களில் நான் மார்கழி என்று அந்த மகாவிஷ்ணுவே கூறியுள்ளார். சிறப்புகள் நிறைந்த மார்கழியில் அதிகாலையில் குளித்து விட்டு பாவை நோன்பு இருந்தால் மனதிற்கு பிடித்த கண்ணுக்கு நிறைந்த கணவன் கிடைப்பார் என்பது நம்பிக்கை.
இந்த மாதம் தனுசு ராசியில் குருவின் வீட்டில் சூரியன் குடியேறுகிறார்.
மகத்துவம் நிறைந்த மார்கழியில் உலக நாட்டங்களைக் குறைத்து, இறைவனிடமும் அவர் திருவடி சார்ந்த செயல்பாடுகளிலுமே மனம் ஒன்ற வேண்டும் என்பதற்காகத்தான் வேறெந்த நிகழ்வுகளையும் நடக்காமல் பார்த்துக் கொண்டார்கள். அதன் வழியொட்டியே மார்கழியில் சுப நிகழ்வுகளைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அதே நேரம் இறைவனிடம் மனம் லயிக்க வேண்டும் என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும்.
நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். தை மாதம் தொடங்கி ஆனி வரை அவர்களுக்குப் பகல் பொழுதாகவும், ஆடி மாதம் முதல் மார்கழி வரை இரவுப்பொழுதாகவும் அமையும். அப்படிப் பார்க்கும்போது அதிகாலையான பிரம்ம முகூர்த்தம் மார்கழியில்தான் வருகிறது. தேவர்களுக்கே பிரம்ம முகூர்த்தமாக இருக்கிறபடியால், மார்கழி மாதம் மானிடர்களுக்கும் சிறந்ததாகிறது. இந்த நேரத்தில் ஆலயங்களுக்கு செல்வது அற்புதமான அனுபவமாக அமையும்.
அதிகாலை குளியல்
மார்கழியில் அதிகாலை எழுந்து குளிப்பது உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி தரும். சூரியனிடம் இருந்து வருகிற ஓசோனின் தாக்கம் மார்கழி அதிகாலையில் அதிகமாக இருக்கும். இதனால் அதிகாலையில் வெளியே வருவதால் அந்தக் காற்றும், கதிரும் உடலை வலிமைப்படுத்தும் என்பதால்தான் அதிகாலை குளியலை முன்னோர்கள் அறிமுகம் செய்திருக்கிறார்கள்.
வைகுண்ட ஏகாதசி
மகாவிஷ்ணுவுக்கு உகந்த வைகுண்ட ஏகாதசி வருவது மார்கழியில்தான். பெண்கள் அதிகாலையில் நீராடி பாவை நோன்பு நோற்று பெருமாளை வணங்கி திருப்பாவை பாடுகின்றனர். அந்த கண்ணனே தங்களுக்கு கணவனாக வரவேண்டும் என்பது பல பெண்களின் கனவாக உள்ளது. இத்தனை சிறப்புவாய்ந்த மார்கழியில் அதிகாலையில் குளித்து விட்டு விஷ்ணுசகஸ்ரநாமம் படிப்பது மற்றும் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களையும் படித்துவந்தால் தெய்வீக அருள் கிடைக்கும்.
ஆருத்ரா தரிசனம்
மார்கழி மாதத்தில்தான் சிவனுக்கு உகந்த திருவாதிரையும் வருகிறது. சிவபெருமானின் பக்தைகள் நோன்பு நோற்பதற்காகத் தோழியை எழுப்பச் செல்லும் காட்சி திருவெம்பாவையிலும் வருகிறது. சிவனுடைய அடியார்களே கணவனாக வர வேண்டும், அவனோடு சேர்ந்து சிவனைத் தொழ வேண்டும் என்பதே திருவெம்பாவையில் வருகிற பாவை நோன்பின் நோக்கம்.
அதிகாலை கோலம்
மார்கழி மாதத்தில் பெண்கள் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு வாசலில் கோலமிடுவது தொன்றுதொட்டு நடந்துவருகிறது. மாட்டுச்சாணத்தில் பிள்ளையார் பிடித்துவைத்து வழிபடுவதும் நடக்கும். மாட்டுச்சாண உருண்டையில் பூசணிப்பூவை செருகி, கோலத்துக்கு நடுவே வைப்பது மார்கழி முழுக்கவே நடைபெறும். சில வீடுகளில் அந்தப் பூ உருண்டையை வரட்டியாகத் தட்டுவார்கள். வரட்டிகளாக தட்டியதை சேகரித்து சிறுவீட்டு பொங்கலன்று ஆற்றில் விடுவார்கள்.
மார்கழி சிறப்பு தினங்கள்
மார்கழி மாதத்தில் பல சிறப்புகள் உள்ளன. இந்த ஆண்டு மார்கழியில் எந்த நாளில் என்னென்ன விஷேசங்கள் நடைபெறுகின்றன என்று பார்க்கலாம். மார்கழி 1ஆம் தேதி டிசம்பர் 17 மாத பிறப்பு தொடங்குகிறது. டிசம்பர் 25,26ஆம் தேதி மார்கழி 9ஆம் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அனுமனை வழிபட நன்மைகள் நடைபெறும். மார்கழி 21 ஜனவரி 6, 2020 வைகுண்ட ஏகாதசி விழா பெருமாள் ஆலயங்களில் சொர்க்கவாசல் திறக்கப்படும். மார்கழி 25, ஜனவரி 10 ஆம் நாள் ஸ்ரீ ஆருத்ரா தரிசனம் இன்று நடராஜரை வழிபடலாம். மார்கழி 27ஆம் தேதி ஜனவரி 10 கூடாரவல்லி அதிகாலை பெருமாள் கோவிலுக்கு சென்று வணங்க நன்மைகள் நடைபெறும். மார்கழி 29 ஜனவரி 14 ஹோலிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.