சென்னையின் முக்கிய காரிடார்! வருது திருவான்மியூர் டூ ஊத்தண்டி உயர்மட்டசாலை! ஏன் முக்கியம் தெரியுமா?
சென்னை:கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை நான்கு வழி உயர்மட்டச் சாலை அமைக்க தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் (TANSHA) டெண்டர்களை வெளியிட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கத்துடன் சுமார் ₹2,100 கோடி மதிப்பிலான இந்தத் திட்டம், 2025-26 மாநில பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
சுமார் 14.2 கி.மீ. நீளமுள்ள இந்த உயர்மட்டப் பாதையின் விரிவான திட்ட அறிக்கை (DPR) கிட்டத்தட்ட நிறைவடையும் நிலையில் உள்ளது. இத்திட்டம் நிறைவடைய சுமார் நான்கு ஆண்டுகள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த உயர்மட்டச் சாலை அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், திட்டத்திற்காக ECR சாலை 30 மீட்டர் அகலத்திற்கு விரிவுபடுத்தப்படுகிறது. பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, திருவான்மியூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், LB சாலை சந்திப்பு மற்றும் நீலாங்கரை போன்ற முக்கிய இடங்களில் துணை பாதைகள் அமைக்கப்படும்.
இந்த காரிடார் ஏன் முக்கியம்
கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூர் மற்றும் உத்தண்டி இடையேயான 14.6 கி.மீ., தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இங்கே இரண்டு அடுக்கு பாலம் அமைக்கப்பட உள்ளது. முதல் பாலம் ஒரு வழி பாதையாக இருக்கும். அதற்கு மேலே உள்ள பாலம் எதிர் திசையில் ஒரு வழி பாதையாக செயல்படும்.
இங்கே நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, நான்கு வழிச்சாலை அமைக்கும் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்கான பணிகள் இந்த ஆண்டில் மேற்கொள்ளப்படும்,'' என, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.
அதாவது சாலையில் திருவான்மியூர் மற்றும் உத்தண்டி இடையேயான 14.6 கி.மீ., தூரத்திற்கு இரண்டு அடுக்கு பாலம் அமைக்கப்படும். இது போக பெசன்ட் நகர், கோவளம், எண்ணூர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 5 லட்சம் ஏழை எளிய மக்களை வறுமைக் கோட்டிலிருந்து மீட்க தாயுமானவன் திட்டம் ஏற்படுத்தப்பட்டு ரூ.25,972 கோடி ஒதுக்கீடு செய்யப்படும், என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கிழக்கு கடற்கரை சாலையையும் (ECR) பழைய மகாபலிபுரம் சாலையையும் (OMR) இணைக்கும் திட்டம் விரைவில் நிறைவேறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 21 கோடியில் வெங்கடேசபுரம்-இளங்கோ நகர், மணியம்மை தெரு-வீரமணி தெரு, அறிஞர் அண்ணாசாலை-பாண்டியன் சாலை ஆகிய சாலைகளை இணைக்கும் வகையில் 3 இரும்பு பாலங்கள் கட்டப்படும் என சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. 2019 டிசம்பரில் கால்வாயின் குறுக்கே ஆறு இடங்களை குடிமை அமைப்பு இறுதி செய்து வடிவமைப்புகள் தயார் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
வேளச்சேரி சாலை
இது போக வேளச்சேரி-தாம்பரம் சாலையில் கௌரிவாக்கம் மற்றும் சேலையூரில் உள்ள இரண்டு முக்கியமான சாலைகளை விரிவுபடுத்துவதற்கு மாநில அரசு வழிவகை செய்துள்ளது. இங்கே நிலம் கையகப்படுத்துவதற்கு சுமார் ₹31 கோடியை தமிழ்நாடு அரசு வழங்கி உள்ளது. இந்த இரண்டு இடங்களிலும் உள்ள சாலை நான்கு வழிச்சாலையாக மட்டுமே உள்ளது. போக்குவரத்து நெரிசலை தடுக்க 6 வழி சாலையாக இதை அகலப்படுத்த வேண்டும். இதற்கான பணிகள் இங்கே விரைவில் தொடங்க உள்ளன.
16 கி.மீ நீளமுள்ள சாலையில் இந்த இரண்டு இடங்களைத் தவிர்த்து ஒரே சீராக ஆறு வழிச்சாலையாக உள்ளது., பள்ளிக்கரணையில் உள்ள 3 கி.மீ நீள சாலை இதேபோல் 4 வழி சாலையாக உள்ளது. இங்கே நிலம் கையகப்படுத்தும் பணி இறுதிக்கட்ட நிலையில் உள்ளது. நாராயணபுரத்தில் இருந்து தனியார் டெக்ஸ்டைல் ஷோரூம் வரையிலான சாலையில் பெரிய வளைவும் உள்ளது. நிலங்களின் வகைகள் மற்றும் சொத்துகளின் உரிமைகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அதை கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications