சூரியன், சந்திரனை ராகு கேது விழுங்குவது கிரகணமா? #Rahukethupeyarchi
சூரியன், சந்திரன் கிரகணம் ஏன் ஏற்படுகிறது, ராகு கேது பெயர்ச்சிக்கும் இதற்கும் தொடர்பு இருக்கிறதா என்றும் பார்க்கலாம்.
சென்னை: மனித தலையும் பாம்பு உடலும் கூடியவன் ராகு எனவும், பாம்பு தலையும் மனித உடலும் கூடியவன் கேது எனவும் அழைக்கப்படுகின்றனர். இருவருக்கும் உயிர் ஒன்றுதான். இருவரும் நேர் எதிர்திசையில் நட்சத்திர மண்டலத்தில் சஞ்சரிக்கின்றர். இவர்களுக்கு ஏன் இப்படி ஆயிற்று என்பது பற்றி புராண கதைகள் உள்ளன. ராகு கேது பெயர்ச்சி நிகழ உள்ள இந்த சமயத்தில் அவர்களின் கதையை தெரிந்து கொள்வது அவசியம்
சூரியன், சந்திரனை பழிவாங்க ராகுவும் கேதுவும் பிரம்மனை நினைத்து பல காலம் தவமிருந்து வரம் பெற்றனர். இவ்வரத்தின்படி ஒரு ஆண்டில் நான்கு முறை சூரிய சந்திரர்களின் பார்வை பூமியில் விழாது தடுக்கும் வரத்தை கொடுத்தார் எனவும் இதுவே கிரகணம் எனப்படுவதாகவும் புராண கதைகள் கூறுகின்றன.
அமிர்தம் பருகினால் அதிக பலமும் மரணமில்லா பெருவாழ்வும் வாழலாம் என்பதை உணர்ந்த தேவர்கள் பாற்கடலை கடைந்தனர். மலையை மத்தாக்கி வாசுகி பாம்பை கயிறாக்கி தேவர்களும் அசுரர்களும் இணைந்து பாற்கடலைக் கடைந்த போது அமிர்தம் வெளிப்பட்டது அதனை தேவர்களும் அசுரர்களும் சரிபாதியாக பங்கிட்டுக் கொள்ளுவது என்பதே ஒப்பந்தம்.

மோகினி வடிவம் கொண்ட விஷ்ணு
அசுரர்களும் அமிர்தத்தை பருகினால் அவர்களை சமாளிப்பது கஷ்டம் என்பதை உணர்ந்த தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட்டனர். அசுரர்களுக்கு அமிர்தம் கிடைப்பதை தடுக்க நினைத்த மகா விஷ்ணு மோகினி வடிவம் எடுத்து வந்தார். அமிர்தகலசம் தன்வந்திரியின் கையில் இருந்தது. அதனை மோகினி வாங்கிக் கொண்டாள். அவளது அழகில் மயங்கிய அசுரர்கள் மோகினியே அனைவருக்கும் பரிமாறட்டும் என கூறிவிட்டனர். தேவர்களும் ஒப்புக் கொண்டனர். யாருக்கு முதலில் அமிர்தத்தை தருவது என்ற பிரச்சினை எழுந்தது. மேலே தெளிவாக உள்ள நீரை தேவர்களுக்கும் அடியில் கலங்கி இருக்கும் திரவத்தை அசுரர்களுக்கும் கொடுப்பது என்று முடிவாயிற்று. முதலில் தேவர்களுக்கு அமிர்தம் வழங்கப்பட்டது.

அசுரனுக்கும் அமிர்தம்
கஸ்யப மஹரிஷியின் மகனான சுவர்பானுவிற்கு மோகினியின் வருகையும் அமிர்தம் பரிமாறுவதிலும் ஏதோ சதி உள்ளது எனவும் சந்தேகப்பட்டான். எங்கே அமிர்தம் கிடைக்காமல் போய் விடுமோ என அஞ்சி மாறு வேடத்தில் தேவர்கள் வரிசையில் அமர்ந்தான். இதனை சூரியனும், சந்திரனும் பார்த்து விட்டனர். இதற்குள் மோகினி ஸ்வர்பானுவுக்கு அமிர்தம் அளித்து விட்டார். அவனும் அவசர அவசரமாக பருகி விட்டான். சுவார்பானு மாறுவேடத்தில் வந்தது மகாவிஷ்ணுவிற்கு தெரியாதா என்ன தெரிந்தேதான் அமிர்தம் கொடுத்தார். அதுவும் ஒரு காரணத்தோடுதான்.

வெட்டுப்பட்ட சுவர்பானு
இதை அறியாத சூரியனும் சந்திரனும் உடனே மோகினியிடம் சென்று நடந்தவற்றை கூறவே, மகா விஷ்ணு கோபத்தோடு தன் கையில் இருந்த அகப்பையால் ஸ்வர்பானுவின் தலையில் ஓங்கி தட்டினார். தலைவேறு, முண்டம் வேறு என இருகூறுகளாயிற்று அமிர்தம் உண்ட காரணத்தால் உயிர் போகவில்லை. ஒப்பந்தத்தை மீறியதால் அசுரர்களுக்கு அமிர்தம் வழங்க முடியாது என மோகினி கூறிவிட்டாள்.
அமிர்த கலசத்தை பறிக்க அசுரர்கள் முயல, மோகினி வேகவேகமாக அனைத்தையும் தேவர்களுக்கு அளித்து விட்டார். ஏமாற்றமடைந்த அசுரர்கள் சுவர்பானுவால்தான் தங்களுக்கு அமிர்தம் கிடைக்கவில்லை என வருந்தி சுவர்பானுவை தங்கள் குலத்திலிருந்து விலக்கி வைத்துவிட்டனர்.

பாம்பு தலை மனித உடல்
இரு உடலாக கிடந்தாலும் உடல் இருந்தும் தலை இல்லாமலும், தலை இருந்து உடல் இல்லாமலும் இருந்த ஸ்வர்பானு, பிரமனிடம் முறையிட்டார். மகா விஷ்ணுவால்தான் இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய இயலும்' என்று கூறிவிட்டார் பிரம்மன். விஷ்ணுவை வணங்கிய சுவர்பானு பிராயச்சித்தம் செய்யும்படி கேட்டான். உடனே பாம்பு உடலை கொடுத்து தலையுடன் பொருத்தினார் விஷ்ணு.
அதேபோல் பாம்புத்தலையை மனித உடலுடன் பொருத்தினார். மனித தலையும் பாம்பு உடலும் கூடியவன் ராகு எனவும், பாம்பு தலையும் மனித உடலும் கூடியவன் கேது எனவும் அழைக்கப்பட்டனர். ஆனால் இருவருக்கும் உயிர் ஒன்றுதான். இருவரும் நேர் எதிர்திசையில் நட்சத்திர மண்டலத்தில் சஞ்சரிக்கும் படி கூறி அருள் பாலித்தார்.

பாவம் நீங்குவது எப்படி
ராகு கேது உருவானவுடன் மகாவிஷ்ணு இப்பூவுலகில் கிருதாயுகம் நடைபெறுகிறது. இப்போது உங்களுக்கு வேலை இல்லை, நட்சத்திர மண்டலத்தில் சஞ்சரிக்க இன்னும் ஒரு யுகம் பொருத்திருக்க வேண்டும் என்றார். அடுத்த யுகமான திரேதாயுதத்தில் நான் ராமனாக மனிதகுலத்தில் பிறப்பேன். அப்போது உங்கள் சக்தியால் ராகு கோதண்ட மாகவும் (வில்) கேது அம்பாகவும் என்னிடம் வருவீர்கள்.
அசுரகுல கடைசி அரசனான ராவணனை கொல்வதற்கு நீங்கள் பயன்படுவீர்கள். அப்போது உங்கள் பாவம் தொலையும் என்றார். நீங்கள் வித்தியாசம் தெரிவதற்காக மற்ற கிரகங்களைப் போல் இல்லாமல் வானவெளியில் அப்ரதட்சணமாக வலமிருந்து இடமாக சுற்றி வருவீர்கள் என்று வாக்களித்தார் ராமன்

சூரிய, சந்திர கிரகணங்கள்
ராகுவும் கேதுவும் தங்களின் இந்த நிலைக்கு காரணமான சூரிய சந்திரர்களை பழிவாங்க பிரம்மனிடம் வரம் கேட்டனர். அந்த வரத்தை பிரம்மன் தர மறுத்தார். பல காலம் தவமிருந்து பிரம்மனிடம் வரம் பெற்றனர். இவ்வரத்தின்படி ஒரு ஆண்டில் நான்கு முறை சூரிய சந்திரர்களின் பார்வை பூமியில் விழாது தடுக்கும் வரத்தை கொடுத்தார். இதுவே கிரகணம் எனப்படுகிறது. சூரியனையும், சந்திரனையும் பாம்பு விழுங்கும் என்றும் இன்றைக்கும் கதைகள் உலா வருகின்றனர். ஆனால் கிரகணங்கள் வானில் தோன்றும் அற்புத நிகழ்வு என்று அறிவியலாளர்கள் உணர்த்துகின்றனர்.












Click it and Unblock the Notifications