சகல சௌபாக்யங்களையும் தந்தருளும் வரலக்ஷ்மியே வருக! வரம் பல தருக!!
- அஸ்ட்ரோ சுந்தரராஜன்
"ஆடி அழைக்கும் - யுகாதி ஓட்டும்" எனும் சொலவடைக்கு ஏற்ப ஆடிமாதம் பிறந்தாலே பண்டிகைகளும் விரதங்களும் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடரும் என்பது எல்லோரும் அறிந்ததே.
பதினெட்டாம் பெருக்கை தொடர்ந்து முடிந்து இன்று வெள்ளிக்கிழமை வரலக்ஷ்மி விரதம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இல்லந்தோறும் திருமகளை வரவேற்று நோன்பிருந்து பூஜை செய்து மகிழ்கிறோம். இந்நாளை வரலக்ஷ்மி விரதம் அல்லது வரலக்ஷ்மி நோன்பு என்கிறோம். திருமகளான லக்ஷ்மி நம் இல்லத்திற்கு எழுந்தருளி கொலுவிருப்பதால் இதை வரலக்ஷ்மி பண்டிகை என்றும் கூறலாம்.
வரலக்ஷ்மி விரதம் என்பது சுமங்கலிப் பெண்கள் செய்யும் மிகச் சிறப்பான பூஜையாகும். மகாவிஷ்ணுவின் தேவியான லக்ஷ்மி தேவியைக் குறித்துச் செய்யப்படுவதே வரலட்சுமி விரதமாகும். தீர்க்க சுமங்கலியாக வாழ பெண்கள் வரலக்ஷ்மி விரதம் அனுஷ்டிக்கின்றனர்.
பெண்கள் அனைவரும் தங்கள் கணவருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், தீர்க்கசுமங்கலிங்களாக வாழும் விதத்திலும் வரலக்ஷ்மி விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.
வரலக்ஷமி விரதம் எப்பொழுது கொண்டாடப்படுகிறது ?
ஆடி அல்லது ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில் வரலக்ஷ்மி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. பெரும்பாலும் 3வது ஆடி வெள்ளியன்றோ அல்லது 4வது ஆடி வெள்ளி அன்றோ வரும். சுமங்கலிகள் அனுஷ்டிக்க வேண்டிய சிறப்பான விரதம் இது.
பக்தி சிரத்தையுடன் நோன்பிருந்து வரலக்ஷ்மி பூஜையை செய்வதாலும், பங்கேற்பதாலும் ஆயுள், ஆரோக்யம், மாங்கல்யபலம் கிட்டும். கன்னிப் பெண்களுக்கு திருமண வரன் கூடிவரும்.
குழந்தை பாக்ய தடைகள் நீங்கி சற்புத்திர யோகம் உண்டாகும். ஜாதகத்தில் சுக்கிர தோஷம், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் நீங்கும். கணவன் - மனைவி இடையே மன கசப்புகள், கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். பிரிந்திருக்கும் தம்பதிகள் ஒன்று சேர்வார்கள்.
வரலக்ஷ்மி விரதம் பற்றிய புராணகதை:
பத்ரச்ரவஸ் என்ற மன்னன் சிறந்த விஷ்ணு பக்தன். அவன் மனைவி கரசந்திரிகா. இவர்களது ஒரே மகள் சியாமபாலா. அவளைத் திருமணம் செய்து கொடுத்தபின் தாய் துயருற்றாள். அவளது கவலையைத் தீர்த்து அவளுக்கு ஒரு ஆண் மகவு பிறக்க அருள் செய்ய எண்ணினாள் மகாலக்ஷ்மி. அதனால் வரலக்ஷ்மி விரதம் பற்றி எடுத்துக்கூற வயதான சுமங்கலி வடிவில் அவளிடம் சென்றாள். ஆனால் வந்திருப்பது லக்ஷ்மிதேவி என்று அறியாத கரசந்திரிகா அவளை அவமானப் படுத்தி அனுப்பி விட்டாள்.
அங்கிருந்து சியாமபாலாவிடம் சென்ற மகாலக்ஷ்மி நடந்தவற்றைக் கூறி, தான் போனால் எல்லா யோகங்களும் அரண்மனையை விட்டுப் போய்விடும் என்று கூறினாள். தன் தாயின் தவறுக்காக வருந்தி மன்னிப்புக் கோரிய சியாமபாலா, வரலக்ஷ்மி விரதத்தைப் பற்றிக் கேட்டறிந்து சிரத்தையுடன் அதைக் கடைப் பிடித்து வரத் தொடங்கினாள். அதன் பிறகு அவளுக்குச் சுபிட்சம் பொங்கிய அதே நேரத் தில் அவளது பெற்றோர் அனைத்து செல்வங் களையும் இழந்தனர். தன் பெற்றோரது வறுமையை அறிந்த சியாமபாலா ஒரு குடம் நிறைய பொற்காசுகளை அவர்களுக்கு அனுப்பி வைத்தாள். அக்குடத் தில் கரசந்திரிகா கை வைத்ததும் பொற்காசுகள் கரியாகி விட்டன. இதையறிந்த மகள் அந்த ஆண்டு தன் தாயுடன் வரலக்ஷ்மி விரதம் மேற் கொண்டாள். விரதத்தின் மகிமையால் கர சந்திரிகா தன் முந்தையை சுபிட்ச நிலையை எய்தியதோடு ஆண் வாரிசும் பெற்றாள். வரலக்ஷ்மி விரதம் இருக்கும் பெண்கள் அஷ்ட போக பாக்கியங்களைப் பெறுவார்கள் என்பதை இவ்வரலாறு எடுத்துரைக்கிறது.
ஜோதிடத்தில் 'வர' லக்ஷமி யோகம்:
ஒருவருடைய ஜாதகத்தில் லக்னாதிபதி அதிக பலம் பெற்று ஆட்சி உச்சம் போன்ற நிலை பெற்று ஒன்பதாமதிபதி ஆட்சியோ உச்சமோ பெற்று கேந்திர திரிகோணங்களில் நிற்பது லக்ஷமி யோகத்தை தரும்.
ஜாதகத்தில் இலக்கினத்திற்கு ஒன்பதாம் அதிபதி மற்றும் சுக்கிரன் கேந்திர, திரிகோணங்களில் இருந்தாலும் ஆட்சி, உச்சம் பெற்றாலும் லட்சுமி யோகம் ஏற்படும். செல்வத்தின் அதிபதியான லக்ஷ்மி தேவியை குறிக்கும் சுக்கிரகோளின் வலிமையை கொண்டு இந்த யோகம் விவரிக்கபடுகிறது.
லக்ஷமி யோகம் பலன்கள்:
லக்ஷ்மி யோகத்தை ஜெனன ஜாதகத்தில் பெற்ற ஒருவன் அனைத்து செல்வங்களையும் பெற்று அரசனுக்கு நிகராக விளங்குவான்.
நற்குணங்கள் உடையவராகவும்,அழகானவராகவும், புகழ் பெற்றவராகவும் இருப்பார், செல்வ நிலையில் உயர்வு தரும்.
விரத தினத்தன்று லக்ஷ்மி துதி, லக்ஷ்மி வரலாறு போன்றவற்றைச் சொல்லி தங்களை முழுமையாக வழிபாட்டில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அன்று மாலை சுமங்கலிப் பெண்களை வீட்டிற்கு அழைத்து, பூஜை முடிந்ததும் மங்கலப் பொருட்களுடன் தக்ஷிணையும் வைத்துக் கொடுத்து அனுப்ப வேண்டும்.
லக்ஷ்மி யோகம் ஒருவருக்கு இல்லாவிட்டாலும் லக்ஷ்மி பூஜை செய்துவிட்டால் அனைத்து வளங்களும் பெருகும் என்பது நிதர்சனம்.
எனவே அனைத்து வளங்களையும் வாரி வழங்கும் வரலக்ஷ்மியை வழிபட்டு நலம் பெருவோமாக.