சனிப்பெயர்ச்சி 2020 : ரோகிணி, மிருகஷீரிடம், திருவாதிரை நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு பலன்கள்
சென்னை: ஜோதிட சாஸ்திரத்தில் நீதிமான், தர்மவான் என்று போற்றப்படுகிறார் சனீஸ்வரர். ஏழை, பணக்காரன், உயர்ந்தவர், தாழ்ந்தவர், மந்திரி, தொழிலதிபர், பிச்சை எடுப்போர் என எந்த பாகுபாடும் இவருக்கு கிடையாது. இவரை பொருத்தவரை எல்லோரும் சமம். அவரவர் பூர்வ ஜென்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப பலாபலன்களை வழங்கி வருகிறார். வாரி வழங்குவதில் இவருக்கு நிகர் இவரே. அதேபோல் கஷ்ட, நஷ்டங்களை கொடுப்பதிலும் தயவு தாட்சண்யமின்றி செயல்படுவார். அதனால்தான் சனியை போல் கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை என்று கூறுவார்கள்.
சனிபகவான் திருக்கணிதப்பஞ்சாங்கப்படி சனிபகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் 12 ராசிகளில் உள்ள அசுவினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். இன்று ரோகிணி, மிருகஷீரிடம், திருவாதிரை நட்சத்திரகாரர்களுக்கு சனிப்பெயர்ச்சி எப்படி இருக்கும் பலன்களையும் பரிகார தலங்களையும் பார்க்கலாம்.
சனி பகவான் மந்தன். மெதுவாக நகரும் கிரகம். ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகாலம் தங்கும் சனிபகவான் 12 ராசிகளையும் சுற்றி வர 30 ஆண்டுகாலம் எடுத்துக்கொள்கிறார். எனவேதான் 30 ஆண்டுகள் வாழ்ந்தாரும் இல்லை தாழ்ந்தாரும் இல்லை என்கின்றனர். சனிபகவான் இப்போது தனுசு ராசியில் இருக்கிறார். மங்களகரமான விகாரி வருடம் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் தை மாதம் 10ஆம் ஜனவரி 24, 2020ஆம் தேதியன்று அமாவாசை திதியில், சூரியனின் நக்ஷத்திரமான உத்திராட நட்சத்திரத்தில் வெள்ளிக்கிழமை காலை 09.57 மணிக்கு சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
இந்த சனிப்பெயர்ச்சியால் இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கு மேஷம், ரிஷபம், சிம்மம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் அதிக பலன்களையும், லாபங்களையும், வளர்ச்சியும் ராஜயோகத்தையும் பெறப்போகின்றனர். இந்த ஐந்து ராசிக்காரர்கள் தவிர மற்ற 7 ராசிக்காரர்களுக்கு பாதிப்பா என்று நினைக்க வேண்டாம். சனிபகவான் படிப்பினைகளை கொடுத்து அதற்குப் பிறகு நல்ல பலன்களைக் கொடுப்பார். இந்த சனிப்பெயர்ச்சியல் 12 ராசிகளில் உள்ள 27 நட்சத்திரகாரர்களுக்கும் என்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
பாக்ய சனியால் லாபம்
ரிஷப ராசியில் உள்ள ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு சனி நன்மைகளைத்தான் செய்வார்கள். அஷ்டமத்து சனியில் சில சங்கடங்களை சந்தித்து வந்தீர்கள். உங்களுக்கு பாக்ய சனி வரப்போகிறது. இந்த சனிப்பெயர்ச்சி நிறைய நன்மைகளை செய்யும். பதவிகளை தேடித்தரும். காஞ்சிபுரத்தில் உள்ள பாண்டவதூத பெருமாளை வணங்குங்கள். நன்மைகள் அதிகம் நடைபெறும். பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் இனி விடிவு காலம் பிறக்கும்.
அள்ளிக்கொடுப்பார் சனிபகவான்
அதிர்ஷ்டத்தை அள்ளிக்கொடுப்பார் சனிபகவான். கணவன் மனைவி பிரச்சினை தீரும். நோய் நொடிகள் குறையும், கடன் பிரச்சினைகள் தீரும்.
சனி பகவான் உங்கள் ராசிக்கு 9ம் இடமான மகரம் ராசியிலிருந்து 3ம் பார்வையாக 11ம் இடமான மீனம் ராசியையும் 7ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 3ம் இடமான கடகம் ராசியையும் 10ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 6ம் இடமான துலாம் ராசியை பார்வையிடப்போகிறார். சகோதரர்கள் உறவு வெளிநாடு பிசினஸ் எல்லாம் நன்றாக இருக்கும். வீடு வாங்கும் யோகத்தை தரப்போகிறார். அதிகமான லாபம் கிடைக்கும், தொழிலில் வெற்றி கிடைக்கும். திடீர் வருமானத்தை தருவார். தேனி அருகே குச்சனூரில் எழுந்தருளியுள்ள சனிபகவானை வணங்குங்கள்.
அஷ்டமத்து சனி
புகழின் உச்சிக்கு செல்லக்கூடிய பெருமை கொண்டவர்கள் அதிர்ஷ்ட சாலிகள் மிருக்ஷீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். ரிஷபம் ராசியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டமும், வெற்றியும் கிடைக்கும். தொழில் லாபம், பதவி உயர்வு கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் உற்சாகம் பிறக்கும். புதிய தொழில் தொடங்கும் காலம் வந்து விட்டது. மிதுன ராசியில் மிருகஷீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அஷ்டம சனி வருகிறது. எனவே வண்டி வாகனத்தில் போகும் போது கவனமாக இருங்க.
கடன் வேண்டாம்
தொழிலில் அதிக பணமுதலீடுகளை செய்ய வேண்டாம். வேலைகளை விடும் முன்பு ஒருமுறை இருமுறை யோசிக்கவும். புதிய தொழில் எதுவும் தொடங்கவேண்டாம். பேராசை படவேண்டாம். பங்குச்சந்தை முதலீடு தேவையே இல்லை, உங்க குடும்ப ஸ்தானத்தை சனி பார்க்கிறார் எனவே குடும்பத்தில் கவனம் தேவை. அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பணம் கடன் கேட்டு வந்தால் ஜாக்கிரதையாக இருங்கள் அவசரப்பட்டு கொடுத்து விட்டு அவதிப்பட வேண்டாம். மாணவர்கள் படிப்பில் கவனமாக இருப்பது அவசியம். கூத்தனூரில் எழுந்தருளி அருள்பாலிக்கும் சரஸ்வதி தேவியை வணங்குங்கள் நல்லதே நடக்கும். சனிக்கிழமைகளில் சனிபகவானை வணங்குங்கள். ஏகாதசி விரதம் இருந்து பெருமாளை விரதம் இருந்து துளசி மாலை அணிவித்து வழிபடுங்கள் அஷ்டம சனியின் பாதிப்புகள் நீங்கும்.
பேச்சில் கவனம்
ஈசனுக்கு உகந்த நட்சத்திரம் திருவாதிரை. திருவாதிரையில் பிறந்தவர்கள் ராகுவின் அருள் பெற்றவர்கள். ராகு உங்க ராசியில் இருக்கிறார். உங்க ராசியின் மீது குருவின் பார்வை படுகிறது. மிதுனம் ராசியில் உள்ள திருவாதிரை நட்சத்தில் பிறந்தவர்களே, உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி அஷ்டமத்து சனி காலமாகும். எட்டுக்கு உடையவன் எட்டாம் வீட்டில் அமர்வது விபரீத ராஜயோகம். அஷ்டமத்து சனிபகவான் பயத்தை கொடுத்து உச்சத்தை தொட வைப்பார். தொழில் வேலையில் மாற்றம் ஏற்படும். புத்தியில் சிறு குழப்பங்கள் வரும்.
Recommended Video
கவனமாக பேசுங்கள்
அரசு துறையில் இருப்பவர்கள் கவனமாக இருங்க. எட்டில் சனி யோகத்தை தரும். சுய ஜாதகத்தில் சனி யோகமாக வலுவாக இருந்தால் இந்த சனி வலிமையை தருவார். சுய ஜாதகத்தில் கொஞ்சம் வலிமை குன்றியிருந்தால் எச்சரிக்கை தேவை. உங்களுக்கு மிகப்பெரிய மாற்றங்களை தரப்போகும் சனி தனது வீட்டிற்கு வரப்போகிறார். கணவர் வீட்டாருடன் பேசும் போது கவனம் தேவை. பெண்கள் கவனமாக இருங்கள்.எதிர்பாலினத்துடன் பேசும் போது கவனம் தேவை. புதிதாக பேசுபவர்களுடன் கவனம் தேவை. இல்லாவிட்டால் பாடம் புகட்டி விடுவார். எல்லாம் வல்ல சிவபெருமானை சரணடையுங்கள். திங்கட்கிழமை விரதம் இருந்து திருவாதிரை நட்சத்திர நாளில் நெய்தீபம் ஏற்றி வழிபடுங்கள். பைரவரை வணங்குங்கள்.