சூரசம்ஹாரம் 2019 : திருச்செந்தூரில் கூடிய கூட்டங்கள் தலையா கடல் அலையா
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்ரமணியர் ஆலயத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. சூரசம்ஹாரத்தைக் காண அலைகடலென பக்தர்கள் திரண்டுள்ளனர்.
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கந்த சஷ்டி விழாவின் 6 ஆம் நாளான இன்று மாலையில் கடற்கரையில் சூரசம்ஹாரம் நிகழ்வை காண குவிந்துள்ளனர். கோவில் அருகில் கூடிய கூட்டங்கள் தலையா கடல் அலையா என்ற நினைக்கும் அளவிற்கு பக்தர்கள் திரண்டுள்ளதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முருகப்பெருமானின் பல ஆலயங்களில் சூரசம்ஹாரம் நடந்தாலும் புராண கதைப்படி திருச்செந்தூர் யுத்தம் நிகழ்ந்த தலம். கந்த சஷ்டியை முன்னிட்டு ஐப்பசி அமாவாசைக்கு மறுநாள் பிரதமை தொடங்கி சஷ்டி வரை 6 நாட்கள் பக்தர்கள் கடும் விரதம் இருந்து சூரசம்ஹாரத்தை காண தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் திருச்செந்தூருக்கு வந்துள்ளனர். வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் திருச்செந்தூருக்கு வந்துள்ளனர்.

இன்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடைபெற்றது. மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெறும்.

மாலை 4.30 மணிக்கு மேல் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரனை வதம் செய்கிறார். தொடர்ந்து சந்தோஷ மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. அதன்பின் சுவாமியும், அம்பாளும் புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயாபிஷேகம் நடைபெறும். சூரசம்ஹாரத்தை முன்னிட்டு திருச்செந்தூரில் இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

சூரசம்ஹார நிகழ்ச்சியைக்காண தமிழகம், வெளிமாநிலம், வெளிநாடு ஆகியவற்றில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால் 3500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications