புரட்டாசி மாத ராசிபலன்கள் 2021: ரிஷப ராசிக்காரர்களே நினைத்த காரியம் நிறைவேறும்
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம். கன்னி ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம். இந்த மாதத்தில் கிரகங்களின் கூட்டணி கன்னி ராசியில் இணைகிறது. ரிஷப ராசிக்காரர்களுக்கு புரட்டாசி மாதம் வெற்றிகரமான மாதமாக அமைந்துள்ளது.
சென்னை: புண்ணியம் நிறைந்த புரட்டாசி மாதம் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு நினைத்த காரியம் நிறைவேறும் வெற்றிகரமான மாதமாக அமைந்துள்ளது. புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி ராசியில் பயணம் செய்வதால் கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. கன்னி ராசி புதன் உச்சம் பெற்று சஞ்சரிக்கும் இந்த மாதத்தில் சூரியன் இணைந்து பயணம் செய்வது சிறப்பு இந்த மாதத்தில் சூரியன், புதன் உடன் கூடவே செவ்வாயும் கூட்டணி அமைத்து பயணம் செய்கிறார்.
புரட்டாசி பிறக்கும் போது ரிஷபத்தில் ராகு, கன்னி ராசியில் சூரியன்,புதன், செவ்வாய், துலாம் ராசியில் சுக்கிரன், விருச்சிகத்தில் கேது, மகர ராசியில் சனி, குரு என கிரகங்கள் பயணம் செய்கின்றன. புரட்டாசியில் கிரகங்களின் மாற்றம் உள்ளது. கன்னி ராசியில் இருக்கும் புதன் புரட்டாசி 6 ஆம் தேதி துலாம் ராசிக்கு நகர்கிறார். 11ஆம் தேதி புதன் வக்ர ஆரம்பமாகிறது. 15ஆம் தேதி மீண்டும் கன்னி ராசிக்கு புதன் செல்கிறார். சுக்கிரன் 16ஆம் தேதி விருச்சிக ராசிக்கு செல்கிறார். 25 ஆம் தேதி சனிபகவான் வக்ரம் முடிந்து நேர்கதியில் பயணம் செய்கிறார்.
புரட்டாசி மாதம் முழுக்க விரத நாட்கள்தான். முன்னோர்களை வணங்கும் மாதம். அம்மனுக்காக நவராத்திரி பண்டிகை கொண்டாடும் மாதம். 17-09-2020 முதல் 16-10-2020 வரை புரட்டாசி மாதத்தில் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ன பரிகாரம் செய்யலாம் என்பது பற்றியும் சந்திராஷ்டம நாட்களையும் பார்க்கலாம்.
சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்களே, இந்த மாதம் உங்கள் ராசிக்கு கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ராசிக்குள் ராகு, ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன், புதன், செவ்வாய் பயணம் செய்கின்றனர். ஆறாவது வீட்டில் ராசிநாதன் ஆட்சி பெற்று பயணம் செய்கிறார். மாத பிற்பகுதியில் ஏழாம் வீட்டிற்கு சென்று கேது உடன் இணைகிறார். ஒன்பதாம் வீட்டில் சனி, குரு ஆகிய கிரகங்கள் இணைந்து பயணம் செய்கின்றன. உங்கள் ராசிக்கு இந்த மாதம் முதல் குருவின் பார்வை கிடைப்பதால் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினை நீங்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மன குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். திருமணம் சுப காரிய பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவுக்கு வரும்.
கணவன் மனைவி இடையே ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வீடு வண்டி வாகனம் வாங்கும் யோகம் வந்துள்ளது. இந்த மாதம் பண வரவு அதிகரிக்கும். கூடவே செலவுகளும் வரும். பொருளாதார நிலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வீடு கட்ட நிலம் வாங்குவீர்கள்.
கலைத்துறையை சேர்ந்தவர்களுக்கு இந்த மாதம் யோகம் நிறைந்த மாதம். புதிய வாய்ப்புகள் வரும். சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும் பாராட்டுகள் தேடி வரும். பதவி உயர்வும் வரும். நினைத்ததை சாதிப்பீர்கள். பெண்களுக்கு பொன் பொருள் சேரும். அடகு வைத்த நகையை மீட்பீர்கள். உடன் பிறந்தவர்கள் வீட்டில் சுப காரியம் நடைபெறும். சனியும்,குருவும் வக்ர நிவர்த்தியாகி பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் ஆலய தரிசனம் செய்வீர்கள்.
3 நாட்கள்தான்.. ஆளுநராக சனிக்கிழமை பதவி ஏற்கும் ஆ.என் ரவி.. களமிறக்கப்பட்டது ஏன்? என்ன காரணம்?
ராசிக்கு நான்காம் அதிபதி ஐந்தாம் வீட்டில் புத ஆதிபத்ய யோகத்தோடு பயணம் செய்கிறார். பேச்சில் கவனம் தேவை. உறவினர்கள் நண்பர்களிம் பேசும் போது விட்டுக்கொடுத்து செல்லவும். ஆலய தரிசனம் மன அமைதியைத் தரும். சனிப்பிரதோஷம், சோமவார பிரதோஷ நாளில் சிவ ஆலயம் சென்று தரிசனம் செய்து வருவது நன்மையைத் தரும். முன்னோர்களுக்கு மகாளய அமாவாசை நாளில் திதி கொடுத்து வழிபடுவது நல்லது. இந்த மாதத்தில் புரட்டாசி 25 முதல் 27 வரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவைப்படும் மாதமாகும்.