குடும்பம், தொழில் இரண்டிலும் சிக்கல்.. மீனம் ராசிக்கான செவ்வாய் பெயர்ச்சி பலன்
சென்னை: ஆங்கில புத்தாண்டு, தை மாதம் என அடுத்தடுத்த மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் செவ்வாய் கிரக பெயர்ச்சியும் உள்ளது. இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் இந்த தொகுப்பில் செவ்வாய் கிரக பெயர்ச்சியால் மீன ராசிக்கு ஏற்படும் பலன்களை காணலாம்.
செவ்வாய் அமைப்பு சரியாக இருந்தால் ஆரோக்கியம், உத்யோக அமைப்பு நன்றாக இருக்கும். செவ்வாய் கடந்த அக்டோபர் மாதம் முதல் கடக ராசியில் நீச்ச ஸ்தானத்தில் வக்கிரமாக இருக்கிறார். அதனால் பாதிப்புகள் அதிகமாகவே இருந்திருக்கும். இந்நிலையில் செவ்வாய் வருகிற ஜனவரி 21 ஆம் தேதி பின்னோக்கி நகர்ந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். ஏப்ரல் 3 ஆம் தேதி வரை சுமார் 82 நாட்களுக்கு செவ்வாய் மிதுன ராசியில் இருக்கப் போகிறார். இது 12 ராசிகளுக்கும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளது.

மீன ராசிக்கு செவ்வாய் ஐந்தாம் இடத்தில் இருந்து நான்காம் இடத்துக்கு பெயர்ச்சி ஆகிறார். அவர் அங்கிருந்து ஏழாம் இடத்தைப் பார்க்கிறார். இதனால் கணவன் – மனைவி உறவு, தொழில் கூட்டாளிகள், உடன் பணியாற்றுவோர், உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள யாரிடமாவது சண்டை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.
அநாவசியமான மன வருத்தம் வந்து கொண்டே இருக்கும். இது உங்களின் ஆரோக்கியத்தில் தடுமாற்றத்தை ஏற்படுத்தும். குடும்பம் சார்ந்த விஷயங்களில் இடமாற்றம் ஏற்படுத்தும். செவ்வாய் நான்காம் இடத்துக்கு வருவதால் நிலம் சார்ந்த தொழில் செய்வோர், நிலம் சார்ந்த முதலீடு, ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், விவசாயிகள் ஆகியோருக்கு தடுமாற்றம் ஏற்படும்.
யாரையும் நம்பி எந்தப் பணியும் ஒப்படைக்காத சூழ்நிலை ஏற்பட்டு மன அழுத்தம் ஏற்படும். உங்கள் குடும்பத்தில் இருந்தே உங்கள் செயல்களுக்கு தொடர்ந்து ஏதாவது விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கும். வாழ்க்கை துணை, உடன்பிறப்புகள், வாழ்க்கை துணை ஆகியோரிடம் கருத்து மோதல் அதிகம் ஏற்படும்.
இந்த காலத்தில் நீங்கள் கவனமாக பேச வேண்டும். இரண்டாம் வீட்டு அதிபதி நான்காம் வீட்டில் இருந்து கொண்டு தசம ஸ்தானத்தை பார்ப்பதால் பேச்சு சம்பந்தப்பட்ட தொழிலில் உள்ள வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள், ஆசிரியர்கள் ஆகியோர் தங்களின் பதவியை நிலை நிறுத்திக் கொள்வதற்கு வாய்ப்புள்ளது.
வார்த்தைகளால் உங்களுக்கு அவப்பெயர் ஏற்படும். முக்கியமாக உங்களின் தாயாருடன் மனஸ்தாபம் ஏற்படும். கடந்த காலங்களில் இருந்த பிரச்னைகள் மீண்டும் தலை தூக்குவதற்கு வாய்ப்புள்ளது. இருப்பினும் உங்களின் உறவுகளால் அதை எதிர்கொண்டு வெற்றியும் பெறுவீர்கள். அதனால் வீண் விவாதங்களால் உங்களின் உறவுகளை பகைத்துக் கொள்ளாமல் இருப்பது அவசியம்.
இந்த காலகட்டத்தில் செவ்வாய் நான்காம் இடத்தில் சஞ்சாரம் செய்து ஏழு மற்றும் பத்தாம் இடங்களைப் பார்க்கிறார். அதனால் வேலை விஷயத்தில் இடமாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. வேலை விஷயத்தில் பதற்றம் அதிகரிக்கும். உங்களின் மேல் அதிகாரி மற்றும் உடன் பணியாற்றுவோரிடம் மனஸ்தாபம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.
சிலருக்கு வேலை இழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே பணியில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். ஏற்கனவே கூறியதை போல ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். உஷ்ணத்தால் உடலில் சூட்டு கொப்புளங்கள் ஏற்படவுள்ளது. சிறுநீரக பிரச்னை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நல்லது.
தண்ணீர் அதிகம் பருக வேண்டும். நீர் ஆகாரம் அதிகம் உட்கொள்ள வேண்டும். குடும்பம், தொழில் இரண்டிலும் பிரச்னை ஏற்பட்டு நிம்மதி இழக்கும் நிலை உருவாகும். குரு உங்களை மூன்றாம் இடத்தில் இருந்து 9,11 ஆகிய இடங்களை பார்க்கிறார். அதனால் உங்களுக்கு பெரியளவுக்கு கெளரவ குறைபாடு ஏற்பட வாய்ப்பில்லை.
மன நிம்மதிக்கு குலதெய்வ வழிபாடு, சிவன் வழிபாடு, தட்சிணா மூர்த்தி வழிபாடு, நவகிரக வழிபாடு செய்யலாம். அம்மன் கோயில்களில் தினசரி விளக்கேற்றி வழிபாடு செய்வது நல்லது. துர்கா சப்த ஸ்லோகி, லலிதா த்ரிசதி மந்திரங்களை படிப்பதால் எதிரிகள் அற்ற நிம்மதியான வாழ்க்கை அமையும்.












Click it and Unblock the Notifications