கந்த சஷ்டி ஸ்பெஷல்: தீராத நோய்களை தீர்க்கும் திருச்செந்தூரின் பன்னீர் இலை விபூதி
திருச்செந்தூர் சுப்ரமணியசாமி ஆலயத்தில் விபூதியை பன்னீர் இலையில் வைத்து கொடுப்பார்கள். இது மகிமை வாய்ந்தது. தீராத நோய்களையும் தீர்க்கும் குணமுடையது.
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் வழங்கப்படும் விபூதிப் பிரசாதம், தனித்துவமும் மகிமையும் வாய்ந்தது. இது தீராத நோய்களையும் தீர்க்கும் குணமுடையது. முருக பக்தர்கள் கந்த சஷ்டி விரதம் இருக்கும் இந்த நேரத்தில் பன்னீர் இலை விபூதியைப் பற்றியும், தேவர்களே பன்னீர் மரங்களாக மாறி செந்தூரில் அருள்பாலிக்கும் அதிசயத்தையும் அறிந்து கொள்வோம்.
சூரபத்மனுடன் போரில் வென்று மயிலாகவும், சேவலாகவும் தன்னுடன் வைத்துக்கொண்டவர் முருகப்பெருமான். திருச்செந்தூர் திருத்தலம் ஜெயந்திபுரம் என்றழைக்கப்படுகிறது. இந்த புண்ணியத் தலத்தில் தினமும் காலையில் பக்தர்களுக்கு பன்னீர் இலையில் விபூதி வைத்து பிரசாதமாக வழங்கப்படுகிறது.
முருகப்பெருமான் தன் 12 கரங்களால் விசுவாமித்திரரின் காசநோய் நீங்குவதற்காக திருநீறு அளித்ததன் தாத்பர்யம் இது என விவரிக்கிறது ஸ்தல புராணம். கடற்கரையில் அசுரர்களை வதம் செய்த பின்னர் முருகப் பெருமான் திருச்செந்தூரில் ஜெயந்திநாதராக, சுப்ரமணியராக எழுந்தருளி அருள்பாலிக்கிறார். முருகனின் பெருமையைத் துதித்த வேதங்களனைத்தும் ஒன்று சேர்ந்து செந்திலோனின் மகிமையை விளக்கும் பன்னீர் மரங்களாக இவ்விடத்தில் தோன்றின என்கிறது புராணம்.
விபூதி பிரசாத மகிமை
சூரபத்மனை வதம் செய்து முடிந்த பின் போய் காயங்கள் ஆறவேண்டும் என்பதற்காக முருகப்பெருமான் தன் பரிவாரங்களுக்கு, 12 கைகளினால் விபூதிப் பிரசாதம் வழங்கினார் என்கிறது ஸ்தல புராணம். தாரகாசுரனை வதம் செய்தவனே! வலிப்பு, காசம், குஷ்டம், சுரம், மேகவெட்டை, குடல்புண், புற்றுநோய், பிசாசு மற்றும் மனப்பயம் எனும் நோய்களனைத்தும் பன்னீர் இலையில் வைத்துத் தரப்படும் உன் திருநீற்றைப் பார்த்த மாத்திரத்தில் பறந்தோடி மறைந்துவிடும்."ஆதி சங்கரர், திருச்செந்தூரில் பாடிய சுப்ரமண்ய புஜங்கத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
மந்திர சக்தி நிறைந்த பன்னீர் இலைகள்
போர் முடிந்த பின்னர் அசுரர்களை எதிர்த்து போரிட்ட முப்பத்து முக்கோடி தேவர்களும் பன்னீர் மரங்களாக உள்ளனர் என்பது ஐதீகம். பன்னிரு நரம்புகள் உள்ள பன்னீர் மர இலைகளில் வைத்துத் தரப்படுவதே இலை விபூதி பிரசாதம். எனவேதான் பன்னீர் மர இலைகளும் வேத மந்திர சக்தியை உடையவை என்கிறது புராணம். பன்னீர் இலையில் பத்திரப்படுத்தப்படும் விபூதியிலும் வேத மந்திர சக்திகள் நிறைந்து விடுகின்றன.தவிர, பன்னீர் இலையில் காணப்படும் 12 நரம்புகள் முருகனது பன்னிரு கரங்களை நினைவூட்டுவனவாக அமைந்துள்ளன.
கூலியாக மாறிய விபூதி
350 ஆண்டுகளுக்கு முன் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த ஸ்ரீலஸ்ரீ தேசிகமூர்த்தி தம்பிரானவர்கள் செந்தூர் மேலக் கோபுரத்தை நிர்மாணித்தார். பொருள் பற்றாக் குறை ஏற்படவே, கூலியாட்களுக்குக் கூலிக்குப் பதிலாக இலை விபூதியைக் கொடுத்து, தூண்டுகை விநாயகர் கோயிலைத் தாண்டிச் சென்றபின் திறந்து பார்க்கும்படிக் கூறினாராம். அதன்படி திறந்து பார்த்தபோது, தத்தம் வேலைக்குரிய கூலி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து மெய் சிலிர்த்தனர் என்கிறது கோயில் வரலாறு.
தீராத நோய்களை தீர்க்கும்
தாடகை எனும் பெண்ணை ராமபிரான் மூலமாக வதம் செய்த காரணத்தினால் தனக்கு ஏற்பட்ட குன்மம் முதலான நோய்கள் தீர, ராமபிரான் தன் கனவில் கூறியபடி, செந்திலாண்டவன் இலை விபூதியைத் தரித்துக் கொண்டு நோய்கள் நீங்கப் பெற்றார் விசுவாமித்திர மகரிஷி. திருமண தடையால் பாதிக்கப்பட்டவர்கள், குழந்தை பேறு இல்லாதவர்கள், தீராத நோயினால் தவிப்பவர்கள் திருச்செந்தூர் செந்திலாண்டவரை மனதார வேண்டிக் கொண்டு, உறவினர் மற்றும் நண்பர்கள் மூலமாக பன்னீர் விபூதிப் பிரசாதத்தைப் பெற்று, நெற்றியில் வைத்துக்கொண்டால் தீராத நோய்களும் தீரும் தடைகள் அகலும் என்பது நம்பிக்கை.