பழனி மலைக்கு முருகனைப் பார்க்க போறீங்களா? - ஜனவரி 20ல் 5 மணிநேரம் மூலவரை தரிசிக்க முடியாது
திண்டுக்கல்: பழனி மலைக்கோவிலில் நடைபெற இருக்கும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 13 ஆண்டுகளுக்கு பின்பு மூலவர் பீடத்தில் மருந்து சாத்தும் நிகழ்ச்சி வரும் ஜனவரி 20ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக அன்றைய தினம் காலை 6:30 மணி முதல் 10:30 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. காலை 10:30 மணிக்கு மேவ் வழக்கம் போல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
அறுபடை வீடுகளில் மூன்றாவது படைவீடாக விளங்குவது திரு ஆவினன்குடி என போற்றப்படும் பழனி பலை. இக்கோவிரின் மூலவரான பால தண்டாயுதபாணி சிலையானது, அகத்தியரின் நேரடி சீடரான போகர் சித்தரால் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் முழுக்க முழுக்க நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது. இதனாலேயே நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனியாண்டவரை தரிசித்து செல்வதுண்டு.

பழனி மலைக்கோவிலின் கும்பாபிஷேகம் கடந்த 2006ஆம் ஆண்டு நடைபெற்றது. ராஜகோபுரம் கட்டப்பட்ட அனைத்து இந்துமத கோவில்கள் அனைத்திலும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கண்டிப்பாக கும்பாபிஷேகம் நடத்தப்படவேண்டும் என்பது ஆகமவிதியாகும். அதன்படி கடந்த 2018ஆம் ஆண்டு நடந்திருக்க வேண்டும். ஆனால் சில பல தவிர்க்க முடியாத அரசியல் காரணங்களால் கும்பாபிஷேகம் நடைபெறவில்லை.
இந்நிலையில், இந்த ஆண்டு கும்பாஷேகம் நடத்த பழனி மலைக்கோவில் அறங்காவலர் குழுவும் இந்து சமய அறநிலையத்துறையும் முடிவெடுத்தன. அதன்படி கும்பாபிஷேகப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. முதற்கட்டமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாலாலய பூஜை நடைபெற்றது. அதனையடுத்து கும்பாபிஷேக திருப்பணிகள் வேகம் பெற்று தொடர்ந்து நடந்து வருகின்றன.
தற்போது, கும்பாபிஷேக திருப்பணியின் முக்கிய நிகழ்வாக பழனி மலைக்கோவிலின் மூலவரான பால தண்டாயுதபாணி சிலை அமைந்ததிருக்கும் மூலவர் பீடத்திற்கு அஷ்டபந்தன மருந்து சாத்தும் நிகழ்ச்சி வரும் ஜனவரி 20ஆம் தேதி நடைபெற உள்ளது. அதையொட்டி, அன்றைய தினம் அதிகாலை 5:30 மணிக்கு மலைக்கோவில் சன்னதி திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனமும், அதிகாலை 5:40 மணிக்கு பூஜையும், காலை 6:10 மணிக்கு சிறு காலசாந்தி பூஜையும், 6:20 மணிக்கு காலசாந்தி பூஜையும் நடைபெற உள்ளது.

அஷ்டபந்தன மருந்து சாத்துவதற்காக காலை 6:30 மணி முதல் கோவிலில் உள்ள சண்முகர் சன்னதியில் சிறப்பு பூஜைகளும் யாகசாலை பூஜைகளும் நடைபெறும். அதைத் தொடர்ந்து காலை 9:45 மணிக்கு மேல் காலை 10:30 மணிக்குள் மூலவர் பீடத்திற்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பின்னர் மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், கலச அபிஷேகமும் நடைபெறும். அதன் காரணமாக, வரும் ஜனவரி 20ஆம் தேதி காலை 6:30 மணி முதல் காலை 10:30 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பின்பு, காலை 10:30 மணிக்கு மேல் வழக்கம் போல், பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.












Click it and Unblock the Notifications