சனி பெயர்ச்சி 2022: கண்டச்சனியால் யாருக்கு கஷ்டம் - என்ன பரிகாரம் செய்தால் தப்பிக்கலாம்
ஏழாம் வீட்டில் சனி கண்டச்சனியாக சஞ்சரித்தாலும் சசமகா யோகம் கிடைக்கும். சனிபகவான் பாதிப்பு ஏதையும் ஏற்படுத்த மாட்டார் கவலைப்பட வேண்டாம்.
சென்னை: சனிபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு செல்லப்போகிறார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் ஆட்சி பெற்று அமரும் சனிபகவான் சிம்ம ராசிக்காரர்களுக்கு 7ஆம் வீடான களத்திர ஸ்தானத்தில் சனி பகவான் ஆட்சி பெற்று அமர்ந்து சசமகா யோகத்தை கொடுக்கப்போகிறார். கண்டச்சனி காலத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு வேலை, கல்வி, திருமணம், குழந்தை பாக்கியம் எப்படி என்று பார்க்கலாம். என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்றும் பார்க்கலாம்.
சனியானவர் சிம்ம ராசிக்கு 6 மற்றும் 7 வீட்டிற்கு அதிபதி அவர் 7ம் இடத்தில் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்வதால் சிம்ம ராசிக்காரர்களுக்கு பாதிப்பு அதிகம் இருக்காது. சனிபகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் அமர்ந்து கொண்டு உங்கள் ராசியை பார்வையிடுகிறார். சுக ஸ்தானமான 4ஆம் இடம், பாக்ய ஸ்தானமான 9ஆம் இடங்களின் மீதும் சனிபகவானின் பார்வை படுகிறது.
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு கண்டச்சனி அல்லது கண்டகச் சனி என்றாலும் ராசிக்கு கேந்திரமாக இருப்பதால் சனியினுடைய கடுமை வரும் காலங்களில் சற்று குறைந்து காணப்படும்.

சனிபகவான் பார்வை
சனிபகவான் தனது ஏழாவது பார்வையால் உங்கள் ராசியைப் பார்ப்பதால் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். நீங்கள் யார் என்று உலகிற்கும் மற்றவர்களுக்கும் தெரியவரும். பேச்சில் சாமர்த்தியம் கூடும். பணப் புழக்கம் அதிகரிக்கும், கடன் கொடுத்த பணம் திரும்ப கைக்கு வந்து சேரும். செயல்களில் சில தடைகள் ஏற்பட்டாலும் தெய்வ அனுகூலம் காரணமாக அனைத்து செயல்களையும் வெற்றிகரமாக முடிப்பீர்கள்.

தன்னம்பிக்கை அதிகரிக்கும்
இதுவரை குடும்பத்தில் நடைபெறாமல் தள்ளிப் போன சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் அமையும். அதனால் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலவும்.
பழைய இடங்களை விற்று புதிய இடம் வீடு, வண்டி, வாகனங்கள், விட்டு உபயோக பொருட்கள் வாங்க ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும். சகோதர, சகோதரிகளின் அன்பும், ஆதரவும் இருந்து வரும். தன்னம்பிக்கையும் ஊக்கமும் அதிகரிக்கும்.

காதல் திருமணம்
காதல் விஷயங்களில் மன ஈடுபாடு அதிகரிக்கும் ஒரு சிலருக்கு காதல் கனிந்து திருமணத்தில் முடியும் அடிக்கடி விருந்து கேளிக்கைளில் கலந்து கொள்ள வாய்ப்புகள் வந்து சேரும். குடும்பத்தில் புதிய வரவுகள் வந்து சேரும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். உயர்கல்வி பயில வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். தேவையில்லாத விஷயங்களில் தலையிடக் கூடாது.

வேலையில் இடமாற்றம் ஏற்படும்
வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு அமையும். ஆனால் வேலையில் திருப்தியற்ற நிலைமையே அமையும். எனவே கிடக்கும் வேலையை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும். அவசரப்பட்டு பார்க்கும் வேலையை விட்டுவிடக் கூடாது. வேலையாட்களால் நன்மை. உண்டாகும். ஒரு சிலருக்கு வேலையில் இடமாற்றம், ஊர் மாற்றம் அமையும். வேலையில் உத்தியோக உயர்வு ஊதிய உயர்வு கிடைக்கும்.

பணம் விஷயத்தில் கவனம்
யாருக்கும் தேவையில்லாமல் பணம், கடன் கொடுப்பதோ, ஜாமீன் கையெழுத்து போடுவதோ கூடாது. தேவையில்லாமல் கடன் வாங்குதல் கூடாது. கடன்களை கட்டுக்குள் வைத்து கொள்ள வேண்டும். உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

உடல் ஆரோக்கியத்தில் கவனம்
ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனமாக இருக்கவும். தண்ணீர் அதிகம் குடிக்கவும். இந்த இடப்பெயர்ச்சியால் உங்கள் பெற்றோர்களுக்கும் பாதிப்பு வரலாம். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை தேவை. சரியான நேரத்திற்கு சாப்பிடுவது அவசியம். வழக்குகளில் வெற்றி கிட்ட வாய்ப்புகள் அதிகம். நண்பர்களால் உதவிகள் வந்து சேரும். எதிரிகள் விஷயத்தில் அதிக எச்சரிக்கை தேவை. தாயாரின் அன்பும் ஆசியும் கிட்டும்.

பாதிப்புகள் நீங்க பரிகாரம்
கும்பகோணம் அருகில் உள்ள திருநறையூரில் உள்ள நாச்சியார் கோயிலில் மங்கள சனியாக குடும்பத்துடன் அருள்பாலிக்கிறார். சனிதிசை, கண்டச்சனியால் பாதிப்பு குறைய இங்குள்ள சனிபகவானை தரிசனம் செய்து அர்ச்சனை செய்ய நன்மைகள் நடைபெறும். தன்வந்திரி பீடத்தில் அருள்பாலிக்கும் சொர்ண சனீஸ்வரரை வணங்கலாம். உடல் நலத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெற லட்சுமி நரசிம்மரை வணங்கலாம்.












Click it and Unblock the Notifications