திருமலையில பிரம்மோற்சவம்: பூலோக வைகுண்டமாக மின்னும் ஏழுமலையான் கோவில்
திருமலையில் பிரம்மோற்சவ விழா தொடங்கியுள்ளதை முன்னிட்டு மின் விளக்குகளால் ஜொலிக்கிறது. பூலோக வைகுண்டமாக ஒளிரும் திருமலையில் ஏழுமலையானைக் காண பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
திருப்பதி: உலக பிரசித்தி பெற்ற ஏழுமலையான் எழுந்தருளி அருளாட்சி புரியும் திருமலையில் பிரம்மோற்சவ விழா தொடங்கியுள்ளது. பூலோக வைகுண்டமாக ஒளிரும் திருமலையில் ஏழுமலையானைக் காண பக்தர்கள் குவிந்து வருகின்றனர். அக்டோபர் 4ஆம் தேதி கருடசேவை வாகனம் நடைபெறுகிறது. பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க எட்டு லட்சம் லட்டுகள் தயாரித்து வைக்கப்பட்டுள்ளன.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா நேற்று அங்குரார்ப்பணத்துடன் தொடங்கியுள்ளது. சீனிவாச பெருமாளின் சர்வ சேனாதிபதியான விஷ்வ சேனாதிபதியை கோயில் அர்ச்சகர்கள், ஜீயர்கள் முன்னிலையில் மேற்கு திசையில் உள்ள வசந்த மண்டபத்திற்கு நாதஸ்வரங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர். அங்குள்ள சுத்தமான பகுதியில் மண் எடுக்கப்பட்டு கோயிலில் உள்ள யாக சாலையில் 9 பானைகளில் வைத்து நவதானியங்கள் முளைப்பாரி போடப்பட்டது.மாலை பிரம்மோற்சவம் தொடங்கும் விதமாக கருடக்கொடி ஏற்றப்படுகிறது.
ஒன்பது நாட்கள் நடைபெறக்கூடிய பிரம்மோற்சவத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி 14 வாகனங்களில் வீதியுலா நடைபெறும். விழாவின் முக்கிய அம்சமான கருட சேவை வரும் 4 ஆம் தேதி இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. பக்தர்களுக்கு பிரசாத லட்டு தட்டுப்பாடு இன்றி கிடைக்க 8 லட்சம் லட்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் பரபரப்பு.. கோவில் புளிசாதம், சுண்டல் சாப்பிட்ட 50 பேருக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு!
சென்னை திருக்குடைகள்
கருடசேவை தினத்தில் மலையப்பசுவாமியை அலங்கரிக்க சென்னையில் இருந்து திருக்குடைகள் திருப்பதிக்கு ஊர்வலமாக சென்றன. அழகிய வேலைப்பாடுகள் கொண்ட 11 திருக்குடைகள், பாரிமுனையிலுள்ள சென்ன கேசவ பெருமாள் கோயிலில் இருந்து புறப்பட்ட குடைகள் நேற்று மாலை கவுனிதாண்டியது. அக்டோபர் 3 ஆம் தேதி திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில் திருக்குடைகள், தேவஸ்தான அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
தினம் தினம் ஊர்வலம்
- செப்டம்பர் 30 - கொடியேற்றம் பெரிய சேஷ வாகனம்
- அக்டோபர் 1 - காலையில் சின்ன சேஷ வாகனம் , இரவில்
ஹம்ச வாகனம் - அக்டோபர் 2 - காலையில் சிம்ம வாகனம் இரவில் முத்துப் பல்லாக்கு
- அக்டோபர் 3 - காலையில் கற்பக விருஷப வாகனம் இரவில் சர்வ பூபாள வாகனம்
- அக்டோபர் 4 - காலையில் மோகினி அலங்காரம், இரவில் கருட வாகனம்
- அக்டோபர் 5 - காலையில் அனுமன் வாகனம் இரவில் தங்க தேரோட்டம்
- அக்டோபர் 7 - காலையில் தேரோட்டம், இரவில் குதிரை வாகனம்
- அக்டோபர் 8 - காலையில் தெப்ப குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் முடிகிறது மாலை கொடி இறக்கம்
ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம்
பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்ட உடன் ஏழுமலையானுக்கு ஆந்திரா முதல்வர் ஜெனன்மோகன் ரெட்டி பட்டு வஸ்திரம் சமர்ப்பிற்கிறார். பிரம்மோற்சவ விழா நாட்களில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி தினசரியும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் எழுந்தருளி காலை மற்றும் இரவு வேளைகளில் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
ஆதிசேஷன் மீது ஊர்வலம்
இன்று இரவு பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேசி சமேதராக மலையப்ப சுவாமி நான்கு மாட வீதிகளில் உலா வருகிறார். ஏழுமலையான் பள்ளி கொள்வது ஆதிசேசன் மீதுதான் எனவேதான் பிரம்மோற்சவ விழாவின் முதல்நாளில் ஏழுதலைகளுடன் கூடிய பெரிய சேஷ வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது.
திருப்பதி செல்லும் பூமாலைகள்
பெருமாளுக்கு சாற்றுவதற்காக 7 டன் பூமாலைகள் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டிலிருந்து அனுப்பப்பட உள்ளது. இதற்காக திருச்செங்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் மலர்களை வழங்கிய நிலையில், 500க்கும் மேற்பட்ட பெண்கள் மாலைகளைத் தொடுக்கும் பணியில் ஈடுபட்டனர். மாலைகள் மட்டுமின்றி, கரும்பு, தென்னம்பாளை, தென்னங்குருத்து, இளநீர், பாக்கு குழைகள், மாங்கொத்துகள் என சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருப்பதி திருமலைக்கு அனுப்பப்பட உள்ளது.
அக்டோபர் 4ல் கருடசேவை
பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருப்பதி, திருமலை முழுவதும் மகா விஷ்ணுவின், பல்வேறு அவதாரங்களை விளக்கும் விதமாக மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பூலோக வைகுண்டமாக காட்சி அளிக்கிறது. கருட சேவை வரும் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தின லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருவார்கள். ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு, லட்டு தட்டுப்பாடு இன்றி கிடைக்க, 8 லட்சம் லட்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.