குரு பெயர்ச்சி பலன் 2023: புத்திர பாக்கியம் தரும் குரு பகவான்.. புத்திர தோஷம் யாருக்கு வரும்
புத்திரதோஷம் உள்ளவர்கள் முதியோர் காப்பகங்களிலுள்ள முதியோருக்கு உணவு, உடை வழங்கி அவர்களின் ஆசியைப் பெற்றால் புத்திர பாக்கியம் கிடைக்கும்
சென்னை: திருமணமான தம்பதியர் அனைவருக்குமே மழலைச் செல்வம் மடியில் தவழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். சிலருக்கு உடனே கடவுள் வரம் கொடுப்பார். சிலருக்கு தாமதமான புத்திரபாக்கியம் கிடைக்கும்.ஆரோக்கியமான தம்பதிகளாக இருந்தாலும் சிலருக்கு நோயாளியான பிள்ளைகள் பிறப்பார்கள். பெற்றவர்களுக்கு பிள்ளைகள் கவனிப்பு கிடைப்பது போய் கடைசி வரைக்கும் பிள்ளைகளை கவனிக்க வேண்டியிருக்கும் இதற்குக் காரணம் புத்திர தோஷம்தான். ஒருவருக்கு நல்ல பிள்ளைகள் பிறக்க புத்திரகாரகன் குரு பகவானின் அருள் வேண்டும். உங்கள் ஜாதகத்தில் குரு பகவான் எப்படி இருக்கிறார்?புத்திர தோஷம் நீங்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் எனப்படும் ஐந்தாம் இடம் பலமாக இருந்தால் புத்திரபாக்கியம் கண்டிப்பாக உண்டு. ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரனும் செவ்வாயும் பலமாக இருந்தால் நிச்சயம் சந்ததி உண்டு. ஆரோக்கியமான தம்பதிகளாக இருந்தாலும் சிலருக்கு நோயாளியான பிள்ளைகள் பிறப்பார்கள். பெற்றவர்களுக்கு பிள்ளைகள் கவனிப்பு கிடைப்பது போய் கடைசி வரைக்கும் பிள்ளைகளை கவனிக்க வேண்டியிருக்கும் இதற்குக் காரணம் புத்திர தோஷம்தான். புத்திர பாக்கிய தடைக்கும் புத்திர தோஷத்திற்கும் பரிகாரம் செய்தால் தோஷம் நீங்கி ஆரோக்கியமான பிள்ளைகள் பிறக்கும்.
குரு பகவான் புத்திர காரகன் என்பதால் அவர் பலமாக அமைந்திருப்பதும் நல்லது. அதுபோல 5ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றாலும், கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்றாலும் சிறப்பான புத்திர பாக்கியம் உண்டாகும். ஜென்ம லக்னத்திற்கு 5ம் பாவம் சிறப்பாக அமைய வேண்டும் அது போலவே சந்திரனுக்கு 5ம் பாவமும் பலமாக அமைந்து விட்டால் குழந்தை பாக்கியம் அமைய எந்தத் தடையும் இருக்காது.
அதுபோலவே 5ம் வீட்டையும், 5ம் வீட்டதிபதியையும் குரு பகவான் பார்வை செய்தால் குழந்தை செல்வம் சிறப்பாக அமைந்து மகிழ்ச்சியை உண்டாக்கும். 5ம் வீட்டில் சுப கிரகம் இருப்பதும், சுபர் பார்வை பெறுவதும் சிறப்பானது என்பது போல 5ம் அதிபதி பாவியாக இருந்தாலும் வலுப்பெற்று அமைந்து சுபர் பார்வை பெறுவது சிறப்பான புத்திர பாக்கியத்தை ஏற்படுத்தும்.
ஐந்தாம் அதிபதி 6ல் இருந்தால் எதிரிகளின் சாபத்தினாலும் அல்லது ஜாதகர் நோய்வாய்பட்டிருப்பதானாலும் புத்திர தோஷம் ஏற்படும். ஜாதகத்தில் 5ஆம் வீட்டில் ராகு இருந்தாலும் கேது இருந்தாலும் புத்திர தோஷம் ஏற்படுத்துகிறது. ஆனால் எந்த வகையிலாவது சுபர் சம்பந்தம் பெறும்பொழுது இந்த தோஷம் நிவர்த்தியாகிறது. 5க்குரியோன் நீசமானாலும் பாவிகள் சேர்க்கை பெற்றாலும் பாவிகள் பார்வை பெற்றாலும் புத்திர சோகம் உருவாகிறது. 9மிடம் நன்றாக இருந்தாலும் . 9மிடத்து அதிபதிகளுக்கு நல்ல சம்பந்தம் இருந்தாலும், 5மிடத்துக்கு சுபர் சேர்க்கை சுபர் பார்வை இருந்தாலும் புத்திர தோஷத்திலிருந்து தப்பிக்கலாம்.
குட்டிச்சுக்கிரன் குடும்பத்திற்கு ஆகாதா? 20 வருட சுக்கிர திசையில் யாருக்கு ஜாக்பாட் அடிக்கும்?
ஒவ்வொருவருடைய ஜாதகத்தில், ஐந்தாம் இடம், ஒன்பதாம் இடம், பன்னிரெண்டாம் இடத்தில், ராகுவோ, கேதுவோ அல்லது பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு அதிபதியான கிரகம் பாவிகளுடன் சேர்க்கை பெற்றோ, பாவ கிரகங்களால் பார்க்கப்பட்டாலோ பாதிப்பு ஏற்படும். அதே போல ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, அர்த்தாஷ்டமச்சனி, அஷ்டம குரு, சஞ்சரிக்கும் பொழுதும், புத்திரர்கள், புத்திரிகளால், மன சஞ்சலமும், வெறுப்பும், விரக்தியும், நஷ்டமும் இழப்பும், ஏற்படும். ஐந்தாம் வீட்டில் தோஷம் இல்லாவிட்டாலும், நிறைய பேர்களுக்கு, குழந்தைகளால் மனக்கஷ்டம் வரும். பெற்றோர்கள் கண்ணீர் விடும் சூழ்நிலை ஏற்படும் இதற்குக் காரணம் புத்திரதோஷம்.
திருமணமாகி, பல ஆண்டுகள் ஆகியும் புத்திர பாக்கியம் இல்லாமை. ஆண்வாரிசு இல்லாதது. குழந்தைகள் பிறந்தும் அவர்களால் பெற்றோர்களுக்கு சந்தோஷமோ, அல்லது சுகமோ கிடைக்காது. இளவயதில் புத்திரர்கள் நோயினால் காலா காலமாக கஷ்டப்படுவது. புத்திரர்கள் அல்லது புத்திரிகள் ஊனமுற்றவர்களாக பிறப்பது. பெற்றோர்களுக்கு சாப்பாடு கூட போடாமல் நட்டாற்றில் விட்டு விட்டு ஓடிப்போவது. பெற்றோர்களை கொடுமைப்படுத்துவது. சொத்துக்காகவும், பணத்திற்காகவும் பெற்றோர்களையே கூட சிலர் கொலை செய்வது. பெற்றோர் இருக்கும் போதோ பிள்ளைகள் விபத்து அல்லது நோயில் அகால மரணமடைவது என 9 வகையான புத்திரதோஷமாகும்.
ஒருவருடைய ஜாதகத்தில் ஐந்தாம் வீட்டில் தோஷங்கள் இருக்காது. ஆனால் அப்படிப்பட்ட தம்பதிகளுக்கு என்ன காரணத்தாலோ குழந்தைகள் பிறக்காது. அப்படியே பிறந்திருந்தாலும், மேற்சொன்ன ஒன்பது வகையான தோஷங்களில் ஏதாவது ஒன்றைப் பெற்றிருப்பார்கள். முற்பிறவியில் செய்த கர்மாவினால் அடுத்த பிறவியில் பாதிப்பு ஏற்படும். குழந்தைகள் பிறக்காது. அப்படியே பிறந்தாலும் பெற்றோர்களுக்கு நிம்மதியை தரமாட்டார்கள். சிலர் செய்த பூர்வ புண்ணியத்தினால் ஒழுக்கமான பிள்ளைகள் பிறந்து பெற்றோர்களுக்கு பெருமை தேடித்தருவார்கள்.
சந்திரனால் புத்திரதோஷம் ஏற்பட்டிருந்தால், பெண் சாபத்தாலும், தாயாரை சரியாக கவனிக்காததாலும் தோஷம் ஏற்படுகிறது. ஜாதகத்தில் செவ்வாய் பகவான் 5ஆம் இடத்தில் இருந்தால் வைத்தீஸ்வரன் கோவில் சென்று தீர்த்தமாடி அங்கு கோவிலில் ஒருமணி நேரம் தியானம் செய்ய வேண்டும். ஜாதகத்தில் சனி பகவான் 5ம் இடத்தில் இருந்தால் திருநள்ளாறு சென்று அங்கு தீர்த்தமாடி சனி பகவானை தியானித்து ஒரு மணி நேரம் கோவிலில் தியானம் செய்ய வேண்டும்.
ஜாதகத்தில் ஐந்தாம் வீட்டில் ராகு அல்லது கேது இருந்தால் திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம், அல்லது திருப்பாம்புரம் சென்று அங்குள்ள தீர்த்தத்தில் நீராடி இராகு, கேதுவை தரிசனம் வழிபட புத்திர பாக்கியம் கிடைக்கும். ராகு, கேதுவால் புத்திரதோஷம் ஏற்பட்டிருந்தால், வெள்ளியில் சிறிய நாகம் செய்து, மாரியம்மன் மற்றும் புற்றுள்ள அம்மன் கோவில்களில் சென்று பால் ஊற்றலாம்.
இப்படிப்பட்ட தோஷங்கள் விலகுவதற்கு, பரிகாரங்கள் நிறைய உண்டு. புத்திரதோஷம் உள்ளவர்கள் முதியோர் காப்பகங்களிலுள்ள முதியோருக்கு உணவு, உடை வழங்கி அவர்களின் ஆசியைப் பெற்றால் புத்திர பாக்கியம் கிடைக்கும். ஜாதகர் பிறந்த நட்சத்திரமும் அமாவாசையும் கூடும் நாளில் கணவர்- மனைவி இருவரும் இராமேஸ்வரம் கடலில் நமச்சிவாயா என்று கூறி 21 தடவை மூழ்க வேண்டும். கோவில் பிரகாரத்தில் உள்ள 21 தீர்த்தத்திலும் மூழ்கி சுவாமி தரிசனம் செய்ய வேண்டும். எந்தக்கிரகத்தினால் புத்திர தோஷம் ஏற்பட்டதோ அந்த கிரகத்தின் திசை அல்லது புக்திகாலத்தில் அந்தக் கிரகத்தின் அதிதேவதைக்கு அர்ச்சனை செய்யலாம்.
நாக தோஷம், சர்ப்பதோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் திருப்பதி அருகே உள்ள காளஹஸ்தியில் உள்ள ராகு கேது பரிகார ஸ்தலம். அங்குள்ள பாதாள விநாயகருக்கு அர்ச்சனை செய்து விளக்கேற்ற வேண்டும். ஞானபிரசுன்னாம்பிகை அம்மனுக்கு பால் இளநீர் அபிஷேகம் செய்வதன் மூலம் புத்திரதோஷம் நீங்கும். கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரம் சென்று ஞாயிறன்று ராகு காலத்தில் பால் அபிஷேகம் செய்யலாம். கேரளா மாநிலம் குருவாயூரில் எழுந்தருளி அருள்பாலிக்கும் குருவாயூரப்பனை வணங்கி துலாபாரம் தர நோய்கள் நீங்கும் ஆரோக்கியம் செழிக்கும்.