டாப் லெவல் பாய்ச்சல்.. நாட்டிற்கே வழிகாட்டும் தமிழகம்! 1.5 லட்சம் பேருக்கு வேலை ரெடி! இதுதான் விஷயமே
சென்னை: தமிழ்நாடு அடுத்தகட்ட வளர்ச்சியை அடைய மின்சார வாகனங்கள் முக்கிய பங்கு வகிக்கப் போகிறது என்பதில் சந்தேகமே இல்லை. இந்தத் துறையில் தமிழக அரசு தற்போது எந்த நிலையில் இருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.
ஆட்டோமொபைல் துறையைப் பொறுத்தவரை மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் முதலீடு செய்யப் பெருநிறுவனங்கள் ஆர்வம் காட்டும். பல முக்கிய ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் இங்கே இருப்பதே அதற்கு ஒரு சாட்சி.

இது அப்படியே ஆட்டோமொபைல் துறையிலும் தொடர்கிறது. இன்று நாட்டில் விற்பனையாகும் மின்சார கார்களில் 40 சதவிகிதமும் மின்சார டூ வீலர்களில் 70 சதவிகிதமும் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டவையாகவே உள்ளது.
குவியும் முதலீடுகள்: மின்சார வாகனங்களைப் பொறுத்தவரை பல்வேறு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்யவே ஆர்வம் காட்டுகின்றனர். ஓலா, டிவிஎஸ், ஏத்தர் நிறுவனங்கள் கிருஷ்ணகிரியில் முதலீடு செய்துள்ளன. அதேபோல ராணிப்பேட்டையில் ஆம்பியர் (க்ரீவ்ஸ் எலக்ட்ரிக்), காஞ்சிபுரத்தில் பிஒய்டி இந்தியா, திருவள்ளூரில் ஸ்டெல்லாண்டிஸ் (பிசிஏ ஆட்டோமொபைல்ஸ்), கோவையில் ஈ-ராய்ஸ் மோட்டார்ஸ் என மாநிலத்தில் பரவலாக மின்சார வாகனங்கள் துறையில் முதலீடுகளைப் பெற்று வருகிறது.
மின்சார வாகன துறையில் வரும் 2025ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாடு சுமார் 50,000 கோடி ரூபாய் முதலீடுகளைப் பெறும் என்றும் இதன் மூலம் சுமார் 150,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்தார். இந்த முதலீடுகள் தமிழ்நாடு நிலையான வளர்ச்சி அடையவும் உதவும் என்று தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்தார்.
புரட்டிப் போடும்: மின்சார வாகனங்கள் விவகாரத்தில் மாநில அரசின் கொள்கை மற்றும் உள்ளடக்கிய, நிலையான வளர்ச்சி பற்றிய தெளிவான பார்வை ஆகியவை இதற்கு முக்கிய காரணம் என்கிறார் அமைச்சர் டிஆர்பி ராஜா. மின்சார துறையில் வரும் காலத்தில் நடக்கும் வளர்ச்சி நாம் பயணிக்கும் முறையையே முற்றிலுமாக புரட்டிப் போடக் கூடியது. இவை நாட்டின எதிர்காலத்தையே மாற்றும் வல்லமை கொண்டவை. அதில் தமிழ்நாட்டிற்கும் தவிர்க்கவே முடியாத இடம் இருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
2030ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாடு பொருளாதாரத்தை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அந்த இலக்கை அடைவதில் மின்சார வாகனங்களுக்கு முக்கிய பங்கு இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில் நடக்கும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் கூட மின்சார வாகன துறையில் இருந்து அதிக முதலீடுகள் கிடைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரே பிரச்சினை: தமிழ்நாட்டிலும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்துள்ளது. மின்சார வாகனங்களைப் பொறுத்தவரை எங்கே செல்லும் வழியில் சார்ஜ் தீர்ந்துவிடுமோ என்ற பதற்றமே பலரையும் இதில் இருந்து தள்ளி வைக்கிறது. இதை ஆங்கிலத்தில் range anxiety என்கிறார்கள். இந்த பிரச்சினையைச் சரி செய்தால் மின்சார வாகனங்கள் பயன்பாடு தமிழ்நாட்டில் அதிகரிக்கவே செய்யும்.
இதில் தமிழ்நாடு அரசின் மின்சார துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு முழுவதும் சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைத்து விரிவான சார்ஜிங் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மின்சார வாகனங்களைப் பொறுத்தவரை நாம் அதை வீடுகளிலேயே சார்ஜ் போட்டுக் கொள்ளலாம் என்ற போதிலும், வழியில் சார்ஜ் காலியானால் என்ன செய்வது என்ற அச்சம் பலருக்கும் இருக்கும்.
அந்த அச்சத்தைப் போக்க இந்த சார்ஜிங் கட்டமைப்பு பெரியளவில் உதவும், இதுபோல இருக்கும் சிறு சிறு சிக்கல்களை தமிழ்நாடு தீர்த்துவிட்டால் நிச்சயம் மின்சார வாகன துறையில் தமிழ்நாடு அரசின் ஆதிக்கம் அதிகரிக்கவே செய்யும் என்பதில் சந்தேகமே இல்லை.












Click it and Unblock the Notifications