சிம்மம் மாத பிறப்பு.. சபரிமலையில் குவிந்த பக்தர்கள்.. 21ஆம் தேதி வரை சிறப்பு வழிபாடு
சபரிமலை: ஐயப்பன் கோவிலில் சிம்மம் மலையாள புத்தாண்டு ஆவணி மாத பூஜை வழிபாடு இன்று துவங்கியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
Recommended Video
மலையாள புத்தாண்டு ஆவணி மாத பூஜை வழிபாட்டுக்கு சபரிமலை நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஷ்வரன் நம்பூதிரி நடை திறந்தார்.
நேற்று மாலை பூஜைகள் எதுவும் நடைபெறத நிலையில் இன்று புதிய தந்திரியாக கண்டரரு ராஜிவரரு பொறுப்பேற்றார். அதன்பின்பு ஆவணி மாத 1ஆம் தேதியான இன்று நிர்மால்ய தரிசனம், அஷ்டாபிஷேகம் ஆகியவை நடைபெற்றது.
இதன்பின் கோவிலின் கிழக்கு மண்டபத்தில் தந்திரி கண்டரரு ராஜிவரரு தலைமையில் கணபதி ஹோமம் நடைபெற்றது. இதன்பின்னர் லட்சார்ச்சனையும் நடத்தப்படும்.
சுவாமி தரிசனத்துக்காக கடந்த 5 ஆம் தேதி ஆன்லைனில் முன்பதிவு தொடங்கியது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்கள் அனைவருக்கும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். முன்பதிவு செய்யாமல் நேரடியாக கோயிலுக்குச் சென்ற பக்தர்களுக்கு நிலக்கல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் முன்பதிவு செய்து சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இன்று முதல் 21ஆம் தேதி வரை 5 நாட்கள் அஷ்டாபிஷேம், உதயாஸ்தமன பூஜை,களபாபிஷேகம், கலசாபிஷேகம் ஆகியவை நடைபெறும். வழக்கமாக மாதந்திர பூஜைக்காக திறக்கப்படும் அன்று மாலை பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். ஆனால், வழக்கத்திற்கு மாறாக பக்தர்களின் வசதிக்காக மாதந்திர பூஜைக்காக திறக்கப்பட்ட நாளிலேயே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். வருகிற 21ஆம் நடைபெறும் பூஜைகளுக்கு பிறகு ஹரிவராசனம் பாடப்பட்டு இரவு 10 மணிக்கு கோயில் நடை அடைக்கப்படும்.
மீண்டும் ஓண பண்டிகை பூஜைகளுக்காக செப்டம்பர் 6ஆம்தேதி கோவில் நடை திறக்கப்படும். இதற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கி உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் 8ஆம் தேதி திருவோண சிறப்பு வழிபாடு நடைபெறும் என்றும் செப்டம்பர் 10 ஆம் தேதி கோயில் நடை அடைக்கப்படும் என்றும் கோயில் நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.