கேது திசை காலத்தில் ராஜபதி கைலாசநாதரை வணங்குங்கள்
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன்
நலம் தரும் ஆலயங்கள் வரிசையில் நாம் இந்த வாரம் தரிசிக்கவிருப்பது இராஜபதி என்னும் ஊரில் அமைந்துள்ள நவகைலாய திருக்கோயில்களில் ஒன்றான அருள்மிகு கைலாச நாதர் திருக்கோயில் ஆகும். இத்திருத்தலம் நவகிரகங்களில் ஒன்றான கேதுவின் பரிகார தலமாகும்.
தல வரலாறு

பொதிகை மலையில் அமர்ந்து தமிழ் வளர்த்த அகத்திய மாமுனிவர் முக்திப்பேறு விரும்பிய தமது சீடரான உரோமச முனிவரிடம் ஒன்பது தாமரை மலர்களை தாமிர பரணி நதியில் விடுகிறேன் அந்தத் தாமரை மலர்கள் ஒதுங்கும் கரையோரங்களில் சிவாலயம் எழுப்பி சிவ வழிபாடு செய்யுமாறு பணித்து அனுப்பினார். ஒன்பது தாமரை மலர்களில் எட்டாவது மலர் தங்கிய இடம் ராஜபதி. அகத்தியரின் ஆணைப்படி உரோமச முனிவர் இத்தலத்திலும் சிவவழிபாடு செய்து பலன் பெற்றார்.
மதுரை சந்திரகுல பாண்டிய மன்னரின் அரண்மனை இப்பகுதியில் இருந்ததால் இவ்வூர் ராஜபதி எனப்பட்டது. தற்போது இருக்கும் இந்த கோயில் புதிதாகக் கட்டப்பட்ட கோயிலாகும். இங்குள்ள லிங்கத்தின் கீழ் சுமார் நானூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் இருந்தது, அது வெள்ளப்பெருக்கில் மூழ்கி அழிந்தது. தற்போது சிவனடியார்களின் முயற்சியால் புதிய கோயில் கட்டப்பட்டுள்ளது.
தனிச் சிறப்பு:
நவகைலாயத்தில் இது நவகிரகங்களில் கேதுவுக்கான தலமாகும். நாகப்பட்டினம் மாவட்டம் கீழப்பெரும்பள்ளத்திற்கு இணையான கேது தலமாக திகழ்கிறது. பழைய கோயிலின் மூலவராக கூறப்படும் ஒழுங்கற்ற வடிவில் இருக்கும் ஒரு லிங்கம் மட்டும் கிடைக்கப்பெற, அதையே தற்போது புதிதாக கட்டப்பட்டிருக்கும் இக்கோயிலில் வைத்து வணங்கப்படுகிறது. இங்குள்ள லிங்கத்தின் நான்கு புறங்களிலும் நான்கு சக்கர வடிவங்கள் இருக்கிறது. லிங்கத்திற்கு கீழே புதைந்து போன கோயில் இருப்பதாக சொல்கிறார்கள்.
தனிச் சிறப்பு
ஒருவருடைய ஆயுள் காலத்தில் கேது திசை ஏழு ஆண்டுகள் நடக்கும். இந்த திசை காலத்தில் இந்த தலத்திற்கு செல்வது மிகவும் சிறப்பானது. இங்கு கேது பரிகார பூஜை சிறப்புடன் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதன் மூலம் கிரக தோஷங்கள் நீங்குகிறது. மேலும், இங்குள்ள விவசாயிகள் தங்களது விவசாயம் செழிக்கவும் கால்நடைகள் நோய் நொடியின்றி ஆரோக்கியத்துடன் இருக்க நந்திகேசுவரருக்கு பிரதோஷத்தன்று திரவிய பொருட்கள் மற்றும் பழங்கள் காணிக்கையாகச் செலுத்துகின்றனர். ஜாதக ரீதியாக தோஷம் உள்ளவர்கள் கேதுவின் அம்சமாக இருக்கும் இத்தல பெருமானை வேண்டிக்கொள்ளலாம்.
நவகிரகதோஷ நிவர்த்தி
தமிழகத்திலேயே வேறெங்கும் இல்லாத வகையில் நவக்கிரக தோஷ நிவர்த்திக்கு பக்தர்கள் தங்கள் கைகளாலேயே அபிஷேகம் தீப ஆராதனை வில்வ அர்ச்சனை வழபாடு செய்து பரிகாரம் செய்யும் தலம் ராஜபதி அருள்மிகு கைலாசநாதர் சிவன் கோயிலில் மட்டுமே. சிவனடியார்கள், சிவபக்தர்கள் மூலம் புதுப்பிக்கப்பட்ட இக்கோயிலில் வேறெங்கும் காணக்கிடைக்காத நவலிங்கங்கள் சந்நிதி உள்ளது.
அமைவிடம்:
திருநெல்வேலி - திருச்செந்தூர் செல்லும் வழியில் குறும்பூர் அருகில் இத்திருத்தலம் உள்ளது.
இறைவன் : அருள்மிகு கைலாசநாதர்
இறைவி : அருள்மிகு சவுந்தர நாயகி
தீர்த்தம் : பாலாழி
தலவிருட்சம்: வில்வம்












Click it and Unblock the Notifications