நதிகளுக்கும் உண்டு மாதவிலக்கு.. மூன்று நாட்கள் நதிகளை தொந்தரவு செய்யாதீர்கள்!
-அஸ்ட்ரோ சுந்தரராஜன்
சென்னை: நாளை (17/7/2018) செவ்வாய் கிழமை ஸர்வ நதி ரஜஸ்வலா என பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டிருக்கும். நாம் பல பண்டிகைகளையும் விஷேஷ.தினங்களையும் கொண்டாடியும் அனுசரித்தும் வருகிறோம். அதை எதற்காக செய்கிறோம் என பொருளுனர்ந்து செய்தால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். அந்த வகையில் ஸர்வ நதி ரஜஸ்வலாவை எதற்க்காக அனுசரித்து வருகிறோம் என அறிந்தால் நம் முன்னோர்களின் தீர்க தரிசனத்தையும் அறிவையும் கண்டு வியக்காமல் இருக்க முடியாது.
ரஜஸ்வலா:
பெண்களுக்கு விரைவில், திருமணம் செய்து விடவேண்டும் என்று பவிஷ்ய புராணம் கூறுகிறது. ஏழு வயதுடைய பெண்ணை கெளரி என்றும், பத்து வயதுடைய பெண் நக்னிகா என்றும், பன்னிரண்டு வயதுடைய பெண் கன்யகா என்றும், அதற்கு மேல் வயதுடையவர்களை ரஜஸ்வலா என்றும் குறிப்பிடுகிறது இப்புராணம். அதாவது வயதுக்கு வந்தவர்கள் எனும் பொருளாகும்.
ரஜஸ்வலா என்பது பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் தீட்டினை குறிப்பதாகும். நதிகளை பெண்களாக போற்றுவது நமது நாட்டின் பாரம்பரியம். எனவே ஆடி மாத ஒன்றாம் தேதியிலிருந்து மூன்று நாட்களுக்கு நதிகளுக்கெல்லாம் ரஜஸ்வலா எனும் தீட்டு என்கிறது சாஸ்திரம். ஆடிமாதப் பிறப்பான 17-07-2018முதல் 19-07-2018 முடிய மூன்று நாட்கள் காவேரி, நர்மதா, யமுனா, முதலிய அனைத்து புண்ய நதிகளுக்கும் அதன் கிளை நதிகளுக்கும் ரஜஸ்வலா ஏற்படுவதால் அசுத்தி. ஆகவே இந்த மூன்று நாட்களிலும் அனைத்து புண்ய நதிகளிலும் கிளை நதிகளிலும் ஸ்னானம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என சாஸ்திரம் கூறுகிறது.
ஜோதிடமும் மாதவிலக்கும்:
ஜோதிடத்தில் மாதவிலக்கு பிரச்சனைகளுக்கு முக்கிய கிரகமாக கூறப்படுபவர் ரத்தத்தின் காரகரான செவ்வாயும் இன்றைய தின நாயன் செவ்வாயும் தாங்க!
ஒருபெண்ணுக்கு சந்தோஷமான தருனமான பூப்படையும் தன்மையை ஏற்படுத்த்வது சந்திரன் செவ்வாய் சேர்க்கை என்கிறது பாரம்பரிய ஜோதிடம். ஒரு ஜாதகத்தில் சந்திரன் உடம்பு மற்றும் உடம்பிலுள்ள நீர் தன்மையுள்ள பொருட்களை குறிக்கும் கிரகமாகும். காலபுருஷனுக்கு நான்காம் வீடான கடகத்தை ரத்தத்தின் தொடர்புள்ள பாவமாகவும் சந்திரனையும் ரத்தத்தின் அதிபதியாகவும் கூறப்படுகினறது. செவ்வாய் ரத்தத்தை குறிக்கும் கிரகமாகும். ஒரு பெண்ணின் வயது வரும் பருமடைந்தவுடன் ஜாதகத்தில் கோசார செவ்வாய் லக்னத்தையும் சந்திரனயும் ஒரே நேரத்தில் தொடர்பு கொள்ளும்போது பருவமடைகிறாள் என மருந்துவ ஜோதிடம் கூறுகிறது.
மாதவிடாய் பிரச்சனைக்ளுக்கான பாவம் காலபுருஷனுக்கு ஏழாம் பாவமான துலாம், மற்றும் எட்டாம் பாவமான விருச்சிகமும் மற்றும் ஜெனன ஜாதக ஏழு எட்டு பாவங்களும் முக்கிய தொடர்புள்ள பாவங்களாகும். ரத்தத்திலுள்ள ஹீமோக்ளோபின் எனப்படும் இரும்புசத்தின் காரகனும் செவ்வாய்தான் என்கிறது மருத்துவ ஜோதிடம். இளம்பெண்களுக்கும் செவ்வாய்க்கும் நெருங்கிய தொடர்பு இருக்குங்க! தனக்கு வரப்போகும் கணவர் இப்படி இருக்க வேண்டும் என்ற கற்பனைக்கேற்ப்ப கணவனை குறிக்கும் கிரகமும் செவ்வாய்தான் என்கிறது பாரம்பரிய ஜோதிட சாஸ்திரம்.
ஒவ்வொரு மாத சுழற்சியில் ஜாதகத்தில் ஜனன செவ்வாயை கோசார சந்திரன் தொடுவதற்க்கு 5 மணி நேரத்திலிருந்தும் சந்திரன் செவ்வாயை கடந்து 5 மணி நேரம் வரையும் மாதவிடாய் இரத்தப்போக்கு ஏற்படும் என்கிறது மருத்துவ ஜோதிடம். அதாவது ஒரு ராசியில் சந்திரன் இரண்டரை நாள் பயனம் செய்வார். அவர் ராசியை அடைவதற்க்கு முன்பும் கடந்த பின்புமாக மொத்தம் மூன்று நாட்கள் மாதவிடாய் ஏற்படுவதின் காரணம் செவ்வாய் சந்திர தொடர்பே என்கிறது ஜோதிடம்
ஜோதிடத்தில் கடலும் கடல் சார்ந்த பகுதிகள் மற்றும் அனைத்து நீர் நிலைகளுக்கும் காரகர் சந்திர பகவான் ஆவார். காலபுருஷனுக்கு நான்காம் வீடான கடகம் சந்திரனின் ஆட்சி வீடாகும். மேலும் கடக ராசி கடலும் கடல் சார்ந்த இடமுமான நீர் ராசி மற்றுமல்லாது பெண் ராசியாகவும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இந்த சந்திரனின் ராசியான கடகத்தை திரிகோண ராசிகளாக பெற்ற விருச்சிகம் மற்றும் மீன ராசிளும் நீர் ராசிகள் மற்றும் பெண் ராசிகளாகும். எனவே மாதவிலக்கு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் இந்த ராசிகளுக்கும் தொடர்பு உண்டு.
தற்போது கோசாரத்தில் சந்திரன் கடகத்தில் தனது ஆட்சி வீட்டில் இருந்து மகரத்தில் இருக்கும் செவ்வாயின் சமசப்தம பார்வை பெற்ற பின் சந்திரன் கடகத்தை கடந்து சிம்மத்திற்க்கு வந்திருக்கிறது. காலபுருஷனுக்கு நான்காம் வீடான கடகம் சந்திரனின் ஆட்சி வீடாகும். அனைத்து நீர்நிலைகளையும் குறிக்கும் கிரகம் சந்திரனாகும். கோசார செவ்வாய் தற்போது மகரத்தில் உச்சமடைந்து சந்திரனை தனது ஏழு மற்றும் எட்டாம் பார்வையால் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறது. மேலும் சிம்மத்தில் நிற்க்கும் சுக்கிரனையும் தனது எட்டாம் பார்வையால் தொடர்பு கொள்கிறது.
பிறப்புறுப்பையும் அது சார்ந்த பிரச்சனைகளையும் குறிக்கும் காலபுருஷனுக்கு ஏழு மற்றும் எட்டாம் ராசிகளான துலாம் மற்றும் விருச்சிக ராசி அதிபதிகளான சுக்கிரன், செவ்வாய் சேர்க்கை பெற்று நீர் ராசியான சந்திரனை தொடர்பு கொள்ளும்போது நதிகள் மற்றும் அனைத்து புண்ணிய தீர்த்தங்களுக்கும் ரஜஸ்வலா எனும் மாதவிலக்கு ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பெண்கள் மாதவிலக்கு காலத்தில் உடல் தூய்மை மற்றும் மனத்தெளிவு அற்று இருப்பதால அவர்களை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யாமல் ஓய்வளிக்க சாஸ்திரம் பரிந்துரைக்கிறது, இந்த காரணத்தினால் தான் இன்றளவும் பிராமணர்கள் மற்றும் ஆசாரமான குடும்பங்களில் மாதவிலக்கு காலங்கள்ளில் பெண்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்படுகிறது. எனவே நாளை முதல் மூன்று நாட்களுக்கு நதிகளையும் புண்ணிய தீர்த்தங்களையும் நீராடுவது அவைகளை தொந்தரவு செய்வதற்க்கு சமம் என்பதால் நீராட கூடாது என்கிறது சாஸ்திரம்.
இறைவனின் படைப்பில் சிறந்தது மானிடப்படைப்பாகும். மனிதர்களில் பெண்கள் மட்டுமே இயற்கை உடற்க்கூறு மாற்றம் அதிகம் கொண்டவர்கள்.ஒரு உயிரை உருவாக்கும் பெரும்பங்கு பெண்களையே சாரும் அதனால்தான் பெண்களை தெய்வத்திற்கு சமமானவர்கள் என்று சாஸ்திரம் போற்றுகின்றது. நதிகளையும் தெய்வத்தோடு இணைத்து வணங்குவது நமது மரபு. எனவே அந்நீர்நிலைகளைத் தூய்மையுடன் பாதுகாப்பது நம் அனைவரின் கடமையாகிறது.
-அஸ்ட்ரோ சுந்தரராஜன்
9498098786