கன்னி ராசிக்கு ஜாக்பாட்.. தொழில் தொடங்கினால் கட்டாயம் வெற்றி.. அள்ளிக் கொடுக்கும் சனி
சனிப்பெயர்ச்சி பலன்கள்: திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி மார்ச் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது. இந்த சனிப்பெயர்ச்சியில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் காணலாம்.
நீதிமான், கர்மக்காரகன், முடவன் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். நாம் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப பாரபட்சமின்றி சுப பலன்களையும், கெடு பலன்களையும் கொடுக்கக் கூடிய நீதிமான். சனி என்றாலே பொதுவாக எல்லோருக்கு ஓர் அச்சம் ஏற்படும். கெடு பலன்களை மட்டும் கொடுக்க கூடியவர் அல்ல சனி பகவான். நாம் செய்யும் பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப நல்ல பலன்களை அள்ளித் தரக் கூடியவர்.

2025 ஆம் ஆண்டில் சனி பகவான் வருகிற 29 ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சனி பகவான் சுமார் இரண்டரை ஆண்டுகள் இந்த நிலையில் பயணிக்க போகிறார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். கன்னி ராசியினருக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கும், சனியினால் ஏற்பட போகும் மாற்றம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு அருமையான நேரமாக இருக்கும். லக்னம், ராசியில் இருந்து கேது வெளியே போகுவதால் நல்ல நேரமாக இருக்கும். கேது லக்னத்தில் இருந்தபோது பேசுவதற்கு முன்னர் எரிச்சல் உண்டாகும். யாருமே வேண்டாம் என்ற எண்ணம், மன அழுத்தம், உடம்பில் சில மாற்றங்கள், தலைவலி, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சந்தித்திருப்பார்கள். வீட்டில் யாரோ ஒருவருக்கு மிகப்பெரிய உடல்நல பாதிப்பைச் சந்தித்திருப்பார்கள். நரகத்தில் இருந்து வெளியில் வரும் காலகட்டமாக இருக்கும்.
தங்கம் வாங்கி குவிக்கும் யோகம்
சனியின் பார்வை உங்கள் மேல் நேரடியாக விழுதால் நகை வாங்கக்கூடிய யோகம் கிடைக்கும். கை, கால்களில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். திருமணமாவதற்கான வாய்ப்பு உண்டாகும். வெளிநாட்டில் இருந்து மாப்பிள்ளை வருவதற்கான வாய்ப்பு உண்டாகும். தொழில் தொடங்குவது, புதிய வேலைவாய்ப்பு கிடைப்பது போன்ற அதிர்ஷ்டங்கள் உண்டாகும். சொந்த ஊரைவிட்டு வெளியில் சென்று புதிய தொழில் தொடங்குவது, வேலையில் சேருவது வெற்றியைத் தரும்.
குழந்தை பாக்கியம்
கணவன், மனைவி ஆரோக்கியத்தில் பிரச்சனை வருவதற்கான வாய்ப்புள்ளது. குடும்பத்தில் அந்நியர் தலையீட்டை தவிர்ப்பது நல்லது. புதிய நபர்களை குடும்ப விஷயத்தில் தலையிட விடாமல் இருப்பது நல்லது. நிறைய விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தை பாக்கியம் உண்டாகும். இரண்டாம் குழந்தைகளுக்கு முயற்சிப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குரு புதன் வீட்டில் உட்கார்ந்திருப்பதால் மிகப்பெரிய வெற்றியைத் தரும் காலகட்டமாக இருக்கும்.
மகிழ்ச்சி, நிம்மதி பெருகும்
கேது ராசியில் இருந்து வெளியில் போவதால் மன நிம்மதி உண்டாகும். பதற்றம் விலகும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள். வயிறு பகுதிகளில் அஜீரணக் கோளாறு போன்ற சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படும். நிறைய பேர் உங்களைச் சந்திக்கும் நிலை ஏற்படும். எல்லா கஷ்டங்களும் நிவர்த்தியாகக் கூடிய சூழல் உண்டாகும். அசம்பாவிதங்கள் ஏற்படாத ஒரே ராசியாக இருக்கும். எந்தவித எதிர்மறையான விஷயங்களும் நடக்காது.
எச்சரிக்கை தேவை
பங்குதாரர்களிடம் சிறிய சிறிய பிரச்சனைகள், நம்பிக்கையின்மையால் தகராறு ஏற்படும். அதில் கவனமாக இருக்க வேண்டியது நல்லது. வயிறு விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
வழிபட வேண்டிய தெய்வம்
கணவன் அல்லது மனைவியின் குலதெய்வ கோயிலுக்கு சென்று சுவாமி வழிபாடு செய்வது நல்லது. திருமணமாகாதவர்கள் மதுரை மீனாட்சியம்மனை வழிபடுவது நல்லது.
மதிப்பெண்
பணம் மற்றும் சந்தோஷத்தில் 100க்கு 90 சதவீத நன்மைகள் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications