தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்?
டெல்லி: நாடு முழுவதும் வேகமாக விரிவடைந்து வரும் தேசிய விரைவுச்சாலைத் திட்டங்களில் ஒரு முக்கிய சிரமத்தைப் போக்கும் வகையில் மத்திய அரசு மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முழுமையாகக் கட்டி முடிக்கப்படாத நிலையில் பகுதி அளவில் மட்டும் மக்கள் பயன்பாட்டில் உள்ள தேசிய விரைவுச்சாலைகளுக்கான சுங்கக் கட்டணத்தை கணிசமாகக் குறைக்க மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக 'தேசிய நெடுஞ்சாலைகள் கட்டணம் (விகிதங்கள் நிர்ணயம் மற்றும் வசூல்) விதிகள், 2008'ல் மத்திய அரசு முக்கிய திருத்தங்களைச் செய்து அதிகாரப்பூர்வ அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் 2026 பிப்ரவரி 15 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வர உள்ளன.

மத்திய அமைச்சகத்தின் தகவலின்படி, ஒரு விரைவுச்சாலை தொடக்கப் புள்ளியில் இருந்து இறுதிப் புள்ளி வரை முழுமையாக முடிக்கப்படாமல் இருக்கும் பட்சத்தில், தற்போது பயன்பாட்டில் உள்ள பகுதிக்கு மட்டும் சாதாரண தேசிய நெடுஞ்சாலை கட்டண விகிதம் வசூலிக்கப்படும். இதுவரை விரைவுச்சாலைகளுக்கு விதிக்கப்பட்டு வந்த 25 சதவீதம் அதிக பிரீமியம் கட்டணம் இனி பொருந்தாது.
விரைவுச்சாலைகள் என்பவை அதிநவீன வசதிகள், கட்டுப்பாடான அணுகல் (Access Controlled) மற்றும் உயர் வேகப் பயணத்துக்காக உருவாக்கப்படுபவை. எனவேதான் அவற்றுக்கு சாதாரண நெடுஞ்சாலைகளை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் பல திட்டங்கள் கட்டுமானப் பணிகள் முழுமையடையாமல் பகுதியாகத் திறக்கப்படுவதால், வாகன ஓட்டிகள் அதிக கட்டணம் செலுத்தும் சுமையை எதிர்கொண்டனர். இந்தப் பிரச்சனைக்கு தீர்வாகவே மத்திய அரசு இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
இந்தக் கட்டணச் சலுகை, புதிய விதி அமலுக்கு வரும் தேதியிலிருந்து அதிகபட்சம் ஒரு ஆண்டு வரை அல்லது அந்த விரைவுச்சாலை முழுமையாகச் செயல்படத் தொடங்கும் நாள் வரை (எது முந்தையதோ அதுவரை) நீடிக்கும் என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
எதிர்பார்க்கப்படும் முக்கிய நன்மைகள்
இந்த அறிவிப்பின் முதன்மை நோக்கம், பகுதியாகத் திறக்கப்பட்ட விரைவுச்சாலைகளின் பயன்பாட்டைப் பொதுமக்களிடையே அதிகரிப்பதுதான். இதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலாவதாக, போக்குவரத்து நெரிசல் குறையும். பழைய தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக நெரிசலில் சிக்கும் வாகனங்கள் புதிய விரைவுச்சாலைப் பகுதிகளுக்கு திரும்பும். இதனால் பழைய சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் கணிசமாகக் குறையும்.
இரண்டாவதாக, விரைவான சரக்கு மற்றும் பயணியர் போக்குவரத்து சாத்தியமாகும். லாஜிஸ்டிக்ஸ் துறைக்கு இது பெரும் ஊக்கமாக அமையும். சரக்கு வாகனங்கள் தடங்கலின்றி விரைவாக இலக்கைச் சென்றடைய முடியும். இதனால் வணிக நடவடிக்கைகள் மேம்படும் மற்றும் பொருளாதார வளர்ச்சி பெறும்.
மூன்றாவதாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகரிக்கும். நெரிசலில் வாகனங்கள் நீண்ட நேரம் நின்று எரிபொருள் விரயம் செய்வதால் ஏற்படும் காற்று மாசுபாடு குறையும். இது பசுமை இந்தியா இலக்கை நோக்கிய முக்கிய அடியாகக் கருதப்படுகிறது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை வாகன ஓட்டிகளின் பயணச் செலவைக் குறைப்பதோடு, ஒட்டுமொத்த சாலைப் போக்குவரத்து அமைப்பையும் மேம்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக தமிழ்நாடு, சென்னை-சேலம், சென்னை-திருச்சி, மதுரை-கோயம்புத்தூர் உள்ளிட்ட முக்கிய விரைவுச்சாலைத் திட்டங்கள் பலனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அறிவிப்பு வாகன ஓட்டிகளுக்கு பெரும் நிம்மதியைத் தரும் என்று போக்குவரத்து நிபுணர்கள் வரவேற்றுள்ளனர். நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சியை வேகப்படுத்தும் அதேவேளையில், மக்களின் சிரமங்களையும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு இது என்பது குறிப்பிடத்தக்கது












Click it and Unblock the Notifications