சனியின் பிடியில் சிக்கும் ராசி?.. அஷ்டம சனி வச்சு செய்யப் போகுது.. பரிகாரங்கள் என்ன?
சனிப்பெயர்ச்சி 2025: சனி இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த இடப்பெயர்வால் சில ராசிகளுக்கு ஏழரை நாட்டுச் சனி, அஷ்டம சனி ஆகியவை உருவாகி அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அஷ்டம சனியால் பாதிப்பைச் சந்திக்கும் ராசி குறித்து தெரிந்து கொள்ளலாம்.
நீதிமான், நீதியரசன், நீதி கடவுள் என்று அழைக்கப்படுபவர் சனிபகவான். நாம் செய்யும் கர்மாவிற்கு ஏற்ப சாதகமான பலன்களையும், பாதிப்பையும் தரக்கூடியவராக சனி பகவான் இருப்பார். கர்மத்துக்கு ஏற்ப பலன்களை கொடுக்கும் சனீஸ்வர பகவானின் பெயர்ச்சி ஜோதிடத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது. மற்ற கிரகப் பெயர்ச்சிகளைவிட மிகவும் பிரதான பெயர்ச்சியாக இது பார்க்கப்படுகிறது.

சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்ல இரண்டரை ஆண்டு காலம் ஆகும். அந்த வகையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் சனி பகவான் மீன ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். சனி பகவானின் இடப்பெயர்ச்சியால் உருவாகும் ஏழரை நாட்டு சனி, அஷ்டம சனி ஆகியவை குறிப்பிட்ட சில ராசிகளுக்கு தாக்கத்தை உண்டாக்கும்.
2025 புத்தாண்டில் மார்ச் மாதத்தில் சனி பகவான் கும்ப ராசியில் இருந்து குரு பகவான் ஆட்சி செய்யும் ராசியான மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். சனி கிரகம் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாகும். ஒரு ராசியில் இருந்து மெதுவாக நகர்ந்து இரண்டரை ஆண்டு காலத்தில் இன்னொரு ராசிக்கு செல்லும். சனி பெயர்ச்சி வரும் மார்ச் மாதம் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
சனிப்பெயர்ச்சியால் சில ராசிகளுக்கு ஏழரை நாட்டு சனியில் இருந்து விடுதலை கிடைக்கும். அதே நேரத்தில் சில ராசிகளுக்கு ஏழரை நாட்டு சனி காலம் பாதிப்பை ஏற்படுத்தும். அதன்படி, சனி பகவான் மீன ராசிக்கு பெயர்ச்சியாவதால் சிம்ம ராசிக்கு அஷ்டம சனி ஏற்படுகிறது.
சிம்ம ராசிக்கு அதிபதியாக சூரிய பகவான் திகழ்கிறார். சூரியனுக்கும், சனி பகவானுக்கும் பகை உறவு இருப்பதால் சிம்ம ராசிக்கு அஷ்டம சனி அதிக அளவிலான பாதிப்புகளை உண்டாக்கப் போகிறது. கடக ராசியினர் கடந்த இரண்டரை ஆண்டுகளாக அஷ்ட சனியால் பாதிப்படைந்து வந்தனர். தற்போது அதிலிருந்து விடுதலை ஆகியுள்ளனர். சிம்ம ராசிக்கு எட்டாம் இடம் மீன ராசி என்பதால் சிம்மத்துக்கு அஷ்டமத்து சனி ஆரம்பமாகிறது.
2027 ஆம் ஆண்டு வரை சிம்ம ராசிக்கு அஷ்டம சனி பாதிப்பு இருக்கும். இந்த அஷ்டமத்து சனியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு நிதி இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. உடல்நலப் பிரச்னைகள் உருவாகும். குழந்தைகளின் கல்வி தொடர்பான பிரச்னைகள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். குடும்பத்தில் பிரச்னைகள் உருவாகும். இதுபோன்ற பல்வேறு பிரச்னைகளை சிம்ம ராசியினர் சந்திக்கப் போகின்றனர்.
பரிகாரங்கள்: அஷ்டம சனியின் பாதிப்பின் பிடியில் இருந்து சிம்ம ராசிக்காரர்கள் விடுதலையாக சில விதமான பரிகாரங்கள் உதவியாக இருக்கும். காரைக்கால் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலுக்குச் சென்று சனி பகவானை வழிபடுவது நற்பலன்களைத் தரும். தினந்தோறும் 21 முறை சனி பகவான் காயத்ரி மந்திரத்தை ஜெபிப்பது பாதிப்புகளில் இருந்து உங்களை காக்கும்.
சனி பகவான் உதவி செய்வதை விரும்புபவர். எனவே, ஏழை எளியோருக்கு தானம் செய்வது சனி பகவானின் மனதை குளிர்விக்கும். கடின உழைப்பாளிகளை விரும்புபவர் சனி பகவான். ஏழைகளுக்கு உதவுவது, கடின உழைப்பு போன்றவை உங்களை பாதிப்புகளில் இருந்து விடுதலை அடையச் செய்யும். அதேசமயம் நேர்மறையான எண்ணங்கள் மற்றும், யோகா, தியானம் செய்வதும் நல்ல பலன்களைத் தரும்.












Click it and Unblock the Notifications