பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. வெறும் டீசர்தான்.. மீண்டும் உயரப்போகும் விலை? காத்திருக்கும் அதிர்ச்சி
சென்னை: இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 3.08 உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு பெரிய விலை உயர்வு வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த மக்களுக்கு இது ஓரளவுக்கு நிம்மதியைத் தந்தாலும், இந்த சிறிய உயர்வுக்குப் பின்னால் ஒரு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி மறைந்திருப்பதை மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் எச்சரிக்கின்றன.
ஈரான் போர், எண்ணெய் நிறுவனங்களின் அதிகரித்து வரும் வருவாய் இழப்பு, உலக சந்தையில் உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் நிதி நெருக்கடி ஆகியவற்றை இனி மறைக்க முடியாது என்ற சூழல் உருவாகியுள்ளது.

'தினமும் ரூ. 1,000 கோடி இழப்பு' - ஹர்தீப் சிங் பூரி
டெல்லி நடைபெற்ற சி.ஐ.ஐ (CII) வருடாந்திர வர்த்தக மாநாட்டில் பேசிய மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சந்தித்து வரும் அழுத்தத்தை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.
"தற்போதைய நிதியாண்டில், எண்ணெய் நிறுவனங்களுக்கு தினசரி ரூ. 1,000 கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது. மொத்த வருவாய் இழப்பு (Under-recovery) சுமார் ரூ. 1,98,000 கோடியைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு காலாண்டுக்கான நஷ்டம் மட்டுமே கிட்டத்தட்ட ரூ. 1 லட்சம் கோடியாக உள்ளது. முன்னதாக ஒரு பேரல் கச்சா எண்ணெய் 64-65 டாலராக இருந்த நிலையில், தற்போது அது 115 டாலராக உயர்ந்துள்ளது," என்று அமைச்சர் தெரிவித்தார்.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டபோதிலும், இந்தியா கடந்த சில ஆண்டுகளாக எரிபொருள் விலையை ஓரளவுக்கு நிலையாக வைத்திருந்தது. ஆனால், அந்த நிலைத்தன்மை இப்போது பெரும் விலையைக் கொடுத்து நிலைநிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
வருவாய் இழப்பு (Under-recovery) என்றால் என்ன?
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயை அதிக விலைக்கு வாங்கி, உள்நாட்டில் பொதுமக்களின் நலன் கருதி குறைவான விலைக்கு விற்பனை செய்யும் போது எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இடைவெளிதான் 'வருவாய் இழப்பு' என்று அழைக்கப்படுகிறது. இந்தியன் ஆயில், பி.பி.சி.எல் (BPCL) மற்றும் ஹெச்.பி.சி.எல் (HPCL) போன்ற நிறுவனங்கள் இந்தச் சுமையை ஏற்றுக்கொள்வதால், பொதுமக்களுக்கு உடனடியாக விலை உயர்வு தெரிவதில்லை. ஆனால், தினசரி ரூ. 1,000 கோடி இழப்பு நீடித்தால், வரும் நாட்களில் மேலும் விலை உயர்வு தவிர்க்க முடியாததாகிவிடும்.
விலை உயர்வு குறித்துப் பேசிய அமைச்சர் பூரி, "விலை உயர்வுக்கும் தேர்தலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. சர்வதேசச் சூழல் மோசமடைந்தால் விலைத் திருத்தம் செய்ய வேண்டியிருக்கும்," என்று சூசகமாகத் தெரிவித்தார்.
படிப்படியான விலை உயர்வு?
தற்போதைய ரூ. 3.08 உயர்வு என்பது ஒரு பெரிய மாற்றத்தின் தொடக்கமாக இருக்கலாம் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். ஒரே அடியாக விலையை உயர்த்தி பணவீக்கத்தை அதிகரிக்கச் செய்வதை விட, சிறிய அளவில் விலையை உயர்த்தி சுமையை பகிர்ந்தளிக்க அரசு திட்டமிட்டிருக்கலாம்.
கோடக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டிஸ் (Kotak Institutional Equities) மதிப்பீட்டின்படி, சர்வதேசச் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை மாற்றியமைக்க வேண்டுமெனில், லிட்டருக்கு ரூ. 25 முதல் ரூ. 28 வரை உயர்த்த வேண்டியிருக்கும். ஹார்முஸ் ஜலசந்திப் பகுதியில் நிலவும் போர் பதற்றங்கள் கச்சா எண்ணெய் விநியோகத்தை பாதித்துள்ளதே இதற்கு முக்கியக் காரணம்.
அரசு ஏன் கவனமாகச் செயல்படுகிறது?
டீசல் விலை உயர்வு என்பது வெறும் எரிபொருள் விலை உயர்வு மட்டுமல்ல. அது போக்குவரத்துச் செலவை அதிகரித்து காய்கறிகள், பால், மளிகைப் பொருட்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களின் விலையை உயர்த்தும். இது ஒட்டுமொத்தப் பணவீக்கத்தையும் பாதிக்கும் என்பதால் அரசு மிகவும் கவனத்துடன் காய்களை நகர்த்தி வருகிறது.
இதைக் கருத்தில் கொண்டு பிரதமர் நரேந்திர மோடியும் நாட்டு மக்களுக்கு முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்தவும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும், எரிபொருள் தேவையைக் குறைக்க நிறுவனங்கள் வீட்டிலிருந்தே வேலை (Work from home) செய்யும் முறையை மீண்டும் பரிசீலிக்கலாம் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.
சர்வதேச கச்சா எண்ணெய் விலை குறைந்தால் மட்டுமே இந்திய எண்ணெய் நிறுவனங்களின் நிதி நிலைமை சீராகும். இல்லையெனில், பொதுமக்கள் வரும் நாட்களில் கூடுதல் விலை உயர்வுக்குத் தயாராக வேண்டியிருக்கும் என்பதுதான் கசப்பான உண்மை.












Click it and Unblock the Notifications