சனி மஹா பிரதோஷம் 2020: சிவனோடு நந்தியை தரிசித்தால் சனி தோஷங்கள் நீங்கும்
சனிப்பிரதோஷத்தில் நந்தியை வணங்கி, வழிபட்டால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும். சனிப் பிரதோஷ நாளில் ஈசனை வழிபாடு செய்தால், ஐந்து வருடத்துக்கு ஈசனை வழிபாடு செய்த பலன் கிடைக்கும்.
சென்னை: சனிக்கிழமை பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும்; சகல செளபாக்கியங்களும் உண்டாகும்; இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிடைக்கும். சனிப்பிரதோஷம் தினம் செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் என்றெல்லாம் புராணங்கள் தெரிவிக்கின்றன. இன்று சனிப்பிரதோசம் இன்று அருகில் இருக்கும் சிவ ஆலயம் சென்று சனிபகவானை வணங்க சனி பகவானால் ஏற்பட்ட தோஷங்களும் நீங்கும்.
நமக்கு வரும் நோய்களும், துன்பங்களும் முன்ஜென்ம பாவத்தின் சம்பளமாக கிடைக்கிறது. அந்த பாவங்கள் தீர இப்பிறவியில் நிறைய நன்மைகளை செய்ய வேண்டும். ஆலய தரிசனம் செய்வதும், இறைவனுக்கு அபிஷேகத்திற்கு பொருட்களை வாங்கிக் கொடுப்பதும் நமது முன்ஜென்ம பாவங்களை போக்கும் இதன் மூலம் நோய்கள் நீங்கும். முன்ஜென்ம பாவங்கள் நீங்கவும், நோய்கள் தாக்காமல் ஆரோக்கியமாக வாழவும் சனி மகா பிரதோஷ நாளில் சிவன், நந்திக்கு அபிஷேகப்பொருட்களை வாங்கிக்கொடுக்கலாம்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதியில்லை என்பதால் வீட்டிலேயே விளக்கேற்றி இறைவனை வழிபடலாம். அருகில் இருக்கும் சிறிய ஆலயங்களில் சிவ தரிசனம் செய்யலாம். சனிபகவானால் ஏற்படுத் தோஷம் நீங்கும்.

சனி மகா பிரதோஷம் எப்போது
2020ஆம் ஆண்டில் மார்ச் மாதத்தில் தேய்பிறை, வளர்பிறை சனி மகாபிரதோஷம் வந்த நிலையில் இந்த மாதம் 18.07.2020 சனிக்கிழமை மஹா பிரதோஷமும், 02.08.2020 சனிக்கிழமை மஹா பிரதோஷம் வருகிறது. ஆண்டின் இறுதியில் 12.12.2020 அன்று சனிக்கிழமை மஹா பிரதோஷம் வருகிறது.

எத்தனை பிரதோஷம்
பிரதோஷங்கள் 5 வகைப்படும். நித்தியப் பிரதோஷம், பக்ஷப் பிரதோஷம், மாத பிரதோஷம், பிரளய பிரதோஷம், மகா பிரதோஷம் என்பதாகும். இதில் சனிக்கிழமைகளில் வந்தால், அது சனிப்பிரதோஷம் என்றும் மகா பிரதோஷம் என்றும் சொல்லப்படுகிறது.

பிரதோஷ விரத மகிமை
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை 13ஆம் நாள் திரயோதசி திதி தினங்களில் மாலை 4.30 முதல் ஆறு மணிவரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது. அன்றுதான் ஈசன் விஷம் உண்ட மயக்கம் தெளிந்து அகிலத்தை காத்ததாக புராணங்கள் கூறுகின்றன.

ஆரோக்கியம் தரும் பிரதோஷ வழிபாடு
திரயோதசி நாளில் விரதம் இருந்து சாதாரண பிரதோஷ நேரத்தில் சோம சூக்த பிரதட்சணம் செய்வதால், ஒரு வருடத்துக்கு ஈசனை வழிபாடு செய்த பலனும், சனிப் பிரதோஷ நேரத்தில் ஈசனை வழிபாடு செய்தால் 120 வருடம் சிவ ஆலயம் சென்ற பலன் கிடைக்கும். ஆரோக்கியம் அதிகமாகும் நோய்கள் நீங்கும் நீண்ட ஆயுள் கிடைக்கும்.

சனி தோஷங்களும் நீங்கும்
மற்ற பிரதோஷ நாட்களை விட மகா பிரதோஷம் எனப்படும் சனிப்பிரதோஷ நாள் மிகவும் விசேஷமானது. தேய்பிறை சனிப்பிரதோஷ நாளில் சிவ ஆலயம் சென்று நந்தி தேவரை வழிபட்டால் சனி பகவானால் ஏற்படும் சகலவிதமான துன்பங்களும் நம்மை விட்டு ஒடிப்போகும்.












Click it and Unblock the Notifications